பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90 / அயோத்திதாசர் சிந்தனைகள்


கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஏழைகளின் பணங்களைக் கவர்ந்து தங்கள் சுயதேசங்களாகும் ரோமைநகர முதலியவிடங்களுக்கு அநுப்பிக்கொண்டு இவ்வேழைத் தமிழ் கிறிஸ்தவர்கள் கைகளில் ஓடும், அவர்கள் வாசஞ்செய்யும் சேரிகளை மூதேவியடையவுஞ் செய்துவிட்டீர்கள்.

இவ்வகையாக ஏழைத்தமிழ் கிறிஸ்தவர்களின் மீது இதக்கமின்றி பணங்களை வசூல்செய்து அநுப்பிவரும் ரோமைநகரின் தற்கால நிலையைக் கவனித்துப்பாருங்கள்.

உலகத்தில் அதிக சிறப்பும், நாகரீகமும், செல்வமும் மிகுந்திருந்த ரோமை நகர் நாளுக்குநாள் க்ஷீணமடைந்து ஈனஸ்திதிக்கு வருங் காரணம் ஏழைகளின் கஷ்டார்த்த சொத்துக்களை இதக்கமின்றி கொண்டுபோய் அத்தேசத்தில் சேர்ப்பதின் கர்ம்மமேயாம்.

அத்தகைய மதக்கடை பரப்பி பொருள் சம்பாதிக்கும் செயல்களை மகாஞானிகள் என்றும், தேவர்கள் என்றும் கொண்டாடப்பெற்ற மோசேயும், எலியாவும், கிறீஸ்துவும், மற்றுமுள்ளோரும் பார்க்கமாட்டார்கள், நம்முடையச் செயல்கள் அவர்களுக்குத் தெரியவும் மாட்டாதென்று நடத்தி வருகின்றீர்கள் போலும்.

அந்தோ! முக்காலும் உணர்ந்த மகாஞானிகள் இக்காலுமிருந்தே தங்கள் சத்தியதன்மங்களையும் அவற்றைப் போதிக்கும் போதகங்களின் செயல்களையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

இதை சத்தியம் என்றே நம்புங்கள். அசத்தியம் என்று விட்டு ஏழைக் கிறீஸ்தவர்களை வஞ்சிக்காதீர்கள்.

“நீங்கள் அளந்தபடியினாலேயே உங்களுக்கும் அளக்கப்படும் உங்களுக்குள்ள இதக்கமற்றச் செய்கைகளே உங்களுக்குஞ் செய்யப்படும்”

ஆதலின் பாதர்களென்னும் பெரியோர்களே, இவ்வேழைக் கிறீஸ்தவர்களிடம் பணம் சம்பாதிக்கும் எண்ணங்களை ஓர்புறம் அகற்றி நீங்கள் சேர்த்து வைத்துள்ளத் தொகைகளில் கல்வி சாலைகளும் கைத்தொழிற்சாலைகளும் ஏற்படுத்தி இவ்வேழை பேதை மக்களுக்கு இலவசமாகக் கற்பித்து கல்வியிலும், கைத்தொழிலிலும் முன்னுக்குக் கொண்டு வருவீர்களாயின் நீங்கள் சிறப்படைவதுமன்றி உங்கள் கத்தோலிக்கு மார்க்கமும் சிறப்பைப்பெறும்.

நீதியிலும், அன்பிலும், ஒழுக்கத்திலும் பரம்பரையாக பயந்து நடக்கும் ஏழைக்கிறீஸ்தவர்களைப் பறையர்கள் என்று தாழ்த்தி பக்கத்தில் ஒதுக்கிவிடாதீர்கள். கிறிஸ்துவின் மார்க்கத்தை இத்தேசத்துள் எங்கும் ஆதியில் பரவச்செய்த பரம்பரையோர் இவர்கள் என்று அன்பு பாராட்டுங்கள், அன்பு பாராட்டுங்கள்.

இதுவரையில் கத்தோலிக்குமார்க்கப் பாதர்களின் விண்ணப்பத்தை முடித்துவிட்டோம்.

இனிப் புரோடிஸ்டென்ட் பாதர்களுக்கு எமது விண்ணப்பத்தை விடுகின்றோம்.

பூவுலகெங்கும் பிரபலமிகுத்தப் புரோட்டிஸ்டென்டென்னும் மார்க்க பாதர்களே, எமது விண்ணப்பத்தின்மீது சற்று கண்ணோக்கம் வையுங்கள்.

- 2:30; சனவரி 6, 1909 -

கத்தோலிக்கு மார்க்கத்தோர்களுக்குப் பின்பு இத்தென்னிந்தியாவில் குடியேறி கிறீஸ்துவின் மார்க்கத்தைப் பரவச்செய்வதற்காய் சகல மக்களுக்கும் உபகாரமாகும் கல்விசாலைகளை விருத்தி செய்தீர்கள்.

அக்கால் சாதித்தலைவர்களின் கொடுஞ்செயலால் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்திருந்த திராவிட பௌத்தர்கள் யாவரும் தங்கள் பிள்ளைகளை ஆனந்தமாகக் கல்விசாலைகளுக்கு அனுப்பி கற்பிப்பதுடன் கிறீஸ்து மதத்தையும் தழுவி பி.ஏ., எம்.ஏ. முதலிய கெளரதாபட்டங்களையும் பெற்று பாதிரிகளாகவும், உபதேசிகளாகவும், உபாத்திமார்களாகவும் உத்தியோகங்களில் அமர்ந்து பட்டினங்களிலும், கிராமங்களிலும் கிறிஸ்துவின் போதகங்களையும்