பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 91


போதித்துவருங்கால் சாதித் தலைவர்களின் போதனைகளுக்குட்பட்ட பராய மதஸ்தர்களும், பராய சாதியோர்களும் வெகுண்டு கற்களாலும், சாணங்களாலும், தடிகளாலும் அடித்துத் துரத்தப் பல பாடுகளும் பட்டு கிறீஸ்துவின் மார்க்கத்தைப் பரவச் செய்துவந்தார்கள்.

சாதித்தலைவர்களோ நீதிநெறியமைந்த பௌத்ததன்மத்தை பாழ்படுத்தி பௌத்தர்கள் யாவரையும் பறையரென்றும் தாழ்த்தி தலையெடுக்கவிடாமல் செய்துவந்தவர்களாதலின் அவர்களின் முன்பு கிறீஸ்துமார்க்கத்தைத் தழுவி கல்வியிலும், நாகரீகத்திலும் மிகுத்து பொய்ச்சாதி, பொய்மதங்களைத் தழுவியுள்ள அஞ்ஞான செயல்களைக் கண்டித்து வந்ததினால் இன்னும் அதிக பொறாமெய் கொண்டு மேலுமேலும் துன்பங்களைச் செய்துக்கொண்டு வந்தார்கள்.

அத்தகையத் துன்பங்கள் யாவையும் உங்களுடைய அன்பின் மிகுத்த ஆதரவினாலும், பிரிட்டிஷ் ராஜாங்க செங்கோலின் சார்பினாலும் சகித்து நாளுக்குநாள் தாங்களும், முன்னேறிக்கொண்டு கிறீஸ்து மார்க்கத்தையும் பரவச் செய்துவந்தார்கள்.

இவர்கள் விருத்தியை நாளுக்குநாள் கண்ணுற்று வந்த சாதித் தலைவர்களுக்கு மனஞ்சகியாது இவர்களை முன்போல் கெடுப்பதற்கு சாத்தியப்படாது இராஜாங்கத்தோரும் கிறிஸ்தவர்களாய் இருக்கின்றார்கள். ஆதலின் நாமும் கிறீஸ்து மதத்தைத் தழுவி அவர்கள் கூட்டத்தில் பிரவேசித்து சாதிக் கிறீஸ்தவர்கள் என்று எப்போதும்போல் நம்மை உயர்த்திக் கொண்டு முன் சேர்ந்த கிறீஸ்தவர்களை பறைக் கிறீஸ்தவர்கள் என்று தாழ்த்திப் பழையபடி பதிகுலையச் செய்ய ஆரம்பித்துக் கொண்டார்கள்.

அவர்களுடைய - வஞ்சகக் கூத்துகளை அறியா தாங்களும் பெரியசாதிகளெல்லாம் கிறிஸ்தவர்களாகி விடுகின்றார்கள் என்னும் பெருஞ் சந்தோஷத்தாலும், பெரியசாதியோரைக் கிறீஸ்தவர்களாக்கி விட்டார்கள் என்னும் பெரும்பேர் கிடைக்கும் என்று எண்ணி நூதனக் கிறீஸ்தவர்களின் மீது அன்புவைத்து அவர்களுக்கே பாதிரி உத்தியோகங்களையும், உபதேசிகள் உத்தியோகங்களையும், உபாத்திமார் உத்தியோகங்களையுங் கொடுத்து விருத்தி செய்துக் கொண்டு இக்கிறீஸ்து மதத்தைப் பரவச் செய்வதற்காய் கல்லடிகளும் சாணத்தினடிகளும், தடிகளினடிகளும் பட்டுப் பரவச்செய்தப் பழயக் கிறீஸ்தவர்களை பறைக் கிறீஸ்தவர்கள் என்று சொல்லுதற்காய் தாங்களும் தாழ்ந்த எண்ணத்தை விருத்தி செய்துக் கொண்டு ஏழைத் தமிழ் கிறிஸ்தவர்களை நடுத்தெருவில் விட்டு நங்குசெய்யவைத்தீர்கள்.

- 2:31; சனவரி 13, 1909 -

கிறீஸ்தவர்களென்னும் பெயரும் வேண்டும், வேஷபிராமணக் கட்டுக்குள் அடங்கிய சாதியும் வேண்டும் என்னும் ஆயிரம் கிறீஸ்தவர்கள் உங்கள் சங்கத்தில் கணக்காகச் சேர்ந்தபோதிலும் சாதிபேதமில்லாமல் பொருளாசையற்று புண்ணியபலனைக் கருதும் ஓர் கிறீஸ்தவன் உங்கள் சங்கத்திலிருப்பானாயின் கிறீஸ்துவின் மகத்துவமும் அவரது போதகமும் எங்கும் பரவி சகலரும் நித்தியசீவனின் வழியைக் கண்டடைவார்கள்.

அத்தகைய நித்தியசீவனை அடையும் வழியைக் கண்டவுடன் விசுவாசத்தில் நிலைத்து ஞானத்தானத்தையும் பெறுவார்கள்.

ஞானத்தானம் பெற்றவுடன் பாபத்தின் சம்பளமாகும் மரணத்தை ஜெயித்து உலகப்பற்றுக்கள் யாவையும் விடுத்து சகலருக்கும் உபகாரியாக விளங்குவார்கள்.

அவ்வகை உபகாரமே கிறீஸ்துவின் நாமத்தையும், அவரது போதகங்களையும் பரிமளிக்கச் செய்யும்.

அங்ஙனமின்றி சாதியாசாரமும் பெருக்கவேண்டும். உத்தியோகங்களும் உயரவேண்டும். பொருளாசையும் வளரவேண்டும், கிறீஸ்தவர்கள் என்னும் கூட்டமும் அதிகரிக்க வேண்டும் என்பதாயின் கிறிஸ்துவின் நீதிபோதங்கள் ஒருக்காலும் பரிமளிக்கமாட்டாது. அவரது போதபரிமளம் எக்காலத்தில் மறைகின்றதோ அப்போதே கிறீஸ்துவின் மார்க்கமும் மறைவதற்கு வழியாகும்.