பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 95


திரிக்குறள்

அந்தணர் நூற்கும் அறத்திற்கு மாதியாய் / நின்றது மன்னவன் கோல்.

ஆதலின் நெட்டால் ராஜாங்கத்துள் குடியேறியுள்ள இந்துக்களும் தங்களது ஆளுகைக்குள் அடங்கி வாழவேண்டும் என்னும் எண்ணத்தினால் இந்துக்கள் ஒவ்வொருவரும் நெட்டால் இராஜாங்க அதிகாரப் புத்தகத்தில் பெருவிரல் குறிபதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் பிறப்பித்தார்கள்.

அவர்கள் சட்டத்திற்கடங்கி நாளுக்குநாள் தங்கள் குறைகளை விளக்கி சீர்படுத்திக்கொள்ள வேண்டியவர்கள் அவ்விடத்தில் வாழலாம். அவர்கள் சட்டத்திற்கு அடங்கிய வாழ்க்கையை விரும்பாதவர்கள் அவரவர்கள் சுயதேசம் போய் சேர்ந்துவிடுவதே நியாயமாகும்.

அங்ஙனமின்றி ஈட்டிமுனையென்று அறிந்தும் காலாலுதைத்து காயமுண்டாகி சீழ்கொண்டு குத்தலுண்டாய தென்று கூச்சலிடுவதுபோல் ஓர் இராஜாங்கத்தோர் இயற்றியுள்ள சட்டமாகும், பெருவிரல் குறிப்பை பதிவுசெய்யாது பலாத்காரமாய் எதிர்த்து நிற்பது என்னமதியாகும்.

இராஜநீதிக்கு ஒடுங்கி தங்களுக்கு வேண்டிய சுகங்களை அவ்விராஜாங்கத்தோரைக் கொண்டே சீர்திருத்திக் கொள்ளுவது சுகம்பெற வேண்டியவர்களுக்கு அழகாகும்.

ஈட்டியின் முனையை உதைத்ததுபோல் இராஜாங்கத்தை எதிர்த்துள்ளக் குடிகளின் கஷ்டத்திற்காய் காங்கிரஸ் பிரிதிநிதிகள் பரிந்து பேசுவது என்ன கருணையோ விளங்கவில்லை.

கண்ணுக்கெட்டாத நெட்டால் தேசத்தில் கவலைப்படுங் குடிகளுக்காகப் பரிந்து பேசுங் கனவான்கள் தங்கள் கண்களால் காணும் குடிகளின் கஷ்டங்களைப் பரிந்தெடுத்துப் பேசியிருப்பார்களாயின் இவர்களையே கருணைமிகுத்த கனவான்கள் என்று கூறத்தகும்.

அதாவது அறுபதுலட்சத்திற்கு மேற்பட்ட இத்தேசப் பூர்வத் தமிழ்குடிகளை தங்களுக்குத் தாங்களே பிராமணரென்று சொல்லித் திரியும் கூட்டத்தார், பறையர்கள் என்று தாழ்த்தி கிராமங்களில் சுத்தஜலங்களை மொண்டு குடிக்கவிடாமலும் அம்மட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் வெளுக்கவிடாமலும் தடுத்து அவர்கள் எங்கு சீவிக்கப்போனாலும் பலவகைத் தடைகளையும், இடுக்கங்களையும் உண்டுசெய்து பாழாக்கிவரும் பரிதாபத்தைப் பத்திரிகைகளின் மூலமாகவும், கண்களாலும் கண்டுவரும் கனவான்கள் இக்காங்கிரஸ் கூட்டத்தில் அவர்கள் குறைகளை விளக்கி ஈடேற்றினார்களில்லை.

இவ்வேழைக்குடிகளுக்குள்ள கஷ்டங்களைக் கண்ணாரக்கண்டும் கவலைப்படாதவர்கள், காணாத நெட்டால் இந்தியர்களின் மீது கவலைப்படுவது என்ன காருண்யம் என்று அவர்களே தெரிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

இந்தியாவில் நூதனமாகக் குடியேறியுள்ளக் குடிகள் புராதனக் குடிகளைப் பாழ்படுத்துவது பரிதாபமன்று. இராஜாங்க சட்டத்தை மீருகிறவர்களை தண்டிப்பதுமட்டிலும் பரிதாபம் போலும். இப்பரிதாபம் மறக்கருணையோ, அறக்கருணையோ என்பதைக் காங்கிரஸ் பிரதிநிதிகளே கண்டறிந்து இக் கூட்டத்திற்கு நாஷனல் காங்கிரசென்னும் பெயர் தகுமா என்பதை அதன் செயலினால் சீர்திருத்தல் வேண்டும். அதாவது பலசாதியோருக்குள்ள இடுக்கங்களை நீக்கி ஆதரிக்கும் கூட்டத்திற்கே நாஷனல் காங்கிரசென்று கூறலாம். அங்ஙனம் இல்லாதக் கூட்டம் ஒருக்காலும் நாஷனல் காங்கிரஸ் ஆகாது என்பது திண்ணம்.

சிலர் தங்களுக்குத்தாங்களே ஆறுதல் சொல்லிக்கொள்ளுவதும் உண்டு. அதாவது, காங்கிரஸ் கூட்டமானது இராஜாங்க சங்கதிகளைப் பேசக்கூடியது. ஆதலின் அவ்விடத்தில் சாதிசம்பந்த சங்கதிப் பேசலாகாது. உள்சீர்திருத்த சங்கமாகிய மகாஜனசபையில் அவற்றைப் பேசக்கூடும் என்பார்கள்.