பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஆதலின் தாழ்ந்தசாதியோரை சீர்திருத்த ஏற்பட்ட கனவான்கள் ஒவ்வொருவரும் இவற்றை சீர்தூக்கி தாழ்ந்த வகுப்போர்கள் யாவரையுந் தருவித்து சாதிபேதம் வைத்துக்கொண்டு வாழ்பவர்கள் யாவர், சாதிபேதமில்லாமல் வாழ்பவர்கள் யாவரென்று தேறவிசாரித்து சாதிபேதம் உண்டென்போர் யாவரையும் சாதித் தலைவர்கள் கூட்டத்தில் சேர்த்துவிட்டு சாதியாசாரங்கெடாது சீர்திருத்திவிடுங்கள்.

சாதிபேதமில்லை என்னும் கூட்டத்தாருக்கு நீங்கள் யாதோர் உபகாரமும் செய்யவேண்டாம் அவர்களைத் தலையெடுக்கவிடாமல் செய்துவரும் மாளாயிடுக்கங்களை மட்டிலும் செய்யாமல் அன்பு பாராட்டுவீர்களாயின் அதுவே தாங்கள் செய்யும் பேருபகாரமாகும்.

உங்களுக்குள் நிறைவேறிவரும் ஒரு தருமத்தைக் கவனித்துப்பாருங்கள், மகா கனந்தங்கிய பச்சையப்பன் என்பவரின் பொது சொத்துக்கு மேற்பார்வை உடையோராய் நியமிக்கப் பெற்ற சாதியாசாரமுடையோர் அதே பச்சையப்பன் காலேஜில் கைத்தொழிற்சாலையை ஏற்படுத்தி சாதியாசாரமுள்ளவர்களை மட்டிலும் அச்சாலையில் சேர்க்கப்படும், சாதியாசாரமில்லாதவர்களை அவற்றுள் சேர்ப்பதில்லை என்று பயிரங்க விளம்பரம் வெளியிட்டிருக்கின்றார்கள்.

இத்தகையச் செய்கைகளினால் சாதியாசாரம் இல்லாதவர்களின் மீது சாதியாசாரமுள்ளவர்கள் யாவரும் நேர் விரோதித்து நிற்பதால் கருணைதங்கிய இரண்டோரன்பர்கள் இந்நோக்கத்தைக் கொள்ளுவது இமயமலையை வெட்டி வழிவுண்டாக்குவதுபோலாம்.

- 2:30; சனவரி 5, 1909 -


37. தாழ்ந்த சாதியோர்களை ஈடேற்றுகின்றோம் என்று இன்னுந் தலையெடுக்கவிடாமற் செய்யும் ஈதோர் தந்திரம் போலும்

அதாவது நம்மையாளும் ஏழாவது எட்வர்ட் சக்கிரவர்த்தியாரவர்கள் எழியக்குடிகளின் மீது இதக்கம் வைத்து சகலக்குடிகளையும் சமரசமாக ஆதரிக்கவேண்டும் என்னும் எண்ணத்தை சகலரும் அறிய வெளியிட்டுள்ளபடியால் ஏதோ கருணைதங்கிய ஆங்கிலேயர்கள் தோன்றி எழியக் குடிகளை ஈடேற்ற ஏற்பட்டு வருவார்களாயின் நம்மால் தாழ்த்தி வைக்கப்பட்டுள்ளவர்கள் உயர்த்தப்பட்டு விடுவார்களே ஆதலின்,

நாமே அவர்களை ஈடேற்றுகிறோமென்று பத்திரிகைகளின் வாயலாகவும், கூட்டங்களின் மூலமாகவும் கூச்சலிட்டு வருவோமானால் இந்துக்களே தோன்றி எழியக்குடிகளை ஈடேற்றப் போகின்றார்கள். நாம் ஏன் அவர்களைப்பற்றி முனையவேண்டுமென்று அடங்கி விடுவார்கள்.

நாமும் இதே கூச்சலிட்டுக் கொண்டு அடங்கிவிடலாம் என்னும் ஆலோசனையின் பேரில் தோன்றியுள்ளார்கள் போல் காண்கின்றது.

எவ்வகையதென்னில் தற்காலம் சிலர் தோன்றி ஏழைகளுக்கு அன்னதானகூடம் ஏற்படுத்தியுள்ளோமென்று விளம்பரப்படுத்தி பணங்களை வசூல்செய்து தங்களை அடுத்த சாதியுள்ள ஏழைகளுக்கு மட்டிலும் அன்னதானம் அளித்துவருகின்றார்கள்.

அதுபோலவே இந்த ஏழைகளை ஈடேற்றும் சங்கத்தோரும் தங்கள் கூட்டத்தில் பணஞ் சேர்ந்தவுடன் சாதியுள்ள ஏழைகளை சீர்திருத்திவிட்டு சாதியில்லா ஏழைகளை ஏதுவிசாரணையின்றி விட்டுவிடவேண்டியதேயாகும்.

ஆதலின் ஏழைகளை யீடேற்ற வெளிவந்த கனவான்கள், சாதி பேதமுள்ள ஏழைகளையும் சாதிபேதமில்லா ஏழைகளையும் ஈடேற்றுவோம் என்பது வீண்முயற்சியேயாகும்.

அத்தகைய ஈடேற்றக் கூட்டம் யதார்த்தமாக ஏற்படுத்த வேண்டுமாயின் அக்கூட்ட அங்கங்கள் சாதிபேதமுள்ளவர்கள் ஐந்துபேர்களிருப்பார்களாயின், சாதிபேதமில்லாதவர்கள் பத்துபேரிருந்து நடத்துவார்களாயின் சகல ஏழைகளும் ஈடேறி முன்னுக்கு வருவார்கள்.