பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவனை கடிந்தே துறத்தி விடுவார்கள். அவர்களை ஒத்த பிராமணர்களுக்கே தானஞ்செய்துக் கொள்வது அவர்களுடைய சுவாபம்.

நாளது வரையில் அவர்கள் செய்துவரும் தன்ம கன்மாதிகளில் தங்கடங்கள் சுயசாதிகளுக்கே தர்மஞ்செய்துக் கொள்ளுவார்களன்றி ஏனய சாதியோர்களுக்கும் ஈவதே கிடையாது.

இத்தகைய சுயசாதியபிமான பிராமண வகுப்போரை இராஜாங்க ஆலோசனை சங்கத்தோருள் ஒருவராக சேர்ப்பதானால் சுயசாதியோரபிமானத்தையும் அவர்கள் சுகத்தையுங்கோறுவாரா, அன்றேல் ஏனைய சாதியோரை ஈடேற்ற முயலுவாரா என்பது சொல்லாமலே விளங்கும்.

பெரும்பாலும் எக்சிகூட்டிவ் மெம்பரில் நியமிக்கப்படுவோர் இந்து தேசத்தில் அரசாட்சி செய்து வரும் அரசருக்குள் ஒருவரையே தெரிந்தெடுப்பது பிரிட்டிஷ் ராஜாங்கத்திற்கு மிக்க கனமாக விளங்கும்.

அவ்வரசனும் சாதிபேதம் சமயபேதங்களை ஒழித்தவராக இருப்பதுமன்றி குடிகளின் கேடுபாடுகளையும் படைகளின் பாகுபாடுகளையும் அமைச்சர்களின் ஆலோசனைகளையும் நன்காராய்ந்து ஏழைக்குடிகளை ஈடேற்றுங் குணமுடையவராயிருத்தல் வேண்டும்.

இத்தகைய பொது நலப்பிரிய அரசரிராவிடின் எக்சிகூட்டிவ் மெம்பரென்னும் வார்த்தையை எடுக்காமலே விட்டொழிவது அழகாகும்.

- 2:40; மார்ச் 17, 1909 -


50. கிராம உத்தியோகஸ்தர்களுக்கேனும் அவர்களைச் சார்ந்த குடும்பத்தோர்களுக்கேனும் அந்த கிராமங்களில் சொந்த பூமிகள் இருக்கப்படாது

இத்தேசத்தில் வாசஞ்செய்யும் பற்பல சாதியோரில் அவர்களுக்குள்ள குணாகுணங்களும் செயல்களும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோருக்குத் தெரிந்த விஷயமே.

அதாவது - சிலசாதியோர் தங்கள் கையிருப்பில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாய் இருந்தபோதிலும் பத்துகாதவழியில் ஒரு அணா தானம் கொடுப்பதாயிருந்தால் இடுப்பின் துணியை இறுகக் கட்டிக் கொண்டோடி இரப்பது வழக்கமாகும்.

அத்தகைய சாதியோருக்கு அந்தஸ்தான உத்தியோகங்களைக் கொடுத்து அதிக சம்பளங்களை அளித்தபோதினும் அவர்களுக்குள்ள பேராசை ஒழியாமல் ஏழைக்குடிகளை இதக்கமின்றி வாதித்து இன்னும் பணஞ்சேர்க்க முயலுகின்றார்கள். எவ்வகையிலென்னில்:

இதக்கமற்றவர்களும் பேராசையுள்ள சாதியோருக்கு கிராமங்களில் உத்தியோகமும் கொடுத்து அக்கிராமத்தில் சொந்தபூமியும் இருக்குமாயின் பரம்பரையாய் அக்கிராமத்தில் வாசஞ் செய்யும் பறையனென்னும் ஏழைக்குடியானவன் பதிகுலைந்து பாழடைய வேண்டியதேயாம்.

அதாவது ஓர் கிராம உத்தியோகஸ்தருக்கு ஒருகாணி பூமி அக்கிராமத்தில் இருந்து விடுமாயின் அவருக்கு ஏறு வேண்டியதில்லை, ஆளும் வேண்டியதில்லை, விதைமுதலுக்கு பணமும் வேண்டியதில்லை.

மற்றும் கிராம உத்தியோகஸ்தர்களின் பூமி எவ்வகையில் விளையுமென்பீரேல், ஒரு குடியானவன் ஏறுழுதுவிட வேண்டியது. ஒருகுடியானவன் விதை விதைத்து விடவேண்டியது. ஒரு குடியானவன் களை பிடுங்கி நாத்துநட்டு நீர்பாய்த்து பயிரை வளர்த்துவிடவேண்டியது. ஒரு குடியானவன் அறுப்பறுத்து அடித்து தூற்றி மணிகுவித்து கிராமவுத்தியோகஸ்தர் வீட்டில் சேர்த்து விடவேண்டியது. கிராம உத்தியோகஸ்தர் ஆண்டே அம்மாள் அடுக்கல் பானையையும், நெல்லுறை பண்டியை நிறப்பிக்கொள்ளுவது தான் அவர்களது கஷ்டம்.