பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 123


தேசத்தில் மிலைச்சர், மிலேச்சர், ஆரியரென்னும் ஓர் கூட்டத்தார் வந்து குடியேறி மண்ணைத்துளைத்து அவைகளில் குடியிருந்து கொண்டு இத்தேசத்தோர் உதவியால் சீவித்துவந்தார்கள். அவர்கள் நிறமோ ஓர்வகை வெண்மையுடையவர்களும், அதிக உயரமுள்ளவர்களும், சீலமில்லாதவர்களும், நாணமில்லாதவர்களும், கொடுந்தொழில் உள்ளவர்களுமாக விளங்கி வந்தார்கள்.

சூளாமணி மக்கள்கதி

தீவினுள் வாழுங் குமானிடர் தேசத்து / மேவியுறைவு மிலைச்சரெனப்பெய
ராவரவருண் மிலைச்ச ரவரையும் / வீவருத் தாரோய் விலங்கினுள்வைப்பாம்.
வாலுநெடியவர் வளைந்த வெயிற்றினர் / காலுமொரோவொன் துடையர் கலையிலர்
நாலுஞ் செவியர் நவை செய் மருப்பினர் / சீலமடைவிலர் தீவினுள் வாழ்வார். மக்கட்பிறப்பினு மாத்திரமல்லது / மிக்கவெளிற்று விலங்குகளேயவர்
நக்கவுருவினர் நாணாவொழுக்கினர் / தொக்கனர் மண்ணே துளைத்துண்டுவாழ்வார். பூவும்பழனு நுகர்ந்துபொழின்மர / மேவியுரையு மிலைச்சர் மிகபல
ரோவலர் வாழ்வ தொருபளிதோமென் / றேவல் சிலைமன்ன வெண்ணி யுணர்நீ. தேசமிலைச்சரிற் சேர்வுடையாரவர் / மாசின் மனிதர் வடிவின ராயினுங்
கூசின்மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர் / நீச ரவரை நீறினிழிப்பாம்.

- 2:26: டிசம்பர் 9, 1908 -

மிலைச்சரென்றும், மிலேச்சரென்றும் வழங்கி வந்தக் கூட்டத்தார் சீவனோபாயத்திற்காய் சில மித்திரபேதங்களைச் செய்து கொண்டு சீவகனிடஞ் சென்றபோது இவர்களது கொடுஞ் செயற்களை அறிந்த சீவகன் சீறிச் சினந்து துறத்தியிருக்கின்றான்.

சீவகசிந்தாமணி

செங்கட் புன்மயிர்த்தோல் திரைச்செம்முகஷ / வெங்கணோக்கிற்குப் பாக மிலேச்சனை செங்கட் விழியாற் றெறித்தான்கையா / ளங்கட்போது பிசைந்தடு கூற்றனான்.

இவ்வகையாய் மிலேச்சரென்றும், மிலைச்சரென்றும், ஆரியரென்றும் வழங்கிவந்த கூட்டத்தார் நாளுக்குநாள் வடயிந்தியா, தென்னிந்தியா எங்கும் பரவிவந்த காலத்தில் பௌத்த சங்கத்தோர் வாழும் இந்திரவியாரங்களில் தங்கியிருந்த சமணமுனிவர்கள் இயற்றியுள்ள கலைநூற்களில் மக்கட்பெயர்களுடன் இவர்கள் பெயரையும் கண்டிருக்கின்றார்கள்.

முன்கலை திவாகரம்

மிலைச்சர் பெயர் - மிலேச்ச ராரியர்.

பின்கலை நிகண்டு

மிலைச்சர்பே ராரியற்கா மிலேச்சரென்று ரைக்கலாமே.

ஆரியரென்றால் சிறந்தவர்கள் என்றும் மேன் மக்கள் என்றும், அந்தணர்கள் என்றும், பௌத்த சாஸ்திரங்களில் கூறியிருக்க இத்தமிழ் நூற்களில் ஆரியரென்னும் மொழிக்கு மிலேச்சர் என்னும் பொருளை எவ்வகையால் கூறக்கூடும் என்பாரும் உண்டு.

பிராக்கிருத பாஷையாகும் பாலியினின்று வடமொழியுந் தென்மொழியுந் தோன்றியுள்ளதினால் பெரும்பாலும் பௌத்தன்ம சாஸ்திரங்களில் பாலிமொழிகளையே தழுவிவருதலுண்டு.

அவற்றுள் அரிய அஷ்டங்க மார்க்கமென்றும், அரிய அரசர்கள் என்றும், அரிய அந்தணர்கள் என்றும், அரிய தன்மமென்றும் கூறியுள்ளார்களன்றி ஆரிய அஷ்டாங்க மார்க்கமென்றும், ஆரிய அரசர்கள் என்றும், ஆரிய அந்தணர்கள் என்றும், ஆரியதன்மமென்றும் கூறினார்களில்லை.

அதனினும் பாலிபாஷையில் தேவவென்னும் இத்திசித்தும், பிரமமென்னும் அதிசேனாசித்தும், அரியவென்னும் அநுசாசனிசித்தும் கூறியுள்ளவற்றுள் இம்மூன்றுக்கும் பொதுப் பெயர் பத்தி அரியாஸ் என்று மூன்றுவகை சிறந்த சித்துக்களுக்கும் பொதுப்பெயர் அரியரென்றே கூறியிருக்கின்றார்கள். இவற்றை தீக்கநிக்காயாவின் உட்பிரிவு சங்கித்தசுத்தாவிற் காணலாம்.

ஆதலின் பௌத்த நூற்கள் யாவற்றிலும் அரிய என்னும் மொழியை வழங்கிவந்திருக்கின்றார்களன்றி ஆரியவென்னும் மொழி வழங்கியதில்லை.