பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130 / அயோத்திதாசர் சிந்தனைகள்


கூறி வேஷபிராமணர்கள் தங்களை உயர்ந்தசாதியென்றும் திராவிட பௌத்தர்களை தாழ்ந்தசாதி என்றும் வகுத்து வழங்கிவந்த காலத்தில் மேன்மக்கள் மிலைச்சர்களைக் கண்டித்தெழுதிய பாடல்கள்.

சிவவாக்கியர்

சாதியாவதேதடா சலந்திரண்ட நீரலோ
பூதிவாசமொன்றலோ பூதமைந்து மொன்றலோ
வேதுவேதகீதமும் ஊணுரக்க மொன்றலோ
சாதியாவதென்பதேது சாவுவாழ்வு திண்ணமே.
பறைச்சியாவதேதடா பாணத்தியாவதேதடா
யிறைச்சிதோலெலும்பிலே யிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சி போகம் வேறதோ பாணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பாணத்தியும் பரிந்து பாருமும் முளே

அவிரோதவுந்தியார்

அறுவகை சமயத்தரையு மெய்ப்பொருளு / மறுப்பத்து நாலுதற்கலையு
மறுவறப்பயின்று மாசறத்திகழு / மதிஞரா மவர்களே யெனினுங்
குறைவறத் தன்னைக்கொடுத்திடுங் குரவன் / குறைகழல் புனைந்தவரன்றேல்
பறையர் மற்றவரை பறையரே யெனினும் / அருளுடையவர் பரம்பரரே.

திருவாசகம்

வேதமொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர் / நாதப்பறையனர் என்னே என்னும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கு / நாதரின் னாதனா ரன்னே என்னும்.

- 2:31; சனவரி 13, 1909 -

சாதித்தலைவர்கள் பறையரென்னும் மொழியை பரவச்செய்த விவரம்

மிலைச்சர்கள் தங்களை உயர்ந்தசாதி பிராமணர்கள் என்றும், திராவிட பௌத்தர்களைத் தாழ்ந்தசாதி பறையர்கள் என்றும் கூறிவந்தவற்றுள் தாழ்ந்தசாதிகள் என்னும் மொழியையும், பறையரென்னும் மொழியையுந் திராவிட பௌத்தர்கள் கண்டித்துவந்தபடியால் இப்பறையன் என்னும் மொழியை எவ்விதத்தும் பரவச்செய்து இவர்களைப் பாழ்படுத்திவிட்டால்தான் புத்தமார்க்கமும் நசிந்துபோகும், நம்முடைய பிராமண வேஷங்களும் நிலைத்து சுகமடையலாம் என்று எண்ணி மிலைச்ச வேஷப்பிராமணர்களும், இத்தேச வேஷ பிராமணர்களும் ஒன்றுகூடிக் கொண்டு தங்களைச்சார்ந்த குடிகளுக்கும், சிற்றரசர்களுக்கும், கறுப்பாக இருக்கும் பருந்தைப் பறைப் பருந்தென்றும், வெண்மெயாயிருக்கும் பருந்தைப் பாப்பாரப் பருந்தென்றும், கறுப்பாயிருக்கும் மயினாவைப் பறை மயினாவென்றும் வெண்மெயாயிருக்கும் மயினாவை பாப்பார மயினாவென்றும், கறுப்பாயிருக்கும் பாம்பை பறைப்பாம்பு என்றும், வெண்மெயாய் இருக்கும் பாம்பைப் பாப்பாரப் பாம்பென்றும் சொல்லிவரும்படியானக் கற்பனையில் விடுத்து பார்ப்பானென்னும் மொழியையும், பறையன் என்னும் மொழியையும் பரவச் செய்துவந்தார்கள்.

அவர்கள் கற்பித்துள்ளவாறு கறுப்பாயிருக்கும் நாயைப் பறைநாயென்றும், வெண்மெயாயிருக்கும் நாயைப் பாப்பாரநாயென்றும் வழங்கினால் அம்மொழி தங்களை இழிவுபடுத்தும் என்று கருதி பறைநாயென்னும் மொழியை மட்டிலும் பரவச் செய்து திராவிட பௌத்தர்களை இழிவு படுத்திவந்தார்கள்.

மிலைச்சர்களை அடுத்தோர்கள் யாவரும் அக்காலத்தில் கல்வியற்றோர்களாதலின் பறைப்பருந்து யாது, பாப்பாரப்பருந்து யாது, பறைமயினா யாது, பாப்பாரமயினா யாது, பறைப் பாம்பு யாது, பாப்பாரப்பாம்பு யாதென்னும் பெயர் பேதங்களும், பொருள் பேதங்களும் அறியாது அவர்களின் போதனை மேறை சொல்லிவந்தார்கள்.

இவ்வகையாகப் பறையன் என்னும் மொழியை பல சீவர்களுக்கும் அளித்துப் பரவச்செய்ததுடன் புத்தபிரான் தாதையாகவிளங்கிய வீரவாகுச் சக்கிரவர்த்தியை சுடலைகாக்கும் பறையன் என்று கூறி அரிச்சந்திரவிலாசம் என்னும் ஓர்க் கட்டுக்கதையைப் புராணமாகவும், விலாசமாகவும் எழுதி அதினாலும் பறையென்னும் பெயரைப் பரவச் செய்தார்கள்.