பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 131


அதற்காதரவாக பெளத்தமார்க்க நந்தனென்னும் அரசனை நந்தனென்னும் பறையன் என்று கூறி நந்தன் சரித்திரமென்றோர் கட்டுக்கதையும், நந்தன் சரித்திர கீர்த்தனமென்றோர் கட்டுக்கதையும் எழுதி அதன்மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச்செய்தார்கள்.

சீவசெந்துக்களின் மூலமாகவும், புராணங்களின் மூலமாகவும், கீர்த்தனைகளின் மூலமாகவும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்ததுமன்றி ரெவரெண்டு ஜெபி. ராட்ளரென்னுந்துரை அகராதி ஒன்று எழுதிய காலத்தில் அவருக்கு எழுத்துதவியோராயிருந்தவர்கள் 1. வள்ளுவப்பறை, 2. தாதப் பறை, 3. தங்கலான் பறை, 4. துற்சாலிப்பறை, 5. குழிப் பறை, 6. தீப்பறை, 7. முரசப்பறை, 8, அம்புப்பறை, 9. வடுகப்பறை, 10. ஆலியப் பறை, 11. வழிப்பறை, 12. வெட்டியாரப் பறை, 13. கோலியப்பறை என்று இன்னுஞ்சில நூதனப்பெயர்களை வகுத்து அப்புத்தகத்தில் பதியவைத்து அதினாலும் பறையன் என்னும் பெயரைப் பரவச் செய்தார்கள்.

ஆனால் பாப்பார்களில் இன்னின்னப் பாப்பார்கள் என்று குறிப்பிடவில்லை. காரணம் - பிரம்மா முகத்திய குறிகள் அதிகப்பட வேண்டியதுடன் தங்களையும் இழிவுபடுத்தும் என்பதேயாம்.

திராவிடபௌத்தர்களாகும் மேன்மக்களை பறையர்கள் என்றே தாழ்த்தி பாழ்படுத்தவேண்டும் என்னும் அவர்களுக்குள்ள கெட்ட எண்ணத்தை இன்னும் அறியவேண்டுமாயின் முநிசபில் எல்லைகளுக்குள்ள வீதியின் முகப்பில் அடித்திருக்கும் பலகைகளிலுள்ளப் பெயர்களாலும் அறிந்துக் கொள்ளலாம்.

அதாவது - இப்பறையனென்னும் பெயரை பள்ளிக்கூடத்து சிறுவர்களும் ஒப்புக்கொள்ளாமல் அறுவெறுத்துவந்தபடியால் நமது கருணை தங்கிய ராஜாங்கத்தார் பறையரென்னும் பெயரை மாற்றிப் பஞ்சமரென்னும் பெயரை அளித்துக் கலாசாலைகளில் வழங்கச்செய்தார்கள்.

திராவிட பௌத்தர்களுக்கு எதிரிகளாகிய சாதித்தலைவர்கள் இவற்றை அறிந்து ஆ! ஆ! இப்பறையரென்னும் பெயரை எவ்வளவு பிரையாசையுடன் உரவச்செய்திருக்க அப்பெயரை மாற்றி பஞ்சமரென்று எழுதும்படி ஆரம்பித்துக் கொண்டார்களே, இப்பறையன் என்னும் பெயர் இனி மறைந்துபோய்விடுமே. இது மறையாமலிருப்பதற்கு யாது உபாயம் என்று கருதி மேன்மக்களாம் திராவிட பௌத்தர்கள் வாசஞ் செய்யும் வீதிகளில் எழுதி வைத்துள்ள பலகைகளில் பறைச்சேரி வீதி, பறைச்சேரி வீதி என்று நூதனமாக எழுதிப் பதிவுசெய்திருக்கின்றார்கள்.

இதன் மெய் பொய் அறியவேண்டியவர்கள் இவ்வெழிய குலத்தோர் வாசஞ்செய்யும் வீதிகளின் முகப்பில் பத்துவருஷங்களுக்கு முன்பு பலகைகளில் எழுதிவைத்திருந்த பெயர்களையும், இப்போது எழுதிவைத்திருந்த பெயர்களையும், ஒத்திட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

இவ்வகையாக மாற்றியவற்றுள் மயிலாப்பூரைச்சார்ந்த வெங்கிடாஜலமுதலி வீதியென்று வழங்கி இக்குலத்தோர் வாசஞ்செய்துவந்த இடத்தை வெங்கிடாஜல முதலி பறைச்சேரி தெருவென்று நூதனமாக எழுதிக்கொண்டுபோய் பதித்தார்கள். அவ்விடமிருந்த விவேகிகள் அவற்றை முநிசபில் பிரசிடெண்டுக்கெழுதி தடுத்து முன்போலவே பதிவு செய்திருக்கின்றார்கள். தடுத்துக் கேழ்க்காதவிடங்களில் நூதனமாக பறைச்சேரித் தெருவென்றே முன்பு அப்பலகைகளில் இல்லா நூதன பெயரை வேண்டும் என்று பதிவு செய்துவைத்திருக்கின்றார்கள்.

- 2:32; சனவரி 20, 1909 -

வள்ளுவர்களை முதற்பறையர்களாகச் சேர்த்த விவரம்

சாக்கையர் வள்ளுவரென்று அழைக்கப்பெற்ற கணிதசாஸ்திர மேன்மக்கள் அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்கும் கர்ம்ம குருக்களாயிருந்து அரசர் முதலியவர்களுக்குள்ள விவாக கன்மாதிகளையும், மரண கன்மாதிகளையும், புத்ததன்ம ஒழுக்கப்படி நிறைவேற்றிவந்தார்கள்.