பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அவர்களை அருகில் நெருங்கவிடாமலும், சங்கதிகளை விசாரிக்கவிடாமல் தூரத்தில் விலக்கிவைப்பதற்கே செய்துவந்தார்கள். இன்னுஞ் சில கிராமங்களில் செய்தும் வருகின்றார்கள்.

- 2:34: பிப்ரவரி 3, 1909 -

பௌத்தர்களுக்கு விரோதிகளாகத் தோன்றிய வேஷப்பிராமணர்களாகும் பராயசாதியோர்களும் அவர்களையே சுவாமி சுவாமியென்று தொழுது கொண்டுவருகிறவர்களும், பௌத்தர்களைப் பறையரென்றும், தாழ்ந்த சாதிகளென்றுங் கூறிப் பலவகை இடுக்கங்களைச் செய்துவருவதுடன் அவர்களைச் சார்ந்த கல்வியற்ற புருஷர்கள் நாவிலும், இஸ்திரீகளினாவிலும் இப்பறையனென்னும் பெயரை இழிவாகவும், பொறாமெயாகவும் வழங்கிவருபவற்றை விளங்க எழுத வேண்டுமாயின் விரியுமென்றஞ்சி விடுத்திருக்கின்றோம்.

இப்பறையனென்னும் பெயரை இழிவாக உபயோகப்படுத்திவரும் புருஷர்களின் செய்கைகளையும், இஸ்திரீகளின் செய்கைகளையும், அவர்கள் குணாகுணங்களையும், அந்தஸ்துகளையும், சீலங்களையும், அவர்களிருக்கும் நிலைகளையும் விவேகிகள் உய்த்துநோக்குவார்களாயின் பொறாமெயினாலும், பற்கடிப்பினாலும், மேன்மக்களை வேண்டுமென்றே இழிவுகூறி வருகிறார்கள் என்பது வெள்ளென விளங்கும்.

இவர்களைக் கோவில்களுக்குள் சேர்க்காமல் துரத்தும் விவரம்

இத்தேசத்துள் கோவில்கள் என்று வழங்கும் புராதனக் கட்டிடங்கள் யாவும் பூர்வ பௌத்தர்கள் வாசஞ்செய்துவந்த மடங்களேயாகும்.

அரசனே தனது நற்கரும ஒழுக்கத்தின் மிகுதியால் ஆதிதேவனென்றும், புத்தரென்றும், இந்திரரென்றும், உலகெங்கும் கொண்டாடியவற்றுள் இத்தென்னிந்திய திராவிடர்கள் யாவரும் அரசர்கள் வாழும் இல்லத்தைக் கோவில் என்று வழங்கிவந்ததுபோல் அரசராகிய புத்தரை தெய்வம் என்றும், மன்னர்சாமி என்றும் கொண்டாடிவந்த மடங்கள் யாவற்றையும் கோவிலென்றே வழங்கிவந்தார்கள், நாளதுவரையில் வழங்கியும் வருகின்றார்கள்.

இவற்றுள் பெரும்பாலும் சிறப்புற்று விளங்கிய பெளத்தமார்க்கக் கோவில்களாகும் கன்ச்சிபுரம், திரிசிரபுரம், சிதம்பரம், மாவலிபுரம், அலர்மேலுமங்கைபுரம் ஆகிய மடங்கள் பாவற்றையும் நூதன பராயசாதியோர்களும், பராய மதஸ்தோர்களும் பற்றிக்கொண்டு அவைகளுக்குள் வைத்திருந்த புத்தரைப்போன்ற சின்முத்திறாங்கச் சிலை, சம்மாமுத்திராச்சிலை, பைரவமுத்திறாச் சிலை முதலியவற்றை மாற்றிவிட்டும், சிலதை எடுத்து விட்டதுபோக புத்தரது யோகசயன சிலைகள் யாவும் மெத்த பெரிதாக செய்துவைத்திருந்தபடியால் அவைகளை எடுப்பதற்கும், மாற்றுவதற்கும் ஏதுவில்லாமல் நூதனமதஸ்தர்களாகும் சைவர்கள் கைப்பற்றிக்கொண்ட மடங்களிலுள்ள புத்தரது யோகசயன நிலைகளினெற்றியில் சைவர்கள் சின்னமாகும் நாமத்தைச் சாற்றி கோவிந்தராஜர் பள்ளிகொண்டிருக்கின்றாரென்றும், வைணவர்கள் பற்றிக்கொண்ட மடங்களிலுள்ள புத்தரது யோகசயன சிலையை அரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கின்றாரென்றும் தங்கள் தங்கள் நூதன மதக்கோட்பாடுகளுக்குத் தக்கதுபோல் கூட்டியும் குறைத்தும் அதற்குத் தக்கப் பொய்ப் புராணக் கட்டுக்கதைகளையும் ஏற்படுத்தி வைத்துக்கொண்டும், எங்கள் மதமே மதம், எங்கள் சாமியே சாமியென்று உயர்த்தி மதக்கடைகளைப் பரப்பி வேஷபிராமணர்கள் யாவரும் அதனால் சீவிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

இத்தகைய மதக்கடைகளுக்கு தட்சணை, தாம்பூலங் கொண்டு வருகிறவர்கள் எந்தசாதிகளாயிருந்தாலும் கொண்டுவரலாம். இப்பறையர்கள் என்றழைக்கும் படியானக் கூட்டத்தோர்கள் மட்டிலும் உள்ளுக்கு வரப்படாதென்றும், தெரியாமல் வந்துவிடுவார்களானால் அடித்துத் துன்பப்படுத்துவதுடன் தீட்டு