பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 135


கழிக்கவேண்டும் என்று துட்டுபரித்து பயமுறுத்தி உள்ளுக்கு நுழையவிடாத ஏற்பாடுகளைச் செய்துவந்ததுமன்றி நாளதுவரையில் செய்தும் வருகின்றார்கள்.

இவ்வகையாக இவர்களை மட்டிலுஞ் சேராமல் துரத்திவருங் காரணம் யாதென்பீரேல் - சகல சாதியோர்களைப்போல் இவர்களுங் கோவிலுக்குள் வருத்துப்போக்காய் இருப்பார்களானால் தங்களுக்குள்ள முத்தன், முநியன், கறுப்பன், செல்லனென்னும் புத்தருக்குரிய பெயர்களின் ஆதரவினாலும், ஞானயோக நிருவாணசிலையின் குறிப்பினாலும் இக்கோவில்கள் தங்களுடைய புராதன கட்டிடங்கள் என்று கைப்பற்றிக்கொள்ளுவார்கள்.

- 2:35; பிப்ரவரி 10, 1909 -

அவ்வகையாகக் கைப்பற்றி கொள்ளுவார்களானால் சரித்திரவாதாரங்களின்படி அவர்களுக்கே ஒப்படைத்துவிட நேரிடும். ஆதலின் கண்களுக்குப் புலப்படாமல் இருக்க வேண்டும் என்றே அவர்களை உள்ளுக்குப் பிரவேசிக்கவிடாத எத்தனங்கள் எல்லாம் செய்துக் கொண்டே வருகின்றார்கள்.

இக்கோவில்களைப் பற்றிய இன்னும் சில விவரங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் மைலாப்பூரிலுள்ள சாக்கையர் வம்மிஷ வரிசையைச் சார்ந்த குழந்தைவேலு பரதேசியவர்கள் மடமாகிய கபோலீசராலயமும், திருப்போரூரில் வழங்கும் போரூரார் மடமும், திருவளூர் மடமும் பௌத்தர் வியாரங்களேயாம்.

அதனாதாரங்களை அறியவேண்டுமானால் அதற்குள் இஸ்தாபித்துள்ள நிஷ்டசாதன சிலைகளும் யோகசயன சிலைகளும் போதும் சாட்சி. அஃதன்றி அஸ்திபாரக் கற்களிலுள்ள சிலா சாசனங்களாலும் விளங்கும்.

ஈதன்றி திராவிட பௌத்தர்களாம் மேன்மக்களை பறையர்கள் பறையர்கள் என்று தாங்கள் பலவகை இம்சைகளைச் செய்து ஆலயங்கள் அருகில் நெருங்கவிடாது துரத்திக் கொண்டேயிருந்தபோதிலும் பூர்வ பழக்கம் மாறாமல் மாசி பௌர்ணமியில் மயிலாப்பூர் குழந்தைவேலு பரதேசி மடத்திற்கும், கிருத்திகைதோரும் போரூரார் மடத்திற்கும், அமாவாசிதோரும் திருவள்ளூர் மடத்திற்கும் மட்டிலும் தூறநின்றேனும் தெரிசித்துவருவார்கள்.

மற்றும் இச் சென்னையில் நூதனமாகக் கட்டியிருக்கும் கந்தசாமிக் கோவில், கச்சாலீஸ்வரன் கோவில், ஏகாம்பர வீஸ்வரன்கோவில், பெருமாள் கோவில்களுக்குப் போகவேமாட்டார்கள்.

திராவிட பௌத்தர்களாம் மேன்மக்களுக்கு சாம்பான் குலத்தாரென்னும் பெயர் வாய்த்த விவரம்.

மதுராபுரி என்றும், மதுரை என்றும், வட மதுரை - தென்மதுரை என்றும் வழங்கிவரும் தேசமெங்கும் புத்தசங்கங்களே நிறைந்திருந்தது. அவைகள் யாவற்றையும் வேஷபிராமணர்கள் கைப்பற்றிக் கொள்ளுவதற்காய், தங்கள் போதனைகளுக்கு உட்பட்ட சிற்றரசர்களாலும், பெருங்குடிகளாலும் பௌத்தர்களை வசிகளிலும், கற்காணங்களிலும், வதைத்துக் கொன்று மடங்கள் யாவற்றையும் இடித்து தங்கள் குடிவாழ்க்கைக்கு நிருமித்துக் கொண்டதுபோக திரவியம் அதிகவருத்தத்துள்ள மடங்களை விஷ்ணு கோவிலென்றும், சிவன் கோவிலென்றும் நூதன மதக்கடைகளைப் பரப்பி அதினால் சீவிக்கும்படி ஆரம்பித்த காலத்தில் கிராமவாசிகளாகத் தங்கியிருந்த பௌத்தர்கள் யாவரையும் பறையரென்று அழைக்க ஆரம்பித்தார்கள். அவற்றை உணர்ந்த விவேகிகள் யாவரும் அங்கு ஒன்றுகூடி தாங்கள் பறையர்கள் என்று ஒப்புக்கொள்ளாமல் தாங்கள் யாவரும் சாம்பவமூர்த்தியாகிய புத்தபிரான் தன்மவம்மிஷ வரிசையோராதலின் சாம்பன் குலத்தாரென்றும், சாம்பான்கள் என்றும் அழைக்க வேண்டும் என்னும் ஓர் கட்டில் நின்று பறையரென்னும் பெயரை ஒப்புக்கொள்ளாமல் சாதித்துவிட்டார்கள்.

பாலிபாஷையில் சம்மா சம்புவென்னும் வார்த்தையின் பொருள் குன்றாத மனபாக்கியம் பெற்றவ ரென்னப்படும்.