பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 139


சேர்ந்துவிட்டார்கள் என்று பாடங்கற்பிக்கும் போதே இந்த சங்கதிகளை எடுத்துக் கூறினார்களாம்.

அதை உணர்ந்த துரைமக்களிருவரும் ஒன்றுகூடி பேசுங்கால் இரண்டு பாப்பார்களும் தமிழ் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதே நம்முடைய வேலைக்காரர்களைத் தாழ்த்தியும் இழிவு கூறியும் பேசுகின்றார்களே அதன் காரணம் விளங்கவில்ல .

ஆதலின் டீச்சர்கள் வருங்கால் நமது வேலைக்காரர்களை நேரில் தருவித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கார்த்திருந்து டீச்சர்கள் வந்தவுடன் ஆரிங்டன் துரையவர்கள் தனது பட்ளர் கந்தசுவாமி என்பவரையும், மற்றொரு துரை தனது பட்ளர் கிருஷ்ணப்பன் என்பவரையும் தருவித்து இதோ எங்களுக்குத் தமிழ் பாடம் கற்பித்து வரும் பார்ப்பார்கள் உங்களைத் தாழ்த்தி சாதிகளென்றும் பறையர்கள் என்றும் நீச்சர்கள் என்றும் கூறுகின்றார்களே அது வாஸ்தவந்தானோ என்றார்கள்.

கந்தசுவாமி என்பவர் தனது துரையை நோக்கி ஐயா எங்கள் குலத்தோருக்கும் இவர்கள் குலத்தோருக்கும் ஏதோ பூர்வவிரோதம் இருக்கின்றது. அதினால் எங்களை இவர்கள் இழிவுகூறி துறத்துவது வழக்கம். எங்கள் குலத்தோர் வாசஞ்செய்யும் வீதிக்குள் இவர்கள் வந்து விடுவார்களானால் இவர்களை இழிவு கூறி உங்கள் பாதம் பட்டவிடம் பாழாகிவிடுமே என்று சொல்லிக் கொண்டு இவர்களைத்துறத்தி வந்தவழியிலுஞ் சென்ற வழியிலுஞ் சாணத்தைக் கரைத்து தெளித்து இவர்கள் ஓடியவழியில் சாணச்சட்டியை உடைத்து வருகின்றார்கள். இத்தகையச் செயல் பெரும்பாலும் எங்கள் கிராமங்களுக்குள் வழங்கிவந்தபோதிலும் பூர்வவிரோதமும் அதன் காரணங்களும் எங்களுக்கு சரிவர விளங்கவில்லை.

ஆயினும் எங்கள் குலத்தோர் பெரும்பாலும் பயிரிடுந் தொழிலையே செய்கின்றவர்கள். இவர்கள் குலத்தாரோ பெரும்பாலும் பிச்சையிரந்துண்பவர்கள்.

இவ்விருதிறத்தார் செய்யுந் தொழில்களுக்குள் எவர்கள் செய்யும் தொழில் நீச்சத் தொழிலென்று துரைமக்களாகியத் தாங்களே தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாராம்.

அவற்றை வினவிய ஆரிங்டன் துரையவர்கள் இருபாப்பார்களையும் நோக்கி இப்போது நீங்கள் என்ன சொல்லப் போகின்றீர்கள் என்றாராம். பாப்பார்களிருவரும் அவ்வார்த்தையை செவிகளிலேற்காது உங்கள் பாடங்களை வாசித்துக் கொள்ளுங்கள் என்று மறுத்துவிட்டார்களாம்.

துரைமக்களுக்கு அஃதுவிரோத வாக்குகள் என்று விளங்கினபோதிலும், பாப்பார்கள் என்போர் தங்கள் ஜீவனங்களுக்காக நூதனமதங்களையும் நூதனசாதிகளையும் ஏற்படுத்திக் கொண்டு பூர்வபுத்தமார்க்கத்தை அழித்தும் புத்தமார்க்கத்தை விடாமல் கைப்பற்றி வந்தவர்களைத் தங்களுக்குப் பராயரென்றும் பறையரென்றுந் தாழ்ந்த ஜாதிகள் என்றும் வகுத்து துன்பப்படுத்தி வருகின்றார்கள் என்று விளக்குவாரில்லாமல் போய்விட்டார்கள்.

- 2:39: மார்ச் 10, 1909 -

மிஷநெரிமார்களின் கருணையும் அஃது நீடிக்கா விவரமும்

இத்தேசம் எங்கும் பெளத்த மார்க்கம் நிறைந்திருந்த வரலாறுகளையும் நூதன மதங்களும் நூதன சாதிகளும் தோன்றிய விவரங்களையும் தங்கள் சாதிகளையும் மதங்களையும் பரவச் செய்தற்கு பெளத்தமார்க்கத்தை இடைவிடாது பற்றி நின்ற சீலர்களாகும் மேன்மக்களை பறையர்கள், தாழ்ந்த சாதியோர்கள் என்று கூறிவரும் விவரங்களையும் அநுபவ ஆதாரங்களுடன் திரட்டி பிரிட்டிஷ் துரைத்தன மேலோர்களுக்கு விளக்கியிருப்பார்களானால் கேவல நீச்ச செய்கையுள்ளோர் நாவிலும் பறையரென்றும் தாழ்ந்த சாதி என்றும் வழங்கும்படியான வார்த்தைகள் தடைபடுவதுமன்றி இராஜாங்க அந்தஸ்துள்ள