பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 141


மிகுதியாலும் சாதிபேதமற்ற திராவிட சிறுவர்களின் வம்மிஷ வரிசையோர் முன்பே அந்தஸ்துள்ள நிலையிலும் விவேகமிகுதியிலுமிருந்து வேஷபிராமணர்களின் இடுக்கங்களால் நசுங்குண்டு எழிய நிலையிலிருந்த போதிலும் பூர்வவித்தியா வம்மிஷ விருத்தி பலத்தால் மெட்டிக்குலேஷன், எப்.ஏ., பி.ஏ, எம்.ஏ. முதலிய கெளரதாபட்டங்களை சகல பெரிய சாதிகள் என்போருடன் சமரசமாகவும் கல்வியின் அதிவிருத்தியடைந்தும் வந்தார்கள்.

அத்தகைய விருத்தியை உணர்ந்த பிரிட்டிஷ் துரைத்தனத்தாரும் இவ்வெழிய குலத்தோர்மீது அன்பை வளர்த்தி இராஜாங்கவுத்தியோகங்களில் சகல சாதியோருடன் கலந்து சீவிக்கும் படியான செருசதார் அஜீர் செருசதார், ஆனரரிசர்ஜன் ஆனரரிமாஜிஸ்டிரேட், இஸ்கூல் இன்ஸ்பெக்டர் முதலிய உத்தியோகம் கொடுத்து வந்ததுமன்றி பிரிட்டிஷ் ஆட்சியோர் ஆக்கியாபனைப்படி தங்கடங்கள் உத்தியோகங்களை சரிவர நடாத்தி வந்தபடியால் இஸ்டார் ஆப் இண்டியாவென்றும், இராய பாதூரென்றும் கெளரதாபட்டங்களையும் பெற்றுவந்தார்கள்.

சாதிபேதமற்ற திராவிடர்கள் நாளுக்கு நாள் கல்வியிலும் அந்தஸ்திலும் உத்தியோகங்களிலும் முன்னேறி வருவதைக் கண்டு பொருக்கா சாதிபேதமுள்ளோர்கள்,

ஆ,ஆ, இவர்கள் மிஷநெரிமார்கள் கருணையால் அம்மார்க்கத்தில் பிரவேசித்தும் அவர்கள் கலாசாலையில் வாசித்தும் விருத்தியடைந்து விடுகின்றார்கள் இவர்களை அம்மார்க்கத்தில் பிரவேசித்தே அடக்கி விடவேண்டும் என்னும் வஞ்சகங்கொண்டு லூத்தர்மிஷநெரி சங்கத்தில் சேர்ந்து பரிசுத்தமாகிய கிறீஸ்து மார்க்கத்திலும் அசுத்தமாகிய சாதிபேதத்தை உண்டுசெய்ய ஆரம்பித்துக் கொண்டார்கள்.

பூர்வத்தில் இவ்விடம் வந்து தோன்றிய மிஷநெரிபாதிரிகளாகும் துரைமக்கள் யாவருக்கும் இந்தியாவிலுள்ள சாதிபேத வகுப்புகள் யாவும் பொய்யென்றும் காலத்திற்குக் காலம் மாறுஞ்செய்கையை உடையவர்கள் என்றும் தங்கள் விவேகமிகுதியால் தெரிந்துக் கொண்டவர்களாதலின், பெரியசாதியோர் என்பவர்களை சட்டைசெய்யாமல் தாழ்ந்த சாதி என்போர்கள் மீது தயைகூர்ந்து அவர்களைக் கல்விவிருத்தியிலும், செல்வவிருத்தியிலும் உத்தியோகவிருத்தியிலும் முன்னேற்றி பெரியசாதிகள் என்போர் அந்தஸ்திற்கும் மேலாகக்கொண்டு வந்தார்கள் அதனால் கிறீஸ்துமார்க்கப் பரவுதலும் கிறிஸ்துவின் சிறப்பும் இந்துதேசம் எங்கும் கொண்டாடப்பட்டது.

அவர்களுக்குப் பின்பு இவ்விடம் வந்து தோன்றிய மிஷநெரி பாதிரிகளாகும் துரைமக்கள் பெரிய சாதிகளென்றவுடன், பெரிய பெரிய சாதிகளென்று எண்ணிக்கொண்டு, பெரியசாதியோன் என்பவன் ஒருவனைக் கிறீஸ்தவனாக்கிவிட்டால் பெரிய பெரிய பாதிரிகளாகிவிடுவதுமன்றி அரிய பெரிய சம்பளமும் பெறலாம் என்னும் ஆசையினால் பெரிய சாதிகளைக் கிறீஸ்தவர்களாக்கும் முயற்சியில் நின்றுவிட்டார்கள்.

அப்பெரிய சாதிகள் என்போரும் கிறீஸ்து மார்க்கத்துள் பிரவேசித்து பறையர்கள் என்று வழங்கும் பூர்வ பவுத்தர்களை கிறீஸ்து மார்க்கத்திலுந் தலையெடுக்க விடாமல் செய்யவேண்டும் என்னும் முயற்சியிலிருந்தவர்களாதலின் பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல் வேதபாதிரிகளின் ஆசைக்கும் நூதன சாதிக் கிறிஸ்தவர்களின் பொறாமைக்கும் வழியுண்டாக்கிவிட்டது.

ஆசை மிகுத்த பாதிரிகளாலும் பொறாமெய் மிகுத்த சாதிபேத முள்ளோர்களாலும் சாதிபேதமற்ற திராவிடர்கள் முன்னேறுதற்கு வழியின்றி சாதிபேதமுள்ளோர்களால் முன்பு எவ்வகையால் நசுங்குண்டு சீர்குலைந்திருந்தார்களோ அதே நிலைக்கே வந்துவிட்டார்கள்.

இவர்களுடைய முன்னேறுதல் எப்போது தவிர்க்கப்பட்டதோ அப்போதே கிறிஸ்துமார்க்கத்தின் பரவுதலும் கிறிஸ்தவ மார்க்கத்தின் சிறப்பும் மறைந்துக் கொண்டே வந்துவிட்டது.