பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 165


அத்தகைய புத்தியின் விருத்தியின்றி பொன்னால் கொட்டை சிறப்புப் பெற்றதா, கொட்டையால் பொன் சிறப்புப்பெற்றதா என்றுணராமல் உருத்திராட்சக்கொட்டைக் கட்டிக்கொள்ளும் விவேகவிருத்தியும், நெற்றியால் நாமம் சிறப்புப்பெற்றதா, நாமத்தால் நெற்றிச் சிறப்புப்பெற்றதா என்றுணராது சிறியநாமம் போடப்படாது நெற்றி நிறையப் பெரியநாமம் போடவேண்டுமென்னும் விவேகவிருத்தியும், நெற்றியால் குழைத்துப்பூச்சும் சாம்பல் சிறப்பு பெற்றதா, குழைத்துப்பூச்சும் சாம்பலால் நெற்றிச் சிறப்புப்பெற்றதா என்றுணராது கோடிட்டுப் பூச வேண்டுமென்னும் விவேகவிருத்தி கூறும்படியானவர்களுக்கு என்ன விருத்தி உண்டென்பதைக் கண்டறிந்துக் கொள்ளலாம்.

இந்தியர்கள் யாவரும் ஒற்றுமெய் மிகுத்தோர்களென்பதாயின் ஒவ்வோர் சாதிகளுக்குள்ளும் கொள்வினை, கொடுப்பினை, உண்பினை, உடுப்பினை யாவும் பேதப்பட்டு நாளுக்குநாள் ஜாதிக்கிளைகள் பிரிந்து கொண்டே வருகிறபடியால் இந்தியர்களுக்குள் ஒற்றுமெ யில்லையென்பது துணிபு.

இந்தியர்கள் யாவரும் இராஜ விசுவாசிகளென்பதாயின் குடிகளுக்கும், மாணாக்கர்களுக்கும் மதி யூட்டிவரும் ஐரோப்பியர்களையே சுட்டுக் கொன்றுவிடுகிறார்களென்னும் வதந்தியால் இந்தியர்கள் இராஜவிசுவாசிகள் அன்று. இராஜவிரோதிகளென்றே கூறுதற் கேதுவுண்டாகின்றது.

இத்தியாதி பேதாபேதங்கள் யாவையும் கனந்தங்கிய பானர்ஜியவர்கள் சீர் தூக்கிப்பார்த்து சுதேசியம் பேசுவாரென்று நம்புகிறோம்.

- 3:6; சூலை 21, 1909 -


66. இராஜாங்க ஆலோசினை சங்க நியமனம்

பிரிட்டிஷ் ஆட்சியின் ஆலோசினை சங்க நியமனமாவது தாங்கள் இந்தியாவில் நடத்திவரும் அரசாட்சியில் பலவகை மனுக்கள் சாதிபேதத்தாலும், மத பேதத்தாலும், பாஷை பேதத்தாலும் ஒற்றுமெய்க் கெட்டிருப்பதுமன்றி இத்தகைய பேதங்களைக்கொண்டே பற்பலக் கலகங்களுந்தோன்றி வருகின்றது.

அடுத்தடுத்து சாதிபேத சமயபேத கலகங்கள்தோன்றி கெடுவதுடன் உயர்ந்த சாதியென்றுவேஷம் போட்டுக்கொண்டிருப்போர் தங்களால் தாழ்ந்த சாதியென்று வகுத்திருப்பவர்களை பல்வகையாலுந் தலையெடுக்க விடாமற் செய்து சகல சுதந்திரங்களையுந் தாங்களே அநுவித்துக் கொண்டு பெருந் தொகையாயுள்ள ஏழைக்குடிகளைப் பாழாக்கிக் கொண்டு வருகின்றார்கள்.

இவைகள் யாவற்றையும் நாளுக்குநாளுணர்ந்துவருங் கருணைதங்கிய ராஜாங்கத்தார் இந்தியர்களென்று பொதுவாகக் காரியாதிகளை நடத்தவிடாமல் அவர்கள் எவ்வெவ்வகையாகப் பிரித்துக்கொண்டுபோகின்றார்களோ அதுபோலவே இராஜாங்க ஆலோசினை சங்கத்திலும், சாதிப்பிரிவு, மதப்பிரிவு, பாஷைப்பிரிவு முதலியவைகளில் பெருந்தொகையாய் உள்ளவர்களுக்குத் தக்கவாறு ஒவ்வொருவரை நியமித்து அவரவர்களுக்குள்ள குறைகளை இராஜாங்கத்தோருக்கு விளக்கி சகல சாதியோரும் சகலமதஸ்தரும், சகல பாஷைக்காரர்களும் சமரச சுகம் அனுபவிக்கும்படியான பேரானந்தக்கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.

அக்கருத்தானது கூடிய சீக்கிரத்தில் நிறைவேறுமாயின் பொதுவாகிய இராஜாங்க ஆபீசுகளிலும், சாதி வைத்துள்ள (பியூன்கள்) வேண்டுமென்று வைத்துக்கொண்டு தங்கள் வீட்டுவேலையையும், அப்பியூனைக்கொண்டு செய்வித்துக்கொள்ளும் சுயப்பிரயோசனக்காரர்களின் செய்கைகள் யாவும் வெளிவருவதுடன் சகலசாதியோர்களிலும் ஒவ்வோர் பியூன்கள் நியமிக்கவும் வழிகளுண்டாகும்.

பெரியசாதியென்று உயர்த்திக்கொள்ளுகிறவர்களுக்கும், சிறியசாதி யென்று தாழ்த்தியுள்ளவர்களுக்கும், ஏழைகளுக்கும், கனவான்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் சுகந்தோன்றும்,