பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 167


68. மந்திரிகள் என்னும் மந்திரவாதிகள்

ஓரரசனுக்கு ஆலோசினைத் தலைவனாக வீற்றிருப்பவர்கள் தாங்கள் வாசஞ்செய்யும் இடத்தின் பேதாபேதங்களையும், அதன் வசதிகளையும் செவ்வைப்படுத்தல் வேண்டும்.

2-வது தனப்பொருள், தானியப்பொருள் யாவும் விருத்தியடையும் ஏதுக்களையும், அவற்றை பண்டிகளிலடைக்கும் பக்குவங்களையும், பாதுகாக்கும் ஏவல்களையும் நியமித்தல் வேண்டும்.

3-வது பூமியின் உழவுக் கருவியின் விருத்திகளையும், வித்தியா கருவிகளின் விருத்திகளையும் நன்காராய்ந்து உழவின் விருத்திக்கும், வித்தியாவிருத்திக்கும், ஆயுதவிருத்திக்குத் தக்கமுயற்சிகளை செய்துவரல்வேண்டும்.

4-வது தங்களுக்குப் பாதுகாப்பாம் படைவீரர்களாகும் சேனைகளை எவ்விடத்தில் அதிகப்படுத்திவைக்க வேண்டுமென்றும், அந்தந்த இடங்களில் வாசஞ்செய்வோர் குணாகுணங்களைக் கண்டறிந்து பொருட்சிலவை பாராது சேனைகளை நிருமித்தல்வேண்டும்.

5-வது ஓர் காலத்தில் குடிகள் யாவரும் ஒன்றுகூடி அரசை விரோதிக்க ஆரம்பிப்பார்கள். ஓர்கால் குடிகள் யாவரும் ஒன்றுகூடி அரசரைக் கொண்டாட ஆரம்பிப்பார்கள். இவ்விரண்டுங் குடிகளுக்கும் அரசர்களுக்குமுள்ளக் காலபேதங்களாதலின் குடிகள் அரசரைக் கொண்டாடுகின்றார்களென்று குதூகலிக்காமலும் குடிகள் அரசரை விரோதிக்கின்றார்களென்று சினங்கொள்ளாமலும், காலபேதங்களை உணர்ந்து அப்பேதங்கள் நேரிட்டு அரசரை குடிகள் விரோதிப்பதற்கு மூலகாரணமாக இருப்பவர்கள் யாரென்று உணர்ந்து அவர்கள் செயலையும் அறிந்து காலத்திற்குக்காலம் அடக்கிவிடும் உபாயங்களைத் தேடல் வேண்டும்.

மந்திரவாதிகள் தாமெடுத்துள்ள காரியாதிகளை முடிப்பதற்கு முன்பு அத்தகையக் காரியாதிகளை முன்பு யாவரேனும் எடுத்து நடத்தியிருக்கின்றார்களா நடத்திய விஷயங்கள் சுகபேருற்றிருக்கின்றதாவென்று ஆராய்ந்து முன் ஆக்கியோன்செயலைப் பின்பற்றி அக்காரியாதிகளை முடித்தல் வேண்டும்.

தோன்றிய விரோதிகளுக்குள் சிலரடங்கி கிஞ்சித்து விரோதிகள் இருப்பார்களாயின் ஓர்கால் அந்த சொற்ப விரோதிகளே பெரும் விரோதிகளாக எழும்பி நிலைகுலையச் செய்வார்கள். ஆதலின் அந்த சொற்ப விரோதிகளும் தோன்றாவண்ணம் அமைதிசெய்துவிடுதலே ஆறுதலாகும். அங்ஙனம் அமைதியின்றி ஒவ்வோர் விரோதிகள் தோற்றிக்கொண்டே வருவார்களாயின் சிறுபாம்பாயினும் பெருந்தடிக்கொண்டடிப்பதே பயனாதலின் நேரம் பொருட்சிலவுகளைக் கவனியாது உள்ள விரோதிகளை ஒடுங்க வைத்தல் வேண்டும்.

நமது அரசர்மீது யாரும் விரோதிகளில்லை. சகலரும் அவிரோதிகளென்றெண்ணி உள்ள படை வீரரையும் அவர்கள் பராக்கிரமங்களையும் ஒடுக்கி வைப்பதாயின் வீரரை நோக்கி அடங்கியிருந்த விரோதிகளாம் வீணர்கள் யாவருக்கும் ஓர் அறிவிலி உற்சாகந்தோன்றி தங்களுக்குள்ள விரோதத்தைக் காட்டுவார்கள். அக்காலத்தில் படையை பிலப்படுத்துவதாயின் தாமதமாகும். ஆதலின் உள்ளப் படைகளின் சிலவைக் குறைக்காது மற்ற சிலவுகளைக் குறைத்து படைகளை விருத்தியில் வைக்கவேண்டும்.

- 3:7; சூலை 28, 1909 -

அரசுக்கும், அமைச்சுக்கும் படையே பக்கத்துணையென்னும் பழமொழியாதலின் பலவகை வீண்சிலவுகளைக் குறைத்து படைகளை விருத்தி செய்தல் வேண்டும்.

அத்தகைய படைகளினும் ஓர்கால் அரசுக்கு சத்துருக்களாயிருந்தவர்களையேனும் அந்தரங்க சத்துருக்களாய்க் காணபடுகிறவர்களையேனும் சேர்க்காது இராஜவிசுவாசத்துடன் பாதுகாக்கும் படைவீரர்களையே நியமித்தல்வேண்டும்.