பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 171


விவேகவிருத்தியும், பெருந்தண்மெயும் அமைந்திருப்பதுடன் குணத்திலும் அமைச்சு, வார்த்தையிலும் அமைச்சு, செய்கையிலும் அமைச்சுள்ளவனே பிரதம அமைச்சனாவான்.

பொய்ப்பொருளாசை யற்று மெய்ப்பொருளாசையுற்று நீதிநெறிகளையே அன்னமும் நீருமாகக்கொண்டுள்ளக் குடும்பங்களை ஆய்ந்து அக்குடும்பத்துள் தோன்றிய விவேகிகளைத் தெரிந்தெடுத்து அமைச்சுக்கு அமர்த்துவதே அரசுக்கழகாகும், அமைச்சுக்கும் நிலையாகும். (இத்தொடர் நிறைவு பெறவில்லை)

- 3:12; செப்டம்பர் 1, 1909 -


69. நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோரின் விசேஷ சுகாதாரம்

உலகெங்கும் பிரபலமிகுத்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தோர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட குடிகள் யாவருக்கும் குப்பைகளாலுண்டாகும் கெடுதிகளைப் போக்கும் சுகாதாரங்களையும், கால்வாய்களாலுண்டாகுங் கெடுதிகளைப்போக்கும் சுகாதாரங்களையும் தொத்துவியாதிகளாலுண்டாகுங் கெடுதிகளைப்போக்கும் சுகாதாரங்களையும் கள்ளர்களாலுண்டாகுங் கெடுதிகளைப்போக்கும் சுகாதாரங்களையும் அளித்து கோழியானது தனது குஞ்சுகளை செட்டையில் பாதுகாத்துவருகிறதுபோல் ரட்சித்து வருகின்றார்கள்.

இத்தகைய பாதுகாப்பில் தங்கள் பார்வைக்கு அகப்படாததும், கேள்வியிற் படாததுமாகிய சிற்சில சுகக்கேடுகளுமுண்டு.

கிராமங்களில் வாசஞ்செய்யும் சில பெரியசாதிகளென்போர் தங்கள் கிராமத்திலுள்ள ஆடுகளை, மாடுகளை, கழுதைகளை, நாய்களைத் தீண்டிக்கொள்ளுவார்கள். ஆனால் சில மனிதசீவர்களை அம்மிருகசீலர்களிலுந் தாழ்ந்தவர்களென வகுத்து தீண்டாமலும் அவர்களைத்தலையெடுக்கவிடாமற் செய்துவருகின்றார்கள்.

இவற்றுள் கிராமவாசிகளில் பெரியசாதியென்பவன் ஒருவன் இறந்து போனால் என்ன வியாதியால் இறந்தான், ஏதுவியாதியால் இறந்தானென்னும் விசாரிணை உண்டு.

மிருகாதிகளிலும் தாழ்ந்தவர்களாக எண்ணப்பட்டிருக்கும் மனித கூட்டத்தோருள் ஒருவன் இறந்துபோவானாயின் அவன் என்ன வியாதியால் இறந்தான், ஏது வியாதியால் இறந்தானென்னும் விசாரிணையே கிடையாது.

காரணம், எவ்விதத்திலேனும் அக்கூட்டத்தோர் தலைகாட்டாது நசிந்துவிடவேண்டுமென்னுங் கருத்தேயாகும்.

இத்தகைய கொடுங்கருத்துடன் சாதிபேதம் வைத்துள்ள கனவான்களின் மத்தியில் ஓர் மாடேனும், ஆடேனும் செத்துப்போய்விடுமாயின் அதுபாம்பு முதலிய விஷ செந்துக்களால் மடிந்திருப்பினும் அவற்றைக் கருதாது அவ்விடம் மிக்க ஏழைகளாயுள்ள பேதை ஜனங்களைத் தருவித்து செத்த செந்துக்களை எடுத்துக்கொண்டுபோய் மாமிஷங்களை எடுத்துக்கொண்டு தோலைக் கொண்டுவந்து கொடுக்கும்படி உத்திரவு செய்துவிடுகின்றார்கள்.

அவ்வேழைமக்களோ தங்கள் பசியின் கொடுமெயால் அம்மாமிஷத்தை சமைத்துத்தின்று விஷவாயுவாலும், விஷபேதியாலும் நைந்து நாளுக்குநாள் க்ஷீணமடைந்துப்போகின்றார்கள்.

இவ்வேழைகுடிகளுக்கு நேரிட்டுவரும் கெடுதிகளை நீக்கி சுகாதாரமளிக்கக் கோருகிறோம்.

அதாவது ஒவ்வோர் முநிசபில் எல்லைகளுக்குள்ளும், கிராமங்களுக்குள்ளும் மரித்த மிருகசீவன்களை புதைக்குமிடமெனக் குறித்து அந்தந்த முநிசபில் எல்லைக்குள்ளும், முநிசபில் எல்லைகளுக்கு அப்புறப்பட்ட கிராமங்களுக்குள்ளும் மடியத்தக்க ஆடுகளையும், மாடுகளையும், குதிரைகளையுங் குறிக்கும் இடங்களில் கண்டிப்பாக புதைக்கும்படி உத்திரவு செய்தல் வேண்டும்.

அவ்வகையாயப் புதைக்கப்பெற்ற மிருகஜெந்துக்களின் எருவானது விருட்சங்களுக்கும், பயிருகளுக்கும் மிக்க உபயோகமாகும்.