பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172 / அயோத்திதாசர் சிந்தனைகள்


மடிந்த மாடுகளையேனும், ஆடுகளையேனும், குதிரைகளையேனும் குறித்த இடங்களில் புதைக்காமல் மறைத்து உபயோகிப்பார்களாயின் அவற்றிற்கு உடையவர்களை கண்டிக்குஞ் சட்டங்களை வகுத்தல்வேண்டும்.

குடிகளுக்காய் கருணைதங்கிய ராஜாங்கத்தால் செய்திருக்கும் சுகாதாரங்களில் ஏழைகளை கண்ணோக்கி ரட்சிக்கும் சுகாதாரமே மிக்க மேலானதாகும்.

இத்தேசத்தில் பயிரிடும் விருத்தியை முன்னிட்டு உழைத்துவரும் சங்கத்தார் மிருகங்களின் எருவிருத்தியைக் கருதுவார்களாயின் தானியங்கள் விருத்தியடைவதுடன் ஏழைக்குடிகளும் வியாதியின்றி சுகமாக வாழ்வார்கள்.

- 3:9; ஆகஸ்டு 11, 1909 -


70. வேஷ வேதாந்திகள் பிறவி

தற்காலம் வேதம் இன்னது இனியதென்றறியாத வேஷவேதாந்திகள் சமட்டியென்றும் வியட்டியென்றும் ஆரோபமென்றும், அபவாதமென்றும் உள்ள வடமொழிகளை புகட்டி ஏனையோரை மருட்டி பிரமம் எங்கும் நிறைந்திருக்கின்றாரென்று சொல்லுவேன், ஆயினும் பறையனிடமட்டிலும் இல்லையென்பேன், பிரமம் சருவமயமென்பேன், பிராமணன் தனியென்பேன்.

பிரமம் எங்கு நிறைந்திருக்கினும் சூத்திரனுள் பிரமம் வேறு, வைசியனுள் பிரமம் வேறு, க்ஷத்திரியனுள் பிரமம் வேறு, பிராமணனுள் பிரமம் வேறென்பேன்.

காரணம், சூத்திரனாகப் பிறந்தவன் வைசியனுக்கு ஏவல்செய்து அவனிடம் நற்சாட்சிப் பெறுவனேல், மறுபிறவியில் வைசியனாகப் பிறப்பான்.

வைசியனாகப் பிறந்தவன் க்ஷத்திரியனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சி பெறுவனேல் மறுபிறவியில் க்ஷத்திரியனாகப் பிறப்பான்.

க்ஷத்திரியனாகப் பிறந்தவன் பிராமணனுக்கு ஏவல் செய்து அவனிடம் நற்சாட்சிப் பெறுவனேல் மறு பிறவியில் பிராமணனாகப் பிறப்பான்.

என்பேன், எனக் கூறும் வேஷவேதாந்திகள் விசாரிணையால் அறிந்துள்ள பிரம்மத்தின் செயலையும், சாதிகளின் பிரிவையும் ஆராயுங்கால் சூத்திர பிரமம் வேறு, வைசிய பிரமம் வேறு, க்ஷத்திரிய பிரமம் வேறு, பிராமண பிரமம் வேறாகவுள்ளனபோலும்.

அவற்றிற்கு ஆதாரமாம் செட்டி பிரமம் வேறு, ஆச்சாரி பிரமம் வேறு, அவர்கள்பால் தூர நின்று தேறவிசாரிக்கும் பறையன் பிரமம் வேறுபோலும்.

இத்தியாதி சாதிபிரம்ம ஜமாத்து பிரம்மவிசாரிணைப் புருஷர்களுக்கு வேதபிரம், வேதாந்த பிரம்மவிசாரிணையுமாமோ.

வேதத்திற் கூறாத சாதியாசாரம் வேதாந்தத்திற் கூறவந்தது விந்தையேயாம். சூத்திர பிரம்மம் வைசியப் பிரம்மமாகிறதும், வைசியப்பிரம்மம் க்ஷத்திரியப்பிரம்மமாகிறதும், க்ஷத்திரியப்பிரம்மம் பிராம்மணப்பிரம்மமாகிறதுமாயின் பிராம்மணப் பிரம்மம் யாதாகுமோ விளங்கவில்லை.

சூத்திரனிலிருந்து மேலுமேலும் நோக்கி பிராம்மணனெனும் உயர்ந்த சாதியாகவும், பிராம்மண பிரம்மமுமாகவும் விளங்கியவன் கைதியாகி சிறைச்சாலைக்கு ஏகுவானாயின் (ஜெயில் வார்டர்களாகும்) பறை பிரம்மங்கள் பிராம்மண பிரம்மங்களை வேலைவாங்குகின்றார்கள்.

சூத்திரனினின்று வைசியனாகவும், வைசியனினின்று க்ஷத்திரியனாகவும், க்ஷத்திரியனினின்று பிராம்மணனாகவும் உயர்ந்து சிறக்கவேண்டிய சாதி வேதாந்தம், சிறைச்சாலைகளில் பரக்க விளங்குகின்றபடியால் உயர்ந்த பிறவியில் உழைத்துச்சென்ற உல்லாசமென்னை.

பிரம்மத்தால் சாதிப்பெயர் தோன்றிற்றா அன்றேல் கர்ம்மத்தால் சாதிப்பெயர்தோன்றிற்றா.

பிரம்மா முகத்தில் பிராம்மணன் தோன்றினான் என்பானாயின் பிராம்மணத்தி எம்முகத்திற் தோன்றினாள். இஃது வேதாந்தவிசாரிணையன்று, சித்தாந்த விசாரிணை யென்பார்போலும்.