பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 173


வேதாந்தத்திற்கு எதிரடை சித்தாந்தமாயின் வேதத்திற் கெதிரடை அபேதமென்பார்போலும்.

பாலிமொழியில் பிம்ம மென வழங்கி சகட மொழியில் பிரம்ம மெனுங் குணசந்திப்பெற்று ஞானவொளிவையும், அதைக்கண்டறியும் வழியையும், அதன் பலனையும் நன்குணராது, வீணே பொருளறியா பிரம்ம கதையால் மதக்கடைபரப்பி தாங்களறியாததும், தங்களை அடுத்தவர்கள் அறியாததுமாகிய வேதகதையென்றும் வேதாந்த கதையென்றும், நீதி கதையென்றும், சாதிகதையென்றும் வழங்கும் புத்தகங்களைப் பரப்பி அவற்றால் சீவிப்பவர்கள்பால் வேதாந்த விசாரணைச் செய்வதாயின், “பசியில்லா வரங்கொடுப்போம் பழையதிருந்தால் போடும்” என்பார்போல் தங்கள் சுயப்பிரயோசனங்களையும், சுசாதி அபிமானங்களை விருத்தி செய்வார்களன்றி யதார்த்த வேதாந்தம் விளக்க அறியார்கள்.

யதார்த்த வேதாந்தம் விளங்கவேண்டியவர்கள் சாதிபேதங்களையும், சமயபேதங்களையும் ஒழித்து பொய்ப்பொருளாசையை வெறுத்து யதார்த்த பிராம்மண நிலை அடைதல் வேண்டும்.

அஃது எக்கூட்டத்தோர்பால் சேர்ந்தடைய வேண்டுமென்பீரேல், ஆற்று நீர்களும், கால்வாய்நீர்களும், சாக்கடைநீர்களும், சாரளநீர்களும் சமுத்திரத்திற் சேர்ந்து சுத்தமடைவதுபோல், சாதிபேதத்தால் பொறாமெ நாற்றம், சமயபேதத்தால் விரோதநாற்றம், அடைந்தோர்கள் யாவரும் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பூர்வபௌத்தர்களை அடைவார்களாயின் சாதிநாற்றம், சமய நாற்றங்கள் யாவுமகன்று களங்கமற்ற சுத்தவிதயமுண்டடாகி சுயஞானமுற்று சுப்பிரவொளியாவார்கள்.

இன்னிலைக்கே பிம்மநிலையென்றும், பிரம்மநிலையென்றும், பிறவியற்ற நிலையென்றுங்கூறப்படும்.

இத்தகைய யதார்த்த வேதாந்த பாதையை விட்டு வேஷவேதாந்த பாதையாகும் சூத்திரனினின்று வைசியனாகப் பிறப்பதும், வைசியனினின்று க்ஷத்திரியனாகப் பிறப்பதும், க்ஷத்திரியனினின்று பிராமணனாகப் பிறப்பதும் பெரும் பொய்யேயாம்.

இஃது மெய்யாயின் க்ஷத்திரியர் வம்மிஷம் யாவையும் பரசுராமன் கருவறுத்து விட்டான் என்னும் கதையின் போக்கென்னை?

வேஷவேதாந்தம் சகலருக்கும் பொதுவாயின் சூத்திரன் தபசு செய்வதால் பிராமணர்களுக்கு அனந்தங் கெடுதி பூண்டாயதென்று இராமரிடங்கூற, இராமர் அம்பெய்தி தபசுசெய்துள்ள அச்சூத்திரனைக் கொன்றுவிட்டாரென்னும் கதையின் சாக்கென்னை.

இத்தியாதி மித்திரபேதக் கதைகள் யாவும் வேஷ வேதாந்திகள் சுயப்பிரயோசனத்திற்காய்த் தங்களை உயர்த்திக்கொண்டு பூர்வபௌத்தர்களைத் தலையெடுக்கவிடாமல் தாழ்த்துவதற்கேயாம்.

ஆதலின் அவனவன் துற்கன்மத்தால் துற்குணனாகவும், நற்கன்மத்தால் நற்குணனாகவும் பிறப்பானென்பது சத்தியமாகும்.

துற்கன்மத்தால் பிராம்மணனென்று பெயர் வைத்துக்கொண்டவன் சிறைச்சாலை சேருவதும், நற்கருமத்தால் பறையனென்று அழைக்கப்பெற்றவன் அவனை வேலைவாங்குவதுமாகியச் செயலே முன்வினையின் பயனை விளக்கும் அநுபவக்காட்சியாம்.

- 3:9; ஆகஸ்டு 11. 1909 -


71. தமிழன் பத்திரிகை சுதேசிகளுக்காகப் பேசுகிறதில்லையாம்

அந்தோ! நாம் சுதேசிகளை தூற்றுவதற்கும், பரதேசிகளை போற்றுவதற்கும் வந்தோமில்லை. சகலமக்களின் சுகங்களைக்கருதி தங்களது நீதியை செலுத்துகிறவர்கள் யாரோ அவர்களைப் போற்றியும், ஏற்றியும் கொண்டாடுவோம். இதுவே எமது சத்தியதன்மமாகும்.