பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214 / அயோத்திதாசர் சிந்தனைகள்


98. சுதேசக் கப்பலென்றுதான் பெயர் கொடுக்கவேண்டுமோ

நாம் சுதேசமென்று எப்போது பிரிக்கின்றோமோ அப்போதே புறதேசமென்பது சொல்லாமலே ஏற்படுகின்றது.

இத்தகைய ஏற்பாட்டில் ஒன்றை ஆரம்பிக்கும்போதே ஐரோப்பியர்களை ஓர் விரோதிகளைப் போல முன்னில் ஏற்படுத்திக்கொண்டு வியாபாரத்தை நடத்துவதினால் மிரண்டவன்கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயென்பது போல் விரோதிகளாயெண்ணிக் கொண்டவர்கள் யாதொரு தீங்கு செய்யாவிடினும் அவ்வெண்ணமே தங்களைத் தீங்குகளில் ஆழ்த்தி விடுகின்றது.

நாமும் நம்முடைய தேசத்தோரும் எத்தால் வாழலாமென்றால் “ஒத்தால் வாழலா” மென்பது பழமொழி. அவ்வகை மனமொத்து வாழும் வாழ்க்கை வியாபாரத்தை விடுத்து நம்முடைய தேசத்தைக் கல்வியிலுங் கைத்தொழிலிலும் விருத்திக்குக் கொண்டுவந்து சுகசீவனங்களைக் காட்டிவரும் ஐரோப்பியர்களை நாம் எதிரிகளாக எண்ணுவது இரவு முழுவதும் சிவபுராணங் கேட்டு விடிந்தவுடன் சிவன்கோவில்களை இடிப்பதற்கொக்கும்.

ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பு இவ்விடம் தோணிகளென்றும், படகுகளென்றும், பாய்க்கப்பல்களென்றும் நடத்திவந்த திராவிடர்கள் இவ்வகை எதிரிகளை ஏற்படுத்திக் கொண்டா தங்கள் வியாபாரங்களை நடத்தியும் கப்பலையோட்டிக் கொண்டிருந்தார்கள். இல்லை, சகலதேசத்தோருடன் கலந்தும் சகோதிர ஐக்கியங்கொண்டும் அமேரிக்கா முதலிய பலதேசங்களுக்குஞ் சென்று தங்கள் வியாபாரவிருத்தி செய்திருக்கின்றார்கள்.

தற்காலம் ஒரு நீராவிகப்பல் ஏற்படுத்தி அதன்மூலமாக வியாபாரஞ்செய்ய ஏற்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே எதிரிகளுண்டென்னும் ஓர்க் கூச்சலை ஏற்படுத்திக் கொண்டு வியாபாரத்தை நடத்த முயல்வது வியாபாரத்தின் வழியாகக் காணவில்லை.

ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா முதலிய தேசங்களில் எத்தனையோ வகை வியாபாரங்களை உண்டு செய்து கோடி கோடி கணக்கான திரவியங்களை சேர்க்கின்றார்களே அவர்களில் யாரேனும் சுதேசஸ்டீமர், சுதேசமில், சுதேச ஷாப்பெனப் பெயர்வைத்துக் கொண்டிருக்கின்றார்களா.

காரணந் துரும்புங் கலத்தண்ணீரைத் தேக்குமென்னும் பழமொழியிருக்க பெருந்தூலம் ஓர் ஆற்றையே மடக்குமென்பது அறியாச் செயலோ. இவர்களுக்கு முன்பு இலட்சுமி ஸ்டீமரென்றும், இராமன் ஸ்டீரென்றும் ஒவ்வோர் பெயர்களைக்கொடுத்து நடத்திவந்தார்களே அவைகளெல்லாம் சீரான நடை பெறவில்லையா. சுதேச ஸ்டீமரென்று ஏற்படுத்திக்கொண்டு அதற்கு எதிரியும் உண்டென்று கூறுவதினால் தான் இது நடைபெறுமே விளங்கவில்லை.

ஓர் வீட்டிற்கு உடையவனை சொத்தக்காரனென்று சொல்லலாமா, அவ்வீட்டிற்கு வாடகை செலுத்திக் குடியிருப்பவனை சொந்தக்காரனென்று சொல்லலாமா. பிரிட்டிஷ் அரசருக்கு வரியிறை செலுத்தி குடியிருப்பவர்களாகிய நாம் சுதேசி சுதேசியென வீண் கூச்சலிடுவதுடன் ஐரோப்பயிர்களையே ஓர் எதிரிகளாயெண்ணிக் கொண்டு வியாபாரத்தை நடத்துவது விருத்திக்கே கேட்டை விளைக்கும்.

நமது இந்தியாவிற்குள் அனந்த வங்காளிகளும், பாரசீகரும், திராவிட செட்டிகளும் எத்தனையோ கம்பெனிகளை வைத்து நடத்திவருகின்றார்களே அவர்களேனும் சுதேசி சுதேசியென்று கூறிக்கொண்டு யாரேனும் எதிரிகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டு தங்கள் கம்பெனிகளை நடத்துகின்றார்களா.

இந்தியர் நடத்தி சுகம்பெறக் கோரிய கம்பெனிகளையேனும், சுகம்பெற்றுவருங் கம்பெனிகளையேனும் பிரிட்டிஷ் கவர்ன்மென்டாரேனும், மற்ற ஐரோப்பியர்களேனுந் தடுத்துக்கெடுத்திருக்கின்றார்களா, இல்லையே. சகலவிருத்திக்கும் நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜரீகமே ஆதாரமாகவும்