பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புரை / xxvii

ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தனர் - இது தவிர்க்க முடியாத நிலை எனலாம், பகைமையல்ல என்றும் உறுதியாகக் கூறலாம்).

தமிழையும் தருமத்தையும் நன்கு கற்றுத் தெளிந்து நாடும் மக்களும் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்தார்வத்தோடு உழைக்க வந்த அவர், கருத்துகளனைத்தையும் இலக்கியம், வரலாறு, அறநெறி ஆகியவைகளிலிருந்தே தேர்ந்தெடுத்துக்கொண்டார் என்பதை அவர் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த கொள்கைகளிலிருந்து அறியலாம்.

அயோத்திதாசரின் அறிவு ஆற்றல்களை அவர் காலத்திய பெருமக்கள் ஒரு சிலரின் புகழுரைகளிலிருந்து அறியலாம். சான்றாக:

செந்தமிழ்க் குடியில் வந்தவ னெவனோ
இளமையிற் கற்றார் உளம்வழி நின்று
நூல்பல கற்ற சால்பின னெவனோ
ஈங்குளோர் புகழ் ஓங்கி நாடோறும்
வல்லவர் போற்றுங் கல்விமா னெவனோ
இல்லற மென்று நல்லற மேற்றே
மக்கட் பேறோடு மிக்க அன்பின்
விருந்தினை யோம்பி யிருந்தவ னெவனோ
செந்தமிழ் பூண்ட அந்தண னெவனோ
பொறுமைக் கேயொரு உறைவிட மாக
அண்டினர்ப் புரக்கும் அயோத்தி தாச
பண்டிதப் பெயரைக் கொண்டவ னெவனோ

(அயோத்திதாசரின் வீடு பேற்றின் போது 1914இல் திரு.வி.க. அவர்களால் எழுதப்பட்ட ‘இரங்கற்பா’விலிருந்து ஒரு பகுதி)

ஆகம் புராண மிதிகாச மறை கோசங்கள்
அத்வைதம் வசிட்டத்வைதம்
அமண முனிவர்கள் பஞ்சகாவியம் கலைஞானம்
ஆயுர்வேதம் தத்துவம்
யோக நிலை சாத்திரம் சித்தர்நூல் பக்தி நெறி
யுகமொடு பலதுமாய்ந்து
வாகை தயை பொறை கடைப்படி மனத்திடன் வாய்மை
வாய்ந்ததொரு வரக் கவிஞனாய்

(புலவர் பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை, மகாவிகடதூதன் பத்திரிகையின் ஆசிரியர். பன்னூல் ஆசிரியர் வீஅ.ராமச்சந்தர புலவர், தங்கவயல் அறவர் இநா. ஐயாக்கண்ணு புலவர் போன்றோர்களின் இரங்கற்பாக்களும் குறிப்பிடத்தக்கன. தமிழன் -17.6.1914).

என்றெல்லாம் புகழப் படுவதிலிருந்து பண்டிதர் அயோத்திதாசரின் புலமையை அறியலாம். தமிழறிந்த மா மனிதராய், அறிவுச் செழுமையினராய், பகுத்தறியும் பண்பினராய், காலத்தை உணர்ந்த தொலை நோக்கராய் திகழ்ந்த அவர், அற நூல்களைக் கற்றறிந்தும், போதித்தும், எழுதியும் அன்பு பூண்ட அந்தணராய்த் திகழ்ந்தார்.

அவரது அறிவாற்றல்களுக்கு அவரின் நூல்கள், சிறப்புரைகள், ஆராய்ச்சிகள், அவரால் 1907இலிருந்து 1914 வரை நடத்தப்பட்ட தமிழன் வார ஏடு ஆகியவை சான்றுகளாகும். சித்தர்களின் சித்தாந்தத்தையும், பக்திநெறியின் நீக்குப் போக்கையும் அறிந்தவராகவும் ஆயுர்வேத மருத்துவமும், கலையறிவும் கொண்டு கவிஞராய் வாழ்ந்த அவர் தமிழர், தமிழைக் கற்றவர், தமிழறத்தைப் பேணிய அந்தணர் என்றால் மிகையாகாது.