பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஊரையும் பதிவு செய்வதுடன் தகுந்த ஓர் ஜாமீன் கொடுத்து கடையை வைக்கவேண்டியது.

மார்வாடி தான் கணக்குவைக்கும் புத்தகத்தை போலீஸ் ஆபீசரிடங் காண்பித்து அப்புத்தகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு அக்கணக்கு புத்தகத்திலேயே தன்னுடைய வரவு சிலவு கணக்குகளை பதிந்துவரவேண்டியது.

பொருள் வைத்துப் பணம் வாங்கிய ஏழைகள் வட்டியும், முதலும் கொண்டுவந்து கொடுத்த இரண்டொரு தினத்தில் நகையை செலுத்திவிட வேண்டியதென்னும் ஏற்பாட்டைக் கருணை தங்கிய கமிஷனரவர்கள் ஏற்படுத்திவைப்பாராயின் ஏழைக் குடிகள் யாவரும் ஈடேறி சுகம் பெறுவார்கள்.

- 3:35; பிப்ரவரி 9, 1910 -


112. கொடிது கொடிது இராஜதுரோகங் கொடிது

குலத்துரோகம் குருத்துரோகம் இரண்டும் செய்தவரைச் சாரும். இராஜதுரோகமோவெனில் தேசக் குடிகளையே சாருமென்பது திண்ணம்.

ஆதலின் இந்தியசோதிதரர்களே, நமது இந்திர நாடானது தெய்வ விசுவாசத்திலும், குரு விசுவாசத்திலும், இராஜ விசுவாசத்திலும், குடும்ப விசுவாசத்திலும், சிநேக விசுவாசத்திலும் மிக்கோரென சகலருங் கொண்டாடப் பெற்றிருந்தது.

இராஜ விசுவாசத்தை எவ்வகையால் விளக்கிவந்தார்களென்னில், சுதேச அரசர்கள் தேச க்ஷேமத்தையும், குடிகளின் சுகத்தையுங் காணவேண்டுமென்னும் சாந்த அறிகுறியாய் வெண்பிறைமுடி, வெண்ணங்கி, வெள்ளைக்குதிரை அல்லது வெள்ளையானைமீதேறி வெண்சாமறைவீச வெள்ளைக்குடை வெள்ளை கொடி பிடித்து ஊர்வலம் வருவது வழக்கமாகும். அவற்றை அறிந்த குடிகள் யாவரும் வீதிகளெங்கும் சுத்தஞ்செய்து பழய மணல்களை வாரி எறிந்துவிட்டு புது மணல்களைப் பரப்பி அரசிலை தோரணங்கள் கட்டி வாழை கமுகுகள் நாட்டி வீதிகளெங்கும் வாசனைப் புகைகளிட்டு அரசன் மாடவீதிகளாகும் இராஜபாட்டை வருங்கால் இஸ்திரீகளும் புருஷர்களும் வெளிவந்து கற்பூர ஆலாத்தி ஏந்தியும் கன்னச்சாந்தாகும் ஆலங்களேந்தியும் அரசனை வாழ்த்துதல் கூறி மயில்விசிறி ஆலவட்டங்களால் விசிரியும் அரசன் யாதுகுறைவுமின்றி பல்லாண்டு வாழ்கவென மங்களங்கள் வாழ்த்துதல் கூறி குடிகளுக்குள்ள இராஜவிசுவாசத்தைக் காட்டுதலும்; அரசனோ குடிகளுக்குற்ற குறைகளை நீக்கி அன்புடன் ஆதரித்துவருவதும் பூர்வ வழக்கமாயிருந்தது.

பூர்வ பௌத்த தர்மகாலத்தில் அரசர்களைச் செய்துவந்த உற்சாகங்களையே நாளதுவரையில் கோயில் என்னும் அரசன் மனையினின்று வீதிவலக் கொண்டாட்டத்தை சுவாமி உச்சவம் சுவாமி உச்சவமென வழங்கி வீணுச்சாகங் கொண்டாடி வருகின்றார்கள்.

இத்தியாதி அநுபவங்களை உணர்ந்த நாம் இராஜபக்தி, தெய்வபக்தி, குருபக்தி குடும்பபக்தி யாவையும் ஒழித்து உன் சாதி பெரிது என் சாதி பெரிதென்னும் பெரியசாதி சண்டைகளையும்; உன்சாமி பெரிது என்சாமி பெரிதென்னும் பொய்மதச் சண்டைகளையும் நாளுக்குநாள் பெருக்கி ஒற்றுமெய்க் கேடடைந்து ஒருவருக்கொருவர் உறுமிக்கொண்டு நிற்கும் பொறாமெய்ச்சொல் போராது இராஜதுரோகிகளென்னும் பெயர்களையும் ஏற்பது நியாயமாமோ.

இத்தகைய வித்தையும், புத்தியும், யீகைப்பும், நீதியுமமைந்த ராஜரீகம் உலகெங்குந் தேடிடினும் கிடைக்குமோ, ஒருக்காலும் கிடையா.

சாதிநாற்றம், சமய நாற்றமென்னும் இருவகைக் கேட்டினால் பிரிந்து நிற்போரைத் தங்கள் ஒருகுடைநீழலில் நிறுத்தி ஒற்றுமெயும், சுகமுமடையச் செய்துவருவது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. ஒருவரோடொருவர் சேர்ந்து கப்பலேறி மறுதேசஞ்சென்று பொருள் சம்பாதித்து சுகம் பெறச்செய்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. ஒருதேச விளைவு தானியங்களை இரயிலிலேற்றி