பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 245


இவர்கள் குடிகளிடத்து வரியிறைகொண்டு படைகளைக் காப்பதினால் இறைவன், இறையவனென்றும் வழங்கிவருகின்றார்கள். இத்தகைய இறைவர்கள் உபாயமே நான்கு வகைப்படும். அதாவது சாம, தான, பேத, தண்டமென்பவைகளேயாம். இவற்றுள் சாமமாவது சமாதானத்துடன் மற்றோர் தேசத்தைக் கைப்பற்றுதலும், சமாதானத்துடன் குடிகளையாளுவதுமேயாம். தானமென்பது வேற்றரசர்களால் தங்கள் தேசத்தை தானமாகக் கொடுக்கப்பெற்றுக் கொள்ளுதலும், குடிகள் வரியிறையை ஆனந்தமாகக் கொடுக்க வாங்கிக்கொள்ளுதலுமேயாம். பேதமென்பது வேற்றரசர்களை தங்கள் பேதிப்பால் அடக்கி ஆளுவதும், குடிகளை தங்களச்சத்தால் சீர்திருத்துவதுமேயாம். தண்டமென்பது மேற்குறித்த மூன்றுவகையாலும் இசையாத வேற்றரசர்களை தண்டித்தலும், குடிகளை மீறவிடாது அடங்கியாளுவதேயாகும்.

இந்நான்குவகை உபாயமும் பூர்வபெளத்தமார்க்கத்தோர் குறிப்பிட்டவைகளாயிருப்பினும் தற்கால அநுபவமாக நடாத்தி வருகின்றவர்கள் கனந்தங்கிய பிரிட்டிஷ் அரசாட்சியோரேயயாம். இத்தகைய உபாயவிருத்தியில் சாம, தான, பேத, தண்டத்தைக் கொடுப்போரும், தேசசீர்திருத்த சுகவிருத்தியில் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்தோருமாகிய பிரிட்டிஷ் அரசர் நமது இந்திரர் தேசத்திற்குக் கோனாக வந்தமைந்தது குடிகளின் பூர்வபுண்ணியமேயாம்.

அதாவது இருநூறு வருடங்களுக்கு முன்பிருந்த கள்ளர்கள் பயமுங் சாமாட்டிகள் பயமும் தங்களுக்குத் தாங்களே பெரியசாதிகளென்று சொல்லிக் கொள்ளுவோர்கள் பயமும், போட்டிகளின் பயமும், வீதிவொழுங்கில்லா பயமும், நீதிவொழுங்கில்லா பயமும், வஞ்சகர்களின் பயமும், பஞ்சகால பயமும் கிடையாவாம். காரணம், பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரமும் பாதுகாப்புமேயாகும்.

இத்தகைய அன்பும், பாதுகாப்பும் நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியில் வாழும் குடிகளோ நற்குடிகளென்னும் பேரெடுத்தல்வேண்டும். அதாவது, நீதியும் நெறியும் கருணையும் அமைந்த அரசாட்சியின் கீழ் வாழுங் குடிகள் அன்பும், ஆறுதலும், இராஜவிசுவாசமுமமைந்து வாழ்தல் வேண்டும். அத்தகைய வாழ்க்கையே இராஜாங்கத்திற்கு ஆறுதலையும் குடிகளுக்கு இன்பத்தைப்பும் பயக்கும்.

இத்தகைய பேரானந்த ராஜரீகத்தின் கீழ் வாழுங் குடிகள் அப்பேரானந்த நீதி நெறியிலொழுகாது தங்களுக்குள்ள பொறாமெய், குடிகெடுப்பு. வஞ்சினம், பொருளாசை, முதலிய துற்கிரித்தியத்தில் ஒழுகுவார்களாயின் அவர்களை சீர்திருத்தி ஆளும் பொருட்டு தங்கள் செங்கோலை ஓர்புறம் சாற்றிவிட்டு கொடுங்கோலைத் கையிலேந்திக் கொள்ளுகின்றார்கள். கொடுங்கோலைத் கையிலேந்திய பின்னர் தங்களை ராஜவிசுவாசிகளென நடித்துக்காட்டுவதினாற் பயனுண்டோ, வீண் விசுவாசிகளென்றே ஏற்பர். யாதார்த்த விசுவாசி ஆளாயிருப்பார்களாயின் செங்கோல் உலாவுங்கால் தங்களிப்பையும் பிரிட்டிஷ் ஆட்சியின் நன்றியையும் சிந்தித்தல் வேண்டும். அங்ஙனமின்றி சிற்சில் நன்றிகெட்டக் குடிகளின் கெடு எண்ணத்தைக் கண்டித்து சீர் திருத்துமாறு கொடுங்கோலேந்திய பின்னர் கோன் மீது குறை கூறுவது குடிகளுக்கு அழகின்றயாம்.

- 3:42; மார்ச் 30, 1910 -


125. வானுங் குடியும்

வானென்று சொல்லும் வார்த்தையின் பொருள் சருவ சீவர்களையும் வளர்க்கும் அமுதமென்று கூறப்படும்.

அதாவது வானென்னும் மழையானது பூமியிற் பெய்யாவிடின் புல் பூண்டுகள் தோன்றுவதில்லை. புற்பூண்டுகள் தோன்றாவிடின் புழுக்கீடாதிகள் தோன்றுவதில்லை. புழுக்கீடாதிகள் தோன்றாவிடின் பட்சி, மட்சங்கள் தோன்றுவதில்லை. பட்சி, மட்சங்கள் தோன்றாவிடின் ஊர்வன, மிருகாதிகள்