பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 249

விரும்புவதாயின் மேற்கூறிய செங்கோல் மறைந்து கொடுங்கோல் தோன்றுமென்பதற்கு ஆட்சேபமிராவாம்.

காரணம், சொற்பதேசமாகிய பெஷாவாரில் நடந்தகலகத்தை அடக்கியாட்கொள்ள சக்தியற்றவர்கள் அனந்தசாதி அனந்தசமய அனந்த பாஷைமக்கள் நிறைந்த இந்துதேசக் குடிகளை அடக்கியாளுவர்களோ. அவ்வகை ஆளும் வல்லபம் இவர்களுக்குண்டோ, இல்லை. ஆதலின் வீணே சுயராஜ்ஜியம் வேண்டும், சுயராஜ்ஜியம் வேண்டுமென்னும் கூச்சலிட்டு வீண் விரோதத்தை சம்பாதித்துக்கொள்ளுவதினும் ஆங்கிலேயர்களுக்குள்ள வித்தை, புத்தி, சீகை, சன்மார்க்கமென்னும் செயல்கள் வேண்டுமென வாதிட்டு அவைகளைப் பெற்றுக்கொள்ளுவோமாயின் நமது தேசம் சிறப்படைவதுடன் நாமும் சுகம் பெற்று வாழ்வோம்.

- 3:43; ஏப்ரல் 6, 1910 -


128. இராஜ துரோகிகளை அடக்க கிளப்புகளும் கூட்டங்களும் ஏற்படவேண்டுமாம்

ஈதோர் விந்தைபோலும். 1970 ஏப்பிரல்மீ 1உ சுக்கிரவாரம் வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகையில் தற்காலம் தோன்றிவரும் இராஜதுரோகச் செயல்களுக்காய் அங்கங்கு கிளப்புகளும் கூட்டங்களும் வைத்து அவைகளைத் தடுக்கவேண்டுமென்பதாய் மிஸ்டர் சுரேந்திரநாத் பானர்ஜி அவர்களும், மிஸ்டர் சத்தியானந்தபோஸ் அவர்களும், மிஸ்டர் பிரிதிவிசந்திரராய் அவர்களும் மூன்றுபேரும் ஏகோபித்து சுற்றுக்கடிதங்கள் எழுதுவதாகக் கண்டிருந்தது.

இத்தகைய மூவரும் இந்தியாவெங்கும் சுதேசியமென்றும், வந்தேமாதரமென்றும் வீண் கூச்சல்களை எழுப்பி வீண் விரோதங்களை உண்டு செய்துவந்த கலகத்தில் தோன்றி கிளப்புகளை நியமிப்பதாக கூட்டங்கள் ஏற்படுத்தி இருப்பார்களாயின் தற்காலம் காராக்கிரகங்களில் துக்காக்கிரகர்களாய் இருப்போரெல்லாம் சுதேசத்தில் தங்கள் பந்து மித்திரர்களுடன் சுகத்தை அநுபவித்துக்கொண்டிருப்பார்கள். அக்காலத்திலில்லா இவ்வாலோசினை இராஜாங்கத்தோரே முயன்ற பின்னர் ஆலோசிப்பது அவலமேயாம்.

காரணம், இராஜாங்கத்தோர் இராஜ துரோகிகளின் கூட்டங்கள் எங்குளதென்றும், அவர்கள் யாரென்றும் கண்டுபிடிப்பதற்காய் வேண்டிய நூதன வேவுகார்களை நியமித்து வைத்திருப்பதுடன் தற்காலம் ஏற்படுத்தப்போகும் கிளப்புகளிலும் கூட்டங்களிலும் என்னென்ன சங்கதிகளைப் பேசப்போகின்றார்களென்று தெரிந்து வருவதற்கு இன்னுஞ் சில வேவுகளை நியமிப்பதற்கு நேரும். அந்நியமனத்தால் இராஜாங்கத் தோருக்கு தேகப் பிரயாசையும் பணச்சிலவுமே மிக்க நேருமன்றி அரசுகளுக்கு ஓர் ஆறுதலும் சுகமும் நேராது.

இராஜாங்கத்திற்கு ஆறுதலையும் குடிகளுக்கு சுகத்தையும் தேடிவைக்க முயலும் கனவான்கள் மிக்க ஆக்கத்திலும் ஜாக்கிரதையிலுமிருந்து இராஜ துரோக கூட்டத்தோரும் இராஜதுரோக கருவிகள் செய்வோரும் எங்கெங்கு இருக்கின்றார்களென்றறிந்து உடனுக்குடன் பிடித்து இராஜாங்கத்தோருடன் ஒப்பித்துவிடுவார்கள். இராஜாங்கமும் ஆறுதல் பெறும். குடிகளும் யாதொரு கவலையுமின்றி சுகவாழ்க்கை பெறுவார்கள். பொல்லார்களை பிடித்து ஒப்பிவித்த நல்லோர்களுக்கும் கீர்த்தியுண்டாம்.

அங்ஙனமின்றி இராஜாங்கத்தாரே முயன்று இராஜதுரோகிகளை பிடிக்கத்தக்க ஏதுக்களைத் தேடவும், அதனை உணர்ந்த இராஜதுரோகிகள் நாளுக்குநாளடங்கியும் சுதேசியும் வந்தேமாதரமெனும் கூச்சல்கள் ஒடுங்கியும் வருங்கால் “தூர்ந்த மண்ணை வெட்டிக் கிளப்புவது போல்” மறந்துள்ள இராஜ துரோகச் செயலை அங்கங்கு தோன்றும் கிளப்புகளிலும், கூட்டங்களிலும் பேசிக்கொண்டே வருவார்களாயின் இந்த இராஜதுரோக மென்னும் வார்த்தையும், இராஜ துரோகமென்னும் செயலும் இன்னது இனிய தென்றறியாதோர் யாவரும் அறிந்து இராஜ விசுவாசத்தில்