பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 253


எந்த வழியால் ஓர் மனிதனை ஏற்றினரோ அந்தவழியால் இறக்குவதாயின் சுகமாகும். அங்ஙனமின்றி வேறுவழியால் இறக்குவோமென்பது வீண் வார்த்தையேயாம். உயர்ந்த வகுப்போரென்று சிலர் தங்களை உயர்த்திக்கொண்டு அவர்களே சிலரை தாழ்ந்தவகுப்போரெனத் தாழ்த்தி தாழ்ச்சியடையச் செய்துவந்தார்களோ அச்செயல்களை மட்டிலும் மாற்றிவிடுவார்களாயின் அதுவே தாழ்ந்த வகுப்போரை ஈடேற்ற வழியாகும். உயர்ந்த வகுப்போரென்று சொல்லிக் கொள்ளுவோர் தாழ்ந்தவகுப்போரை ஈடேற்றுவது முன் தாழ்த்தியவழியே உயர்த்துவதாகும்.

- 3:46 ஏப்ரல் 27, 1910 -


132. சென்னை முநிசபில் ஆபீஸ் சுதேசக் கமிஷனர்கள் குடிகள் மீது கண்ணோக்கம் வைத்தல் வேண்டும்

கண்ணோக்கம் வைப்பார்களோ வையார்களோ விளங்கவில்லை. காரணம், சுதேசிகளைக் கமிஷனர்களாக நியமிக்க வேண்டுமெனல் யாதெனில், கனந்தங்கிய ஆங்கிலேய துரைமக்களுக்கு சுதேசிகளின் சுபா அசுப காலங்களில் நடத்திவரும் காரியாதிகளும் காரியாதிகளுக்கடுத்த கால விவரங்களுந் தெரியாதாதலின் அந்தந்த டிவிஷன் சுதேசிகளில் ஒருவரைத் தெரிந்தெடுத்து அங்குள்ள சுதேசக் குடிகளின் குறைவு நிறைவுகளைக் கூட்டத்தில் எடுத்துப் பேசி அவர்களுக்கு வேண்டிய சுகாதாரங்களை செய்துவைப்பதும் மற்றும் வேண்டிய சுகாதாரங்களையும் ஆலோசித்து குறைக்கவேண்டிய விஷயங்களைக் குறைத்தும், பெருக்கவேண்டிய விஷயங்களைப் பெருக்கியும், சுகாதாரக் கூட்டத்தார் எடுத்த விஷயங்கள் சீர்பெறவும் அதனாற் குடிகளுக்கு சுகமும் ஆறுதலடையவும் நியமித்திருக்கின்றார்கள்.

அத்தகைய முநிசபில் கமிஷனராக நியமனம் பெறுவோரை குடிகளே முயன்று நியமிக்காது கமிஷனர்களாக ஏற்படுவோரே வீடுகடோரும் வாடகை வண்டிகளை வைத்துச் சென்று குடிகளை அழைத்துப் போய் என்பெயரை எழுதுங்கள் என்பெயரை எழுதுங்கோளெனத் தங்களுக்குத் தாங்களே தங்களை கமிஷனர்களாக நியமித்துக்கொள்ளுகின்றார்களன்றி குடிகளே முயன்று நியமிப்பதைக் காணோம்.

அங்ஙனம் தாங்களே தங்களை கமிஷனர்களாக நியமித்து கொள்ளுகிறபடியால் குடிகளின் குறைவு நிறைவுகளையும் வேண சுகங்களையும் விரும்பாது தங்கள் சுகங்களைமட்டிலும் பார்த்துக்கொண்டு போவதாக விளங்குகின்றது. குடிகளின் சுகத்தைக் கருதுவோர்களாயின் கமிஷனர்களாகத் தங்களை நியமித்துக்கொள்ள வேண்டுமென்று வண்டி கொணர்ந்து குடிகளை ஏற்றிச்சென்று கையெழுத்து வாங்கிய நாளில் கண்ட கமிஷனரை மற்றும் அந்த டிவிஷனில் கண்டிருப்பார்களா, இல்லையே.

அவர்கள் நியமனம் பெற்ற டிவிஷனில் அந்த வீட்டிற்கு வரியென்ன விதித்திருக்கின்றார், இந்த வீட்டிற்கு வரியென்ன விதித்திருக்கின்றார்களென்னும் விசாரிணையேனுமுண்டோ, அதுவுமில்லை. அந்த வீதிகளுக்கு விளக்கு என்னேரம் எரிகிறது, இந்த வீதிக்கு விளக்கு என்னேரம் எரிகிறதென்னும் பார்வையேனுமுண்டோ, அதுவுமில்லை. அந்த வீதிக்குத் தண்ணீர்க் குழாயுண்டா, தடையிராது நீர்வருத்துண்டா, நீர் சுத்தமுண்டாவென்னும் ஆராய்ச்சியேனுமுண்டா, அதுவுமில்லை. அந்த வீதியைப் பள்ளமேடு நீக்கி மநுக்களும், வண்டி குதிரைகளும் நடப்பதற்கு வசதி செய்துள்ளதா, குப்பைவண்டிகள் நிதம் சென்று சுத்தஞ்செய்துவருகின்றதா என்னும் பார்வையேனும் உண்டா, அதுவுமில்லை. அன்று கண்ட கமிஷனரை மறுவருடம் வரை காணாததினால் குடிகளின் சுகத்தைக் கருதாதவர்களென்றே விளங்குகின்றது.

சுதேசக் கமிஷனர்கள் சுதேசக் குடிகளுக்குள்ள சுபாசுபச் காலவரைகளையும் அதன் செயல்களையும் நோக்காது நடந்துவரும் அநுபவமே குடிகளை மனவருத்தத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது. அம்மனவருத்தங்களி லொன்றை