பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கூட்டத்தோரைப்போல் சுகாதாரக்கூட்டமும் ஒன்றிருத்தல் வேண்டுமென்னும் நன்னோக்கத்தால் ஏற்படுத்தியும் சுதேசக் குடிகளுக்குள்ள சுகக்கேடுகளை சுதேசக் கமிஷனர்களே கவனியாவிடில் வேறு யாவர் கவனிப்பாரோ விளங்கவில்லை.

சுகாதார சங்கத்தின் பிரசிடெண்டாக ஓர் ஐரோப்பியரை நியமித்திருப்பது போல் ஒவ்வோர் டிவிஷன் கமிஷனர்களுக்காகவும் ஒவ்வோர் ஐரோப்பியர்களையே நியமித்துவிடுவார்களாயின் சகல குடிகளும் பேதமின்றி சமரச சுகம் பெறுவார்கள். அதாவது ஓர் ஐரோப்பியர் டிவிஷன் கமிஷனராக ஏற்படுவாராயின் இவர்கள் சின்னசாதிப்பார்கள், அவர்கள் பெரியசாதியார்கள் என்னும் பேதமில்லாமலும், இவர்கள் தன்சாதியார் அவர்கள் புறசாதியாரென்னும் பாரபட்சமில்லாமலும், இவர்கள் ஏழைகள் அவர்கள் கனவான்களென்னும் நோக்கம் வையாமலும் சகலர் சுகங்களையும் தங்கள் சுகம்போற் கருதி அவரவர்கள் சிறுவீதிகளிலும் சென்று உள்ளக் குறைகளை நேரிற் கண்டு வேண சுகமளித்து ஏழைக்குடிகளைப் பாதுகாப்பார்கள். அங்ஙனமின்றி சாதித்தலைவர்களையே பெரும்பாலும் சுதேசக் கமிஷனர்களாக நியமிப்பதினால் அதுசின்னசாதியோர் வாசஞ்செய்யும் வீதி, இது பெரிய சாதியோர் வாசஞ்செய்யும் வீதியெனுங் கொடும் பேதத்தால் ஏழைகளுக்கு என்றும் சுகக்கேடும், கனவான்களுக்கு என்றென்றும் சுகாதாரம் போலும்.

“கனத்தின்பேரில் வளைவென்னும்” பழமொழிக்கிணங்க கனவான்களின் வாக்கு சீர்பெறுகுவதற்கும், ஏழைகளின் வாக்கு சீர்கெடுவதற்கே ஆதாரமாய் இருக்கின்றது. ஆதலின் கனந்தங்கிய சுதேசக் கமிஷனர்கள் யாவரும் ஏழைக் குடிகளின் மீது கண்ணோக்கம் வைத்து சுகாதாரம் அளிக்க வேண்டுகிறோம்.

- 4:4: சூலை 6, 1910 -


142. ஐரோப்பாவில் வாழும் துரைமக்கள் தங்கள்பேரன்பால் வாதிடும் பெரும் வாது

அதாவது நமது இந்திரதேசத்திலிருந்து ஐரோப்பாவுக்குச் சென்றுள்ள இந்தியர்களிற் சிலர் பிரிட்டிஷ் ஆட்சியார் எங்களை அப்படியாளுகிறார்கள் இப்படியாளுகிறார்களென்று பலவகைக் கூறுவதுமன்றி, எங்களுக்கு அந்தஸ்தான உத்தியோகங்கள் கொடுக்கிறதில்லை, எங்களைக் கனமாகப் பாராட்டுவதில்லையென்று கூறு மொழிகள் யாவும் மெய்யென்று நம்பிக்கொண்ட ஐரோப்பியர்களிற் சிலர் தங்கள் கருணை மிகுதியால் இந்தியர்கள் மீதில் அன்பு பாராட்டி, தங்கள் சுயசாதி ஐரோப்பியர்களிடம் வாதிட்டு இந்தியர்களுக்கு சுகந்தேடுகிறார்கள். ஈதன்றோ தங்களைப்போல் பிறரை நேசிக்குங் குணம். ஈதன்றோ தங்களைப்போல் சகலருஞ் சுகமடையக் கருதுங் கருணை.

இத்தகையக் கருணையுள்ளோரிடஞ்சென்று இந்தியரைப்பற்றி முறையிடுகிறவர்களும் ஐரோப்பியரின் குணங்களை வகித்திருப்பார்களாயின் இவர்கள் முறைபாடு சகலமுங் கைக்கூடி சுகம் பெறுவார்கள். இவர்களுக்கோ அவர்களுக்குள்ள கருணை கிடையாது. அவர்களுக்கோ இந்தியர்களின் சாதி பொறாமெயும் சமயகோஷ்டமுந் தெரியாது.

தற்காலம் இந்தியர்களுக்காகப் பரிந்து பேசும் ஐரோப்பியர்கள் இந்தியாவில் சாதித்தலைவர்களென்று பெயர் வைத்துக் கொண்டுள்ளவர்கள் மட்டிலும் சுகம்பெறல்வேண்டும் தங்களால் தாழ்ந்தசாதிகளென்று அழைக்கப் பெற்றவர்கள் என்றுந் தலையெடுக்கப்படாதென்று செய்து வருங் கொடூரச் செயல்களையும் இவர்களது வஞ்சகக் குணங்களையும் நேரில் கண்டறிவார்களாயின் அன்பும் சீவகாருண்யமும் அற்ற மூதேவிகள் முகத்திலும் விழிக்கப் போகாவென்று திருப்பிக்கொள்ளுவார்கள். இந்தியாவிலுள்ள சாதிக் கொடூரச் செயலால் அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகள் அல்லல்பட்டழிவதைக் கண்ணாரக் கண்டுவிடுவார்களாயின் இந்தியருக்குள் பெரிய உத்தியோகங்கள் கொடுக்கப்படாது என்றே வாதிடுவார்களன்றி கொடுக்கலாமென்னும் பரிதாபம்