பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 271

பணத்தைக்கொண்டு தெருப்பணியாந் திண்டாட்டஞ்செய்யாது அப்பணத்தைக் கொண்டு தங்கள் சந்ததியோருக்குக் கல்விவிருத்தியும் கைத்தொழில் விருத்தியும் செய்து வைக்க முயல்வார்களாயின் சிறுவர்களில் நிலைத்து அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வமெனத் தெரிந்து தாய்தந்தையர் திருப்பணியில் லயித்திருப்பார்கள். அங்ஙனமின்றி தங்கள் மதமே மதம், தங்கள் தேவனே தேவனென மதோன்மத்தங் கொண்டு மதக்கடை பரப்பி தெருப்பணி தொண்டுசெய்யுங்கோளென்போர் வார்த்தையை நம்பி துரைமக்கள் திருப்பணியால் சம்பாதித்தப் பணத்தை வீணே செலவிட்டு விழலுக்கிரைத்த நீர்போல் இரைப்பதாயின் தாங்களுங்கெட்டு தங்கள் சந்ததியோருங்கெட்டு வித்தையிலும் புத்தியிலுமிகுத்த சுகசீவிகளைக்கண்டு வெம்பவேண்டியதேயாம்.

துரைமக்களிடத் திருப்பணிச் செய்து சம்பாதிக்கும் பணவுதவியால் சாதிபேதமுள்ளோர் கருடஸ்தம்பம் வரையிலுமன்று அவர்களது மூலஸ்தானம்வரையிலும் சாதிபேதமற்ற திராவிடர் போனபோதிலும் விசேடவஸ்து யாதொன்றையும் அங்குக் காணப்போகிறதுமில்லை, யாதொரு சுகபலனும் அடையப்போகிறதுமில்லை. காணும் காட்சியும் அடையும் பலனும் யாதெனில், கற்பூரப் புகையால் இருளடைந்த அறையைக் காண்பதுவே காட்சியும், கற்பூரப் புகை அனலாலடையும் ஊஷ்ணமே கண்ட பலனாகும். கருடஸ்தம்பத்தருகிலுள்ளச் சிலைகளையும் மூலஸ்தம்ப இருளறையிலுள்ளச் சிலைகளையும் போய் பயந்து பயந்து பார்ப்பதினும் (மியூஜியம்) எனுங் கண்காட்சி கூடத்திற்குச்சென்று யாதொரு பயமுமின்றி ஆனந்தமாக நின்று பார்ப்பதாயின் கணக்கற்றக் கற்சிலைகளையும், கணக்கற்ற பொற்சிலைகளையுங் கண்டு ஆனந்தித்து வருவதுடன் இத்தேசத்தில் காணாதப் பொருட்களையெல்லாம் கண்டு களிக்கலாம். அங்குள்ள சாமிகளைக் காண்பதற்கு மத்திய துபாசிகளாம் கோவில் குருக்களும் வேண்டியதில்லை. பணச்செலவும் வேண்டியதில்லை. நீவிரென்ன சாதியெனக் கேழ்ப்பார் களென்னும் பயமுமில்லை. துரைமக்கள் திருப்பணியில் கண்ணோக்கம் வைத்து அவர்கள் அரண்மனையை சுத்திகரிப்பதே கோவில் திருப்பணியாகவும் சம்பாதிப்போர் மேலும் மேலும் அத்திருப்பணியில் அவர்கள் அரண்மனையைப் பிரகாசிக்கச் செய்வதே தூபதீபமாகவும், அவர்கள் தேகத்தை சுத்திகரிக்கச் செய்வதே திருமஞ்சனமாகவும், அவர்களுக்கு நல்லாடையணைந்து காண்பதே துயிலாடையாகவும், அவர்களுக்கு வேண்டிய புசிப்பூட்டி திருப்தியடையச் செய்வதே அன்னபிஷேகமாகவும், அவர்களுக்கு சுகநித்திரையளிப்பதே சயனமஞ்சனமெனக்கருதி துரைமக்கள் திருப்பணியை அவர்கள் மனங் குளிரவும் ஆனந்தமுறவும் செய்து வருவதாயின் அவர்களது கருணையே மேலுமேலும் பெருகி தங்கள் திருப்பணித் தொண்டர்களை சுகம்பெறச் செய்வதுடன் தொண்டர்களின் சந்ததியோர்களையுங் கல்வி விருத்தி செய்து முன்னுக்குக் கொண்டுவந்து விடுவார்கள். ஆதலின் ஆங்கிலேய அரண்மனை உத்தியோகஸ்தர்களாகும் சாதிபேதமற்ற திராவிடர்கள் சாதிபேதமுள்ளோர் மித்திர பேதத்திற்கு இசைந்து கருடஸ்தம்பம் மூலஸ்தம்பமென மகிழ்ந்து வீண் மோசம் போவார்களாயின், பூர்வங் கோலுங் குடுவையுங் கொடுத்ததினும், தற்காலமோ கோமணமுமின்றி ஓட்டிவிடுவார்கள். அதாவது தங்கள் சுதேசியம் நிலைபெறும் வரையில் நீங்களும் சுதேசிகள் தான் ஆனால் கருடஸ்தம்பம் வரையிலும் வரலாமென்று கூறி சுதேசியம் நிலைத்தவுடன் நீங்கள் பழையப் பறையர் பறையர்களேயென்று பழுக்கப் பார்த்துவிடுகிறார்கள்.

வெல்லமென்னும் வாயை நக்காதீர்கள். விஷமென்றறிந்தும் விழுங்காதீர்கள். ஆயிரவருடகாலமாக அலக்கழித்து தாங்கள் சீர்கெடுத்துமன்றி நூதனமாக இத்தேசத்திற் குடியேறுவோருக்குந் தாழ்த்தியாகக்கூறி தலையெடுக்கவிடாமற் செய்துவந்தவர்கள் தற்காலம் கருடஸ்தம்பம் வரையில் வரலாமென்று வரையறுத்து அத்து பிரிப்பது அவர்கள் சுயப்பிரயோசன சுதேசியச் செயல்களுக்கேயாகும். பௌத்தர்கள் வியாரங்களில் பௌத்தர்களுக்கு