பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வரக்கூடாதாயின் அந்நான்கு வகுப்புப் பெயர்களையும் பலகைகளில் எழுதிவைத்திருத்தல் வேண்டும். அங்ஙனமிராது முற்கூறிய மூவர்களை மட்டிலும் குறிப்பிட்டு வரைந்துள்ளபடியால் யாம் கூறிவரும் பூர்வ விரோதம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளற விளங்குவதாகும்.

பத்தாயிரம் இருபதினாயிரம் ரூபாய் செலவிட்டுக் கட்டிடங்கள் கட்டி இங்கிலீஷ் ஓட்டல்களென்றும் ரயில்வே ரிப்ரெஷ்மெண்ட்ரூம்களென்றும் வகுத்திருக்கும் இடங்களில் கிறீஸ்தவர், பஞ்சமர், என்றழைக்கும் படியான வகுப்பார்களே சுயம்பாகிகளாக இருந்து பல பதார்த்தங்களையும் வட்டித்து வைத்துக்கொண்டிருக்க, அவர்களிடம் பிராமணர்களென்று சொல்லிக் கொள்ளுவோர் முதல் சகலசாதியோரும் யாதொரு களங்கமுமின்றி ஆனந்தமாகப் புசித்து வருவது அநுபவக்காட்சியாயிருக்க, நாளொன்றுக்கு நாலணா ஐந்தணா காப்பி விற்கும் கடைவீதி ஓட்டல்களில் மட்டும் கிறீஸ்தவர்கள், பஞ்சமர்கள் வரக்கூடாதென்றுப் பலகையடித்திருப்பது விரோதச் சிந்தையேயாம். கடைவீதிகளில் காப்பி ஓட்டல்கள் வைத்திருப்பவர்களே கலங்காதீர்கள், கலங்காதீர்கள். பெருத்த ஓட்டல்களிலும், பெருத்த ரிப்ரெஷ்மென்டு ரூம்களிலும் பதார்த்தங்களை பாகஞ்செய்து வைத்துக்கொண்டு நன்கு வாசித்த பிராமணர்களுக்கும் நன்கு வாசித்த மற்ற சாதியோர்களுக்கும் அறுசுவை பதார்த்தங்களையும் முச்சுவைக் காப்பிகளையும் ஈய்ந்து வருகின்றவர்களாகியக் கிறிஸ்தவர்களும், பஞ்சமர்களென்போரும் மறந்தும் உங்கள் காப்பிவோட்டல்களுக்கு வரமாட்டார்கள். அவர்கள் கையினால் செய்யுங் காப்பி பானங்களுக்கும் தங்கள் கையினாற்செய்யுங் காப்பி பானங்களுக்கும் உள்ள பேதம் அதன் மணத்தினாலேயே கண்டுக்கொள்ளும் அநுபவம் அவர்களுக்குண்டு.

- 4:10; ஆகஸ்டு 17, 1910 -


150. இராஜதுவேஷிகளுக்குண்டாய சட்டமும் போலீசின் சீர்திருத்தங்களும்

நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் பார்லிமெண்டடார் இராஜத்துவேஷ சட்டவிஷயமாயும் போலீசின் சீர்திருத்த விஷயமாயும் சில ஆலோசனைகள் செய்துவருவதாகத் தெரிகின்றது.

அதாவது நமது ராஜாங்கத்தாரால் இராஜத்துரோகிகளை தண்டிக்கவேண்டிய ஓர் சட்டத்தை நிருமித்திருக்கின்றார்கள். அச்சட்டத்தைப் பற்றி நமது தேசத்தோர் முறையிட்டுக்கொள்ளுவது யாதெனில், இராஜ துரோகச் செயல்களைச் செய்வோர்கள் யாவரும் அடங்கிவிட்டார்கள், இனியச்சட்டம் வேண்டியதில்லை, எடுத்துவிடுவது நலமென்று கூறுகின்றார்கள். இது யாதாதாரமோ விளங்கவில்லை. இராஜதுரோகிகளுக்காய சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று முறையிடுவோருக்கு இராஜதுரோகிகள் இன்னார் இனியாரென்று தெரியவருமா, அவரவர்கள் இருப்பிடங்களைக் கண்டுளரா, இராஜ துரோகிகளின் எண்ணங்களையும் செயல்களையும் நன்குணர்ந்துக்கொண்டனர்களா, விளங்கவில்லை.

இராஜ துரோகிகளின் இத்தியாதி குணாகுணங்களையும் தற்காலம் ஏற்பட்ட சட்டத்தை எடுத்துவிடவேண்டுமென்று கூறுவோர் தெரிந்திருப்பார்களாயின் இராஜதுரோகிகள் இவர்களுக்குத் தெரிந்திருந்தும் அவர்களை அடக்காதிருந்த தோஷம் இவர்களைச் சாரும். தற்கால இராஜதுரோகிகளை தண்டிக்க ஏற்பட்ட சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று முறையிடுவோர்களுக்கு இராஜதுரோகிகள் இன்னா ரினியாரென்று தெரியாமலிருக்குமாயின் தங்களுக்குத் தெரிந்ததைபோல் இராஜதுரோகிகள் அடங்கிவிட்டார்கள், அதற்காய சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று கூறுவது நியாய விரோதமேயாகும். இராஜதுரோகிகளுக்காய சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென முறையிடும் பெரியோர் நியாய விரோதமிது, அநியாய விரோத