பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxvi / அயோத்திதாசர் சிந்தனைகள்


அன்னமிட்ட அன்னிய மனைவியை பெண்டாள ஆரம்பித்த சுவாமியைக் கும்பிடுவதினும் அன்னியன் தாரத்தை இச்சியாதீர்கள், ஏறெடுத்தும் பாராதீர்களென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ” (தமிழன் - 15.10.1913)

என்று தலை சிறந்த ஒழுக்கங்களில் ஐந்தில் மூன்றை முக்கியமாகக் கருதிச் சுட்டிக் காட்டுகிறார். மற்ற இரண்டு, மயக்கம் தரும் மதுவையும் அன்றாட வாழ்க்கையில் பேசும்பொய்யையும் அவர் குறிப்பிடாததற்குக் காரணம் இவைகுறைந்த கேட்டை விளைவிப்பதாகக் கருதினார் போலும். தொன்று தொட்டு அதிகாரமிக்க அரசனிலிருந்து, அன்றாடம் வியர்வை சிந்த உழைக்கும் தொழிலாளர் அயர்வைத் தீர்க்கும் தேவையாக பழக்கத்திலிருந்த மதுவை விதிவிலக்காக அவர் எண்ணியிருக்க மாட்டார். பழங்காலத்தில் தொழிலுக்குக் கூலியாக மதுவைக் கொடுக்கலாம் என்ற கவுடில்யரின் சட்டத்தை (கெளடலீயம் பொருணூல்) - பகுதி 7, பக். 315-334 அண்ணாமலை பல்கலைக் கழகம், மது குடிகேட்டைப் பற்றிய தலையங்கம் - தமிழன் 13.8.1913) அரசு ஊக்குவித்து நடைமுறைப்படுத்திய இந்த நாட்டு வழக்கத்தை எவ்வாறு எளிதாக மாற்ற முடியும் என்று அவர் கருதியிருக்கவும் கூடும். நன்மை விளைவிக்குமானால் பொய்யான சொற்களும் வாய்மையாகக் கருதத்தகும் (குறள்-292) என்ற வள்ளுவரின் கருத்துக்கேற்ப பொய்யைப் பற்றிக் கூறாமல் தவிர்த்தார் என்று எண்ணுதலும் தவறாகும். மது குடியையும் பொய்யையும் தன் தமிழன் பத்திரிகையில் கடுமையாகவே கண்டித்திருப்பது கவனத்திற்குரியதாகும். ஒழுங்கீனங்களில் கொலை, களவு, விபசாரம் ஆகியவை அதிக பழிக்கும் இழிவுக்கும் அழிவுக்கும் காரணமாகும் என்பதால் அவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தந்ததாக நாம் கொள்ளலாம்.

பகுத்தறிவதிலே பண்டிதர் அயோத்திதாசர் காட்டிய ஆர்வம் மகத்தானதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நல்ல சிந்தனையும் காலத்தால் முற்பட்டதுமாகும்.

மொழி

தமிழறிஞர்கள் போலவே சமணர்களாகிய பவுத்த, ஜைன அறிஞர்கள் தமிழுக்குச் சிறப்பான வகையில் தொண்டாற்றியிருக்கிறார்கள் என்பது தமிழகம் கண்ட உண்மையாகும். தமிழ்காலந்தோறும் மாற்றங்களோடு முன்னேறியிருப்பதும் நாம் காணும் வரலாறாகும். அத்தகைய தமிழ் அரசால் சீர்திருத்தம் பெறும்போது பொருள் மாறாமலிருக்க மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று அயோத்திதாசர் வலியுறுத்துகிறார்.

“மொழி என்னும் தமிழ் சொற்களில் வேற்றுமை எட்டும், திணை இரண்டும், பால் ஐந்தும், வழுக்கள் ஏழும், மாறுதல் எட்டும், காலம் மூன்றும், இடம் மூன்றும், அடி இரண்டும் கண்டு எழுதுவதே சொற்களின் சிறப்பாகும் என தமிழினையீன்று வளர்த்த தாதாக்களாகும் சமண முனிவர்களின் கருத்தாதலின் தற்கால அக்கருத்தை மேற்கொண்டு தமிழினைக் கேடற வளர்க்கவும் தோன்றிய... துரைத்தனத்தார் இலட்ச ரூபாய் செலவிட்டு வெளியிடும் தென்மொழி நிகண்டினை மிக்க ஆராய்ந்து வெளியிடுவார்களென்று நம்புகிறோம்.

“... தென்மொழியிலுள்ள வடமொழி கிடப்பை விளங்கக் கூறினும் மகமதியர் காலத்தில் கலந்துள்ள மொழிகளும், போர்ட்சுகீசியர்கள், ஐரோப்பியர் காலங்களில் கலந்த பலவகை மொழிகள் யாவற்றையும் கண்டு, நீக்க வேண்டியவைகளை நீக்கியும், சேர்க்க வேண்டியவைகளை சேர்த்தும்... பெரும் நிகண்டினை வெளியிடுதற்கு பல வித்வான்களை கலந்தே ஆராய்ந்து பதிப்பது மேலாம்” (தமிழன்- 12.31913).

என்று அவர் தமிழ் மொழி மீதுள்ள பற்றுடன் கூறுகிறார். அந்நிய ஆட்சிகளில் தமிழ் மொழியின் வளர்வும் தளர்வும், இயல்பாக பல் மொழி கலந்து விடுவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனவே தமிழறிந்த சான்றோர்கள் மூலமாக மட்டுமே ஆழ்ந்து அலசி வெளியிட வேண்டுமென்று எண்ணுகிறார். கடந்த காலத்தில் மத வாதிகளாலும் சாதி வெறியர்களாலும் தமிழ் நூல்கள் பட்டபாட்டையும் அவர் நினைவுகூறத் தவறவில்லை.