பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 317

இப்போதும் ஏழைக்குடிகள் அடைத்து வரும் கஷ்ட நஷ்டங்களைக் கண்டறியாது இந்துக்களெல்லாம் ஒன்றாகிவிட்டார்களென்று சாதித்தலைவர்களுக்காய் முகஸ்துதி பேசிவிட்டு போய்விட்டார் போலும். ஐரோப்பாவை விட்டு இந்தியாவிற்கு வந்தும் ஏழைக்குடிகளை நோக்காமற் போயது பரிதாபமேயாம்.

இத்தகையப்போக்கில் இங்கிலாண்டில் சிவில்செர்விஸ் பரிட்சை நிறைவேறுங்கால் இந்தியாவிலும் நடத்தவேண்டிய முயற்சி தேடவேண்டுமென்றும் ஓர் உச்சாகத்தை உண்டு செய்து போயிருக்கின்றாராம். இவ் உச்சாகக் கருத்தை இவர் சென்னை ராஜதானியில் கலெக்ட்டராயிருக்குங்கால் கூறுவரோ.

கலைக்ட்டரென்பது பிரிட்டிஷ் ஆட்சிபிரதம் உத்தியோகத்திலொன்றாவதுடன் கவர்னரது அந்தஸ்துக்கும் வரும் படியான உத்தியோகமாதலால் அதன்பரிட்சையும் அவ்வுத்தியோக நியமனமும் பிரிட்டிஷ் ஆட்சி பீடமாம் இங்கிலாந்திலேயே நடக்கவேண்டியதன்றி இந்தியாவில் நடத்துவது கூடாதகாரியமாகும். காரணமோவென்னில், இந்துதேசத்தை ஆண்டுரட்சித்து வரும் பிரிட்டிஷ் ஆட்சியோருக்கு சாதிபேதமென்னும் நூதனக் கட்டுப்பாடுகளும் பொறாமெ குணமும் அவர்களுக்குக் கிடையாது அத்தகையோர் பிரதம உத்தியோகம் பெறவேண்டியவர்கள் இங்கிலாந்திற்கே சென்று அவர்களுக்குள்ள பேதமற்றச் செயலிலும் தன்னவ ரன்னிய ரென்னும் பட்சபாதமற்ற குணத்திலும் சகல மனிதர்களையும் மனிதர்களாகப் பார்க்கும் நோக்கத்திலும் அடுத்தவர்களை ஆதரிக்கத்தக்கவன்பிலும் அவர்களுடன் பழகி அவர்களது மத்தியில் தங்கள் பரிட்சையிலுந் தேறி கலெக்ட்டர் உத்தியோகமும் பெற்று இந்தியாவிற்கு வந்து தங்களலுவலை நடத்துவார்களாயின் சாதிபேதமுள்ளோர் மத்தியில் சாதிபேத மில்லாமலும், சமயபேதமுள்ளோர் மத்தியில் சமயபேதமில்லாமலும் தங்கள் அலுவலை நடாத்தி பிரிட்டிஷ் ஆட்சியின் பெயருக்கும் கீர்த்திக்கும் வழுவற நிற்பார்கள்.

அங்ஙனமின்றி இந்தியாவில் கலெக்ட்டர் பரிட்சை நிறைவேறுமாயின் பிரிட்டிஷ் ஆட்சியின் சிறப்புக் குன்றி சாதியாசாரத்தின் சிறப்புமேலிட்டு சகல ஏழைமக்களும் சீர்கெட்டு தற்காலங் கூடிவரும் வித்தியா விவசாயங்களும் பட்டு பாழடைந்துபோமென்பது சத்தியமாதலின் பிரிட்டிஷ் ஆட்சியோர் கலெக்ட்டர் பரிட்சையை இந்தியாவில் நடத்தவிடாது இங்கிலாந்திலேயே நடத்தி சீர்பெறச் செய்து வருவார்களென்று நம்புகிறோம்.

- 4:31; சனவரி 17, 1911 -


184. பி.ஏ. பட்டம் எம்.எ. பட்டம் பெறுவது பெரிதா பூமியின் விருத்தி வித்தியாவிருத்தி செய்வது பெரிதா

பி.எ., எம்.எ. பட்ட விருத்தி தங்கள் பெண்டு பிள்ளைகளை மட்டிலுங்காப்பாற்றக் கூடியதும், பூமியின்விருத்தியும் வித்தியாவிருத்தியும் சகலசீவர்களையுங்காப்பாற்றக் கூடியதாகும். சகல சீவர்களையுங் காப்பாற்றக் கூடியதும் தேச சிறப்படையக்கூடியதுமாகியச் செயல்கள் மேலாயதா, பெண் பிள்ளைகளைமட்டிலுங் காப்பாற்றக்கூடியச் செயல்கள் மேலாயதா என்று ஆராயுங்கால் தேசச்சிறப்பும் குடிகள் சுகமும் விருத்தியடையக் கூடியச் செயல்களே மேலாயதாகும். இதற்குப் பகரமாய் ஜப்பான் தேசத்தோரும், அமேரிக்கா தேசத்தோரும் தங்கள் தங்கள் தேசங்களில் விவசாய விருத்திகளையும், வித்தியாவிருத்திகளையும், கைத்தொழில் விருத்திகளையுமே காரணமாகக்கருதி நடாத்திவருகின்றபடியால் அத்தேசத்திய மக்கள் குபேர சம்பத்துடையவர்களாயிருப்பதன்றி அன்னிய தேசத்தோரையும் ஆதரித்து வருகின்றார்கள்.

இத்தேசத்திலோ பி.எ., எம்.எ, முதலிய கெளரதா பட்டம் பெற்றவர்கள் மிக்கத்தோன்றினும், குபேர சம்பத்துள்ளோர் இல்லையென்பதே திண்ணம். கெளரதா பட்டம் பெற்றோர் பெருகியிருப்பினும் தன் தேசத்தோரைக் கார்க்கும் தனமுண்டோ அதுவுமில்லை. பட்டங்களினால் பயனில்லையென்பது பரக்க