பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கிருஷ்ணசாமியார் எனப் பகுதியின்றி விகுதியாகவே எழுதும்படி வேண்டுகிறோம்.

இந்துக்களென்போர் தங்கள் பெயர்களினீற்றில் சாதித் தொடர்மொழிகள் சேர்ப்பதுபோல் சேர்க்காமலும், அவர்கள் நெற்றிகளில் சாம்பற் சின்னமேனும், திருமண் சின்னமேனும் அணைவதுபோல் அணையாமலும் தவிர்த்துவிட வேண்டியது. சீலதீட்சைப் பெற்று பௌத்தர்களானவர்கள் இந்துக்கள் சேர்த்துக்கொள்ளும் சாதித்தொடர்மொழிகளையும், இந்துக்கள் அணைந்துக் கொள்ளும் சாம்பற் சின்னம், திருமண் சின்னம் யாவையும் சேர்க்கவும்படாது, வைக்கவும்படாதென உறுதியாக நம்பவும். சிலர் சுதேச பெளத்தாள் என எழுத ஆரம்பிப்பார்கள். அத்தகைய சுதேசமென்னு மொழியை எழுதவிடாமல் தமிழில் இந்திய பெளத்தாளென்றும், இங்கிலீஷில் இண்டியன் புட்டிஸ்டென்றும் எழுதும்படி சொல்லுவதில் 4-வது கலத்தில் “பெளத்தாளென்றும், 8-வது கலத்தில்” இந்திய பெளத்தாளென்று வரையும்படி செய்யவும்.

- 4:34; பிப்ரவரி 1, 1911 -


188. சத்தியவாதி யென வெளிதோன்றி அசத்தியும் பேசப்போமோ

ஒருநாளும் பேசலாகாது. அவ்வகைப் பேசுவதாயின் சத்தியவாதி யென்னும் பெயர் பொருந்தாது. விவேகமும் பெருந்தகைமெயும் வாய்த்த பரோடா மகாராஜனவர்களது சீர்திருத்த வாக்கியங்களில் கசிமலமாம் சாதியாசாரத்தை ஒழிக்க வேண்டுமென்பதும் ஓர் வாக்கியமாகும்.

அத்தகைய வாக்கியத்தைக் கேட்ட சத்தியவாதி என்பவர் துள்ளிக் குதித்து சாதியாசாரம் இந்தியாவில் மட்டுமன்று, உலகெங்கு முள்ளதென்றும் சாதியாசாரம் உள்ளபடியால் அனந்த சுகங்களுண்டென்றும், அவ்வகையில்லாவிடின் தேசங் கெட்டுப்போமென்றும், அமேரிக்கர்கள் சாதியாசாரத்தை மதிக்கின்றார்களென்றுங் கூறியுள்ளார்.

இவரது கூற்று எவ்வளவு சத்தியத்தை விளக்குகின்றது, எவ்வளவு அசத்தியத்தை விளக்குகின்றது என்பதை ஆய்ந்தறிவோமாக. இந்துக்களென்போர் சாதியாசாரமோவென்னில், அந்த ஐயர் வீட்டில் இந்த ஐயர் சாப்பிடமாட்டார், அந்த முதலியார் வீட்டில் இந்த முதலியார் சாப்பிட மாட்டார், அந்த நாயுடு வீட்டில் இந்த நாயுடு சாப்பிடமாட்டாரென்பார். ஐயா, ஐயரென்றால் ஒன்றுதானே, முதலியென்றால் ஒன்றுதானே, நாயுடென்றால் ஒன்றுதானே, ஏனவர்கள்வீட்டில் சாப்பிடப்போகாதென்றால், அவர் வேறு ஐயர், நாங்கள் வேறு ஐயர். அவர் வேறு முதலியார் நாங்கள் வேறு முதலியார், அவர் வேறு நாயுடு, நாங்கள் வேறு நாயுடு. ஆதலின் ஒருவர்வீட்டில் ஒருவர் சாப்பிட மாட்டோம் என்பார்கள்.

ஐரோப்பியர், அமேரிக்கர்களின் பிரிவினைகளோவென்னில், சக்கிலிவேலை செய்பவன்வீட்டில் அரசகுடும்பத்தான் பெண் கொள்ள மாட்டான். ஆனால் சக்கிலிவேலை செய்பவன் சமயல் வட்டித்து புசிப்பளிப்பானாயின் அரச குடும்பத்தான் பேதமின்றி புசிப்பான். சக்கிலிவேலை செய்பவன் பெண் ரூபவதியாயிருந்து அரசபுத்திரன் இச்சிப்பானாயின் களங்கமின்றி விவாகஞ் செய்துக் கொள்ளுவான். அக்காலத்தில் அரசகுடும்பத்தோர் யாவரும் வந்துசேர்ந்து பேதமின்றி புசிப்பெடுத்துக் கொள்ளுவார்கள். சக்கிலிவேலை செய்பவன் அத்தொழிலைவிட்டு நீங்கி நன்கு வாசித்து விவேகவிருத்தி அடைவானாயின் ஆலோசினை சங்கத்தோருடன் ஓரங்கமாக சேர்க்கப்படுவான். அரச குடும்பத்தோருடன் கலந்தும் புசிப்பான். இதுவே ஐரோப்பியர், அமேரிக்கர்களின் செயல்களாகும். இத்தகைய செயலை இந்துக்களது சாதியாசாரத்துடன் ஒப்பிடுவது கஸ்தூரிக்குங் கசிமலத்திற்கும் ஒப்பிடுவதொக்கும்.

நாளுக்குநாள் இந்துக்களுக்குள் சாதி நாற்றம் பெருகிக்கொண்டு வருகின்றபடியால் பிரிவினைகளும் பெருகி ஒருவருக்கொருவர் உபகாரமற்று