பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கொண்டுவரும் வண்டிகளும் கொண்டுபோகும் வண்டிகளும் சரியான பாதைகளில்லாது வண்டிகளின் இருசுகள் முறிந்து விழுந்து கிடப்பதும் மாடுகள் கால் முறிந்தும், கழுத்து முறிந்துங்கிடப்பதும் சரியற்ற பாதையில் கஷ்டத்துடன் கொண்டுபோகவும் கொண்டுவரவுமுள்ள சரக்குகளை கள்ளர்கள் அபகரிக்கவுமாகியக் கஷ்டங்களை சொல்லவும் போமோ. இத்தகையக் கஷ்டநஷ்டங்களைக் கண்டே வீதிகளின் வசதி இல்லையென்றே கூறுவாம்.

சு. பரதேசியாரே, செங்கற்பட்டிற்கும் சென்னைக்குந்தான் பிரிட்டிஷ் ஆட்சியார் வீதி சுகமளித்து கள்ளர்பயங்களை அகற்றியதுடன் வண்டிகளுக்கும், மாடுகளுக்கும், வியாபாரிகளுக்கும் சுகமளித்த போதினும் மற்றய தேசத்தோர்களுக்கும் வீதிசுகமளித்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியார்கள் தானோ.

ப. சுதேசியாரே. அசோகச் சக்கிரவர்த்தியார் ஆளுகை ஒழிந்து பௌத்தர்களின் வியாரங்களழிந்து பொய்க்குருக்களாம் வேஷப் பிராமணர்கள் வந்து தோன்றிய பின்னர் உள்ள வீதிகளும் பாழடைந்து இன்னதேசத்திற்கு இன்னவீதியே பாதையென்பதற்றுப் போயதை அக்காலங்களில் உண்டாய பஞ்சங்களே போதுஞ் சான்றாம்.

சு. பரதேசியாரே, பஞ்சங்களே சான்றென்று கூறியவை விளங்கவில்லையே.

ப. சுதேசியாரே, பெளத்த, சக்கிரவர்த்திகள் காலங்களுக்குப் பின்பு வீதி சுத்திகரிப்போரும், மக்களைத் தேடி நீதிபோதங் கூறுவோருமில்லாமற் போய்விட்டபடியால் வீதிகளின் போக்குகளும் வசதிகளுமற்று சென்னையில் பஞ்சமுண்டாமாயின் செங்கற்பட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாமலும் செங்கற்பட்டிற் பஞ்சமுண்டாமாயின் சித்தூரிலுள்ளவர்களுக்குத் தெரியாமலும், சித்தூரிற் பஞ்சமுண்டாமாயின் வேலாரிலுள்ளவர்களுக்குத் தெரியாமலும் அங்கங்குள்ளவர்கள் வேறுதேசஞ் சென்றுப் பிழைப்பதற்கும், வேறு தேசங்களினின்று தானியங்களைத் தருவித்து சீவர்களைக் காப்பதற்கும் வழியற்று அந்தந்த தேசமக்களும் அவரவர்களின் ஆடுமாடுகளும் அங்கங்கு மடிந்து தேசங்கள் பாழடைந்து வந்தது அநுபவமாகும். அதன்பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியார் வந்து தோன்றி இந்தியாவிலுள்ள தேசங்கள் யாவற்றிற்கும் சிறுபாதைகளும், பெரும் பாதைகளுமுண்டு செய்து கள்ளர் பயங்களை அகற்றி வண்டிகளுக்கும் மாடுகளுக்கும் சுகமளித்துவருவதுடன் நீராவி மரக்கலப் பாதைகளையும், இருப்புப் பாதைகளையும் தேசங்களெங்கும் பின்னலிட் டோடச்செய்து அந்தந்த தேசங்களிலுண்டாகும் பஞ்சங்களை அப்போதைக்கப்போதே நிவர்த்தித்து அவ்விடமுள்ள மக்களுக்கும் ஆடுமாடுகளுக்கும் மற்றும் சீவராசிகளுக்கும் உயிர்பிச்சையளித்துவருவது பிரிட்டிஷ் ஆட்சியால் உண்டாய பாதைகளின் சுகமன்றோ.

- 4:43; ஏப்ரல் 5, 1911 -

சு. பரதேசியாரே, தாம் கூறியபடி பிரிட்டிஷ் ஆட்சியார் இவ்விடம் வந்து தோன்றாவிடில் தேசங்களுக்குப் பாதைகளின்றி பலவகை இடுக்கங்களுக்கு ஏதுக்களுண்டாமோ.

ப. சுதேசியாரே, பிரிட்டிஷார் வந்து தோன்றி பலதேச பாதைகளை சீர்திருத்தியும் நகரங்களுக்குப் புறம்பாயுள்ள நாடுகளில் ஒரு கிராமத்தைவிட்டு மறு கிராமத்திற்குப் போவதற்கு வழி செய்துக் கொள்ள வகையற்று மாடு சேதமடைவதும் வண்டிகள் சேதமடைவதும் விவசாயிகள் கஷ்டமடைவதுமாகியச் செயல்களை நாளதுரையிற் காணலாமே.

சு. பரதேசியாரே, பிரிட்டிஷ் ஆட்சியார் செய்துவரும் பாதைகளின் வசதிகளைப் பார்த்திருந்தும் அவைபோல் செய்துக்கொள்ளலாகாதோ.

ப. சுதேசியாரே, சுயப் பிரயோசனத்தை நாடுவோருக்குப் பொதுப் பிரயோசனங்களில் மனம் நாடாதன்றோ.

சு. பரதேசியாரே, சுயப் பிரயோசனம் பொதுப்பிரயோசனமென்றா லென்னை.

ப. சுதேசியாரே, தற்காலம் இத்தேசத்தில் நூதனமாக உண்டாக்கிக்கொண்ட