பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 353

சாதி வித்தியாசங்களென்னும் பொய்வேஷங்களினால் ஒருவருக்கொருவரை உயர்த்திக்கொண்டும் ஒருவருக்கொருவரைத் தாழ்த்திக் கொண்டும் விரோதச்சிந்தையையே மென் மேலும் பெருக்கிக்கொண்டுள்ளவர் களாதலின் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களை மட்டிலும் பார்த்துக் கொண்டு ஏனையசாதியோர் யாதுசுகங்கெட்டு பாழடைந்தாலும் பார்த்துக் கொண்டேயிருப்பது இவர்களது சுவாசகுணமாதலின் பொதுப்பிரயோசனங்களைக் கனவிலுங் கருதமாட்டார்கள்.

சு. பரதேசியாரே, பொதுப் பிரயோசனத்தை நாடாதவர்களென்பீராயின் காங்கிரசென்றும், மகாஜன சபையென்றும் பெருங்கூட்டங்கள் கூடி ஏதேதோ காரியங்களை நடத்திவருகின்றார்களே அவைகள் யாவும் பொதுப் பிரயோசனங்களில் இல்லையோ.

ப. சுதேசியாரே, அதன் செயல்களை அநுபவத்தாலறிந்துக்கொள்ள வேண்டுமேயன்றி கூடுங் கூட்டங்களாலறிந்துக்கொள்ளப்போகாது. காரணமோவென்னில், இந்த நாஷனல் காங்கிரஸ் கமிட்டியோரென்பவர் இத்தனை வருஷகாலமாக நடத்திவருங் கூட்டங்களில் அறுபது லட்சத்திற்கும் மேற்பட்டக் குடிகள் அல்லலடைந்து சாதிபேதமென்னும் பொய்க்கட்டுப் பாட்டினால் அலக்கழிக்கப்பட்டு சீரழிந்துபோகின்றார்களே அவர்களது குறைகளைப்பற்றி ஏதேனும் இராஜாங்கத்தோருக்கு விளக்கி தங்களைப்போல் சுகம்பெறச் செய்திருக்கின்றார்களா இல்லையே. அதனால் தாங்கள் கூறியக்கூட்டங்களும் சுயப்பிரயோசனங்களை நாடியக் கூட்டங்களேயாகும்.

சு. பரதேசியாரே, அந்த அறுபது லட்ச மக்களும் தங்களுக்கத்தாங்களே ஏன் சீர்படலாகாது.

ப. சுதேசியாரே, இந்த கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் சகல சாதியோர்களைவிட அவர்கள்தான் முன்னுக்குவந்திருப்பார்கள். அவர்கள் மீதே கண்ணோக்கமாயிருந்து அவர்களை எவ்வகையாலும் மேனோக்க விடாமல் தடுத்துவருவதனால் எவ்வகையால் சீர்பெறுவார்கள்.

சு. பரதேசியாரே, அவர் சீரையும் மேலேற்றத்தையும் யார் தடுத்து தடுத்து கெடுத்துவருகின்றவர்கள்.

ப. சுதேசியாரே, அவர்களுக்குள் சாதிபேதமில்லா பெருந்தண்மெயிருக்கின்றபடியால் சாதிபேதமுள்ளோர் அவர்களை சீர்கெடுத்து வருகின்றார்கள்.

- 4:45; ஏப்ரல் 19, 1911 -

சு. பரதேசியாரே, சாதிபேதமுள்ளவர்களை சாதிபேதமில்லாதவர்கள் மேற்கொள்ளலாகாதோ.

ப. சுதேசியாரே, நாட்டு கிராமவாசிகளாயுள்ளவர்கள் நேட்டால், சிங்கப்பூர், மற்றுமுள்ளயிடங்களுக்குச் சென்று கஷ்டப்பட்டு பொருள் சம்பாதித்து இந்திய தேசம் வந்து பூமிகளை வாங்கிக்கொண்டு இருப்பதுடன் நகரவாசிகளாயுள்ளவர்கள் அன்பு நிறைந்த ஆங்கிலேய அருளினால் கல்விகற்றும், தக்கவுத்தியோகங்கள் பெற்றும் முன்னுக்கு வருகின்றார்கள். சாதிபேதமில்லா நாட்டுவாசிகளும், நகரவாசிகளும் இன்னும் சற்று முயற்சியெடுத்து முன்னுக்கு வந்துவிடுவார்களாயின் சாதிபேதமுள்ளோரை மேற்கொள்ளுவதுமட்டுமல்ல நாளெல்லாம் அவர்களுக்குச் செய்துவரும் இடுக்கங்களையும், துன்பங்களையும் மனதில்வைத்துக்கொண்டு இவர்களுக்கே எதிர் சத்துருக்களாக எழுவினும் எழுவர்.

சு. பரதேசியாரே, அவரவர்கள் செய்த தீவினைகளை அவரவர்களே அநுபவிப்பார்களென்னும் முதுமொழிபோல் அஃதெவ்வகையாகினுமாகட்டும் இந்த பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் அதிக வரிகளைப் போட்டு வாதிக்கின்றார்களே அது மிக்க கஷ்டமல்லவோ.

ப. ஆ! ஆ! சுதேசியாரே, உங்களது பயனற்றதும், தலைக்கால் தெரியாததுமாய் வரிகளைவிட பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் போட்டுள்ள வரிப் பெருக்கமாமோ; இல்லையே! கவர்ன்மெண்டார் வாங்கும் வரிகள் யாவும் தேசச்சீரையும், மக்கள் சுகத்தையுங் கருதி வாங்குவதாகும் சுதேசிகளாகியத்