பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 357

கீழே விழுந்துவிடுவானாயின் தனது கருணையற்ற செயலால் விலகி நின்றுக் கொண்டு அவனென்ன சாதி மனிதன், என்ன பாஷை மனிதன், எங்கிருப்பவனெனச் சொல்லிக்கொண்டே போய்விடுவானன்றி நம்மெயொத்த மனிதனாச்சுதே என்று ஈவு, இதக்கம் உண்டாகி அருகிற்சென்று ஆதரிக்கவே மாட்டான். அத்தகைய இதக்கமற்ற செயல் தோன்றுவதற்குக் காரணம் சாதிகர்வச் செயலும், மதகர்வச் செயலுமே ஆகும். ஆங்கிலேயர்களுக்குள்ள வித்தை, புத்தி, ஈகை, கருணை முதலியப் பெருக்கங்களோவென்னில், அவர்களுக்குள்ள சாதிபேதமென்னும் பொறாமெ குணமற்ற பெருந்தகைமெயும் மனிதர்களை மனிதர்களாக பாவிக்கும் சிறந்த குணமும் ஏழையாயிருப்பினும், வியாதியஸ்தனாய் இருப்பினும் அவனைத் தன்னைப் போல் நேசித்து பாதுகாக்கும் அன்பு நிறைந்துள்ளவர்களாதலின் அவர்களைக் கருணை நிறைந்தவர்களென்றே செயல்கண்டுரைக்கத்தகும்.

- 4:50; மே 24, 1911 -

சு. பரதேசியாரே, எவ்வாறாயினும் சுதேசக் குடிகள் மீது சுதேசிகளுக்கு கருணையில்லாமற்போமா.

ப. சுதேசியாரே, தங்கள் சுதேசிகளின் செயலைக் கண்டறிய வேண்டுமாயின் சுதேச ஏழைக்குடிகளை சுதேச உத்தியோகஸ்தர்கள் தனித்து வேலை வாங்குவதையும் ஓர் ஐரோப்பியர் அருகிலிருக்குங்கால் வேலை வாங்குவதையும் நேரில் காண்பீராயின் நன்கு விளங்குமே.

சு. பரதேசியாரே, சுதேச உத்தியோகஸ்தர்கள் தனித்திருக்குங்கால் ஏழைகளை எவ்வித வேலை வாங்குகின்றார்கள். ஓர் ஐரோப்பியர் அருகிலிருந்தால் எவ்வகையான வேலை வாங்குகின்றார்கள், விளங்கவில்லை.

ப. சுதேசியாரே, சுதேச ஏழைக்குடிகளை சுதேச உத்தியோகஸ்தர் தனித்திருந்து வேலைவாங்குங்கால் பெரிய சாதியென்றும் சாதிகர்வம், ஒன்று பெரிய உத்தியோகமென்னும் உத்தியோக கர்வம் இரண்டு, இவ்விரண்டையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஏழை ஊழியர்களை அடித்தும் வைதும் பலவகைத்துன்பஞ் செய்தும் ஏவல் வாங்குவார்கள். ஓர் ஐரோப்பியர் அருகிலிருப்பாராயின் சாதிகர்வம், உத்தியோக கர்வம் இரண்டையும் ஒடுக்கிக் கொண்டு தான் வாங்கவேண்டிய வேலைகளை மட்டிலும் சரிவர வாங்கிக்கொள்ளுவார். இதனால் சுதேசப் பெரிய உத்தியோகஸ்தர்களின் கருணை சுதேசக் குடிகள் மீதில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றதே.

சு. பரதேசியாரே, சுதேச ஏழைகள் மீது சுதேச உத்தியோகங்களுக்குக் கருணை இல்லாவிடில் அனந்த கிராமங்களில் சுதேசப்பெரிய உத்தியோகஸ்தர்கள் காரியாதிகளை நடாத்திவருவார்களோ.

ப. சுதேசியாரே, சுதேச உத்தியோகஸ்தர்கள் கருணை வைத்து கிராமக் குடிகளை கார்த்து வருகின்றார்களா என்பதை கிராம சுதேசிகளைக் கேட்டறிவதுடன் உத்தியோகஸ்தரிடமுள்ளத் தொகையையும் கண்டு அறிந்து கொள்ளுவீராயின் சுதேச கிராம வாசிகள் மீது சுதேச உத்தியோகஸ்தர்கள் கருணை வைத்துள்ளார்களா இல்லையா என்பதை எளிதிலறிந்து கொள்ளலாமே.

சு. பரதேசியாரே, சுதேச கிராமவாசிகள் சுதேச உத்தியோகஸ்தர்களால் பலவகைத் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள் என்று கேழ்விப்படுகிறேனாயினும் உள்ளத் தொகையால் எவ்வகைக் கண்டறிவது.

ப. சுதேசியாரே, ஓர் சுதேசிப் பத்துரூபா சம்பளமுள்ள உத்தியோகஸ்தன் பத்து வருஷத்தில் பத்தாயிரரூபாய் சம்பளத்தையுடையவனாகக் காண்பானாயின் அத்தொகை பத்து ரூபாய் சம்பளத்தில் சேர்ந்ததா அன்றேல் குடிகளை வஞ்சித்தும் மிரட்டியுந் துன்பப்படுத்தியும் சம்பாதித்ததாவென கூர்ந்தறிவதாயின் சுதேச உத்தியோகஸ்தர்களால் சுதேசக் குடிகளுக்குள்ளத் துன்பங்கள் நன்கு விளங்குமே.

- 4:51; மே 31, 1911 -