பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பெருங்கூட்டத்தோருக்கு விரோதமாகவே விளங்கும். நீதி நெறி வாய்மெயும் இராஜவிசுவாசமும் உள்ளக் குடிகள் யாவருக்கும் அவர் கூறியுள்ள மொழிகள் யாவும் நீதி மொழிகளென்றும், யதார்த்த மொழிகளென்றும் சீர்திருத்தங்களுக்கும் ஒற்றுமெய்க்குமாய ஏதுமொழிகளென்றே விளங்கும். கனந்தங்கிய ஆனிபீசென்ட் அம்மைக்கு இத்தேசத்து சாதித்தலைவர்களின் மேம்பாடுகளும், தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ளும் மாறுபாடுகளுந் தெரியாது தனது நல்லெண்ணத்துடன் ஜஸ்டிஸ் சங்கரநாயரைத் தங்களுடன் சேர்ந்துழைக்கும்படிக் கேட்டுக்கொண்ட சங்கதிக்கு சங்கரநாயர் தனக்குள்ள நல்லெண்ணத்தால் பின்னிட்டு நேரிடுங் குறைகளை முன்னிட்டே தெள்ளற விளங்குந் தேசோபகாரியாக விளங்காநின்றார்.

இத்தகைய தேசோபகாரியும், நடுநிலையவாதியும், களங்கமற்ற கியாதியுமானோரை பத்திரிகைகளில் வீண்குறைகூறுவது விருதாவேயாம்.

புட்டிஸ்ட் யூனிவர்சிட்டி என்பதற்கு ஆதார மூலபுருஷனுண்டு. கிறிஸ்டியன் யூனிவர்சிட்டி என்பதற்கு ஆதார மூலபுருஷனுண்டு. மகமதிய யூனிவர்சிட்டி என்பதற்கு ஆதார மூலபுருஷனுண்டு. இந்துவென்னும் யூனிவர்சிட்டிக்கு ஓர் கால் அந்தரத்தில் நின்று அல்லலடைந்து போமென்னும் அச்சங்கொண்டே அதில் சேராது அம்மனுக்கு அத்தியந்த கடிதம் எழுதிவிட்டார் போலும். காரணம் இந்துவென்னும் மொழிக்கு யதார்த்தப் பொருளற்றிருப்பினும் இந்துவென்பதை ஓர் பேழையாக்கி அதிலடங்கியுள்ளது சாதிவித்தியாச மூட்டைகளும், மதவித்தியாச மூட்டைகளென்றுங் கருதியேயாம்.

- 5:24; நவம்பர் 22, 1911 -


238. நமது இந்தியதேசச் சக்கிரவர்த்தியார் இந்தியாவிலேயே வந்து முடிசூட்டிக்கொள்ளும் வைபவகால விண்ணப்பம்

இந்தியதேசம் எங்கணும் வாழும் முப்பத்து மூன்று கோடி மக்களுள் ஆறுகோடி மக்கள் படும் அல்லலையும் மேற்சாதியோர் என்னும் வேஷக்காரர்களால் படுந் துன்பங்களையும் கருணைதங்கிய ராஜாங்கத்தில் சகல மனுக்களைப்போல் இவர்களும் முன்னேறுவதற்கு வழியில்லாமல் படுங் கஷ்டங்களையும் கண்ணாறக்கண்டு அவர்களின் கஷ்டநிஷ்டூரங்களை நீக்கி மற்ற மக்களைப்போல் இம்மக்களும் சீர்பெறவேண்டும் என்னும் நோக்கம் வைத்தோர் ஒருவருங்கிடையாது.

மாடுகளின்மீதேனும் குதிரைகளின்மீதேனுங் கருணைவைத்து கூட்டங்கூடி கழுத்தில் புண்ணுள்ள குதிரையை வண்டியிற் கட்டலாகாதென்னும் முடிவுசெய்து அதற்கென்ற காவலாளர்களையும் வைத்து பாதுகார்த்து வருகின்றார்கள்.

இந்த ஆறுகோடி மக்கள் கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல் தவிக்குந் தடைகளையும் நாளொன்றுக்கு ஓரணாவேனுங் கூலிகிடையாமல் உழைக்குங் கஷ்டங்களையும், கூலி போதாதென்று வேறு வேலைகளுக்குப் போய்விட்டாலும் வேலைக்கு போவாது நின்றுவிட்டாலும் முநிஷிப்புக்குச் சொல்லியும் மணியக்காரனுக்குச் சொல்லியும் தண்டனைக்குள்ளாக்குந் துன்பங்களையும், பொய்யாகிய சாதிக்கட்டுப்பாடுகளினால் இவர்களை எச்சுகமும் பெறவிடாது விரட்டித் துரத்துங் கேடுபாடுகளையும், கிராமத்தோர் துன்பங்களை சகிக்கமுடியாது பிரிட்டிஷ் அதிகாரிகளிடஞ்சென்று முறையிட்டுக்கொள்ள அவர்கள் அதை நேரில் வந்து விசாரியாது சாதித்தலைவர்களாம் முநிசிப்புக்கேனும் மணியக்காரனுக்கேனுந் தெரிவிப்பார்களாயின் அதற்கு ஏதேனுமோர் சாக்குப்போக்கைச் சொல்லிவிட்டு அதிகாரிகளிடம் முறையிட்டுக்கொண்ட ஏழைக்குடிகளை பலவகைத் துன்பங்களால் ஊரைவிட்டோட்டும் பரிதாபங்களையும் பண்ணையாளுக்குப் பாட்டன்காலத்தில் ஐந்து ரூபாய் கடன் கொடுத்து பேரன் பிள்ளை பேறுகாலம்