பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 395

ஒவ்வோர் மதப்புத்தகங்களிலும் திருடவேண்டிய கதைகளும் அங்கு நாய் குரைத்தால், மந்திரம்பண்ணுங்கதைகளும், குருபத்தினியைப் பெண்டாளும் கதைகளும், குருபத்தினியைப் பெண்டாளினும் ஓர் கொட்டையைக் கழுத்தில் கட்டிக்கொண்டால் அப்பாவம் நீங்கிவிடுமென்னுங் கதைகளும், சகோதிரனைக் கொல்லுங் கதைகளும், புத்திரிகளைப் பெண்டாளுங் கதைகளும், ஒருவன் மனைவியை மற்றொருவன் அழைத்துப்போய்விட்டால் அவனையும் அவன் பந்துமித்திரரையும் அவன் தேசத்தோரையுங்கொன்ற கதைகளையும், ஒரு சகோதிரன் தனக்கு சேரவேண்டிய பாகத்தைக் கொடாமற் போய்விடுவானாயின் அவனையும் அவனது குருக்களையும் அவனது பந்துமித்திரர்களையும் தேசத்தோர்களையுங் கொல்லுங் கதைகளையும், நேற்று முன்னானாள் மோட்சத்தை எட்டிப்பார்த்து வந்தவன் போல், எங்கள் சாமியை நம்பினாலே மோட்சமுண்டு மற்றசாமிகளால் நரகமுண்டென்னுங் கதைகளையும், சத்திபூசைக் கதைகளையும், புண்டரீக யாகக்கதைகளையும், தங்கள் தங்கள் முயற்சிகளாலாகாது மந்திரம் பண்ணுங்கதைகளையும், தங்களாலாகாது தங்கள் சாமிகளுக்கு மாட்டுபலி, மனிதபலி கொடுக்குங் கதைகளையும், தாங்கள் செய்துவந்த பாபங்கள் யாவையும் ஒன்றுசேர்ந்து ஓர் ஆட்டுக்கடா தலையிலேற்றிவைத்து அனுப்பிவிடும் கதைகளையும், உலகமக்கள் எல்லோருஞ் செய்த பாபங்களுக்கு பதிலாக ஒருவர் பாடுபட்டுவிட்டாரென்று கூறி பஞ்சமாபாதகங்களை அஞ்சாது செய்யத் தூண்டுங் கதைகளையும், குருக்களுக்கு தட்சணை தாம்பூலங் கொடுத்துவிட்டால் சகல பாபமும் நீங்கிவிடுமென்னுங் கதைகளையும், பத்துநாளைய பூசைவைத்துக்கொண்டால் பல பாவங்களும் நீங்கிவிடுமென்னுங் கதைகளையும், இருபது நாளைய பூசைவைத்துக் கொண்டால் இடுக்கங்களெல்லாம் நீங்கிவிடுமென்னும் கதைகளையும், உலகமாதா ஒருவளிருக்கின்றாள் அவளுக்கு ஆடுமாடுகளை பலிகொடுக்கின் நாம் கோரிய யாவுங் கிடைக்குமென்று கூறுங்கதைகளையும், கலாசாலைகளில் கற்குங் சிறுவர்களுக்குக் கற்பிப்பதாயின் பிள்ளைகளின் தன்முயற்சிகள் யாவுமற்று யாரோ தங்களுக்கு உதவிசெய்வார்களென்று அண்ணாந்து நிற்பதுடன் நல்லொழுக்கச்செயல்களற்று தீயொழுக்கங்கள் பெருகி கல்விகற்றும் “பொல்லார்க்குக் கல்விவரில் கர்வமுண்டா” மென்னும் நிலைநின்று சீர்கெட்டுப்போவார்கள். ஆதலின் இராஜாங்க உதவிபெருங் கலாசாலைகள் யாவற்றிலும் சிறுவர்களுக்கு மதப்படிப்புகளை அகற்றி நல்லொழுக்கப் படிப்பை அளிக்கும்படி வேண்டுகிறோம்.

- 5:36; பிப்ரவரி 14, 1912 -


245. சென்னை சட்டசபை மெம்பர்களும் அவரவர்களது முயற்சிகளும்

தற்காலம் சட்டசபைக்கு அதிகமெம்பர்களை நியமித்துள்ளவற்றுள் சென்னை ராஜதானிக் குடிகளுக்கு என்ன சீரும் சிறப்புமுண்டாயுள்ள தென்பதை சற்று விசாரிப்பாம். கள்ளுக்கடை, சாராயக்கடைக்களைக் குறைக்க வேண்டுமென்றும் அதன் லாகிரியை அடக்கவேண்டுமென்றுங் கொண்டுவந்த சட்டம் மிக்க மேலாயதே. அதனுடன் சில்லரையில் விற்கும் சாராயக் கடைகளையும், ஏழைக்குடிகள் வாசஞ்செய்யும் இடங்களில் வைத்துள்ளக் கள்ளுக் கடைகளையும், எடுத்துவிடும்படியான சட்டத்தைக் கொண்டுவருவார்களாயின் அதனினும் விசேஷமே. இத்தகைய ஜனசமூக சீர்திருத்தங்களில் பத்து பன்னிரண்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகள் பீடிபிடிப்பதும், சிகரெட் பிடிப்பதும், சுருட்டு பிடிப்பதுமாகிய துற்பழக்கங்களை அகற்றுவதற்கும், வெறுமனே யாதொருத் தொழிலுமின்றி வீதியுலாவித் திரிவோரைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தக்கத் தொழில்களை ஈய்ந்து சீர்திருத்துஞ் சட்டங்களையும் கடைகளில் கலப்புள்ள தானியங்களையும், கலப்புள்ள நெய்களையும் முக்கியமாகக் கண்டுபிடித்து தெண்டிக்கவேண்டிய