பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 403

பொங்கோதக் களியானைப் போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்குங்கோ வேறடிக்குஞ் சிறுகோலே.

பூர்வம் இத்தேசத்துள் புத்ததன்மம் நிறைந்திருந்தபோது விவசாயிகளாம் வேளாளர்கள் தங்கள் தங்கள் தன்மநெறியினின்று சொல் தவராமலும் பொய்சொல்லாமலும், ஏழைகளுக்குப் பேருபகாரிகளாக விளங்கியதுமன்றி தங்கடங்கள் விவசாயவிருத்தியால் தானியவிருத்திப்பெற்று தானிய விருத்தியால் குடிகள் சுகவிருத்தியடைந்து குடிகள் சுகவிருத்தியாற் கோனென்னும் அரசரும் ஆனந்தத்திலிருந்ததாக மேற்குறித்தப் பாடலால் விளங்குகின்றது. அத்தகைய விவசாயவிருத்தி கருணைதங்கிய பிரிட்டிஷ் இராஜாங்கத்தின் பேருதவிபெற்றும் விருத்திபெறாமலிருப்பது பூர்வ விவசாயிகளாம் வேளாளர்களில்லாக் குறைவேயாம். தற்காலம் தொழிற்பெயர்கள் யாவையும் கீழ்ச்சாதி மேற்சாதியென ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கு இஃது நூதனமொழியாகக் காணினுங் காணும். அவ்வகை நூதனமொழியன்று. பூர்வ பௌத்தர்கள் காலத்தில் விவசாயிகளின் உழைப்பையும், அவர்களது ஈகையையும் உணர்ந்த கலைவல்லோர் வேளாளரென்னுந் தொழிற்பெயரை அளித்திருந்தார்கள். அத்ததகையத் தொழிற்பெயர்கள் யாவும் வேஷப்பிராமணர்கள் தோன்றி தங்களைப் பெரியசாதியோரென உயர்த்திக்கொண்டும் தங்களுக்கு எதிரிகளாகத்தோன்றி வேஷப்பிராமணத்தைக் கண்டித்தும் அவர்களது வேஷங்களைக் குடிகளுக்குப் பறைந்தும், தேசத்தைவிட்டுத் துரத்தியும் வந்த பௌத்தர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதியோரெனக் கூறித் தலையெடுக்கவிடாமற் செய்ததுமன்றி நாளுக்குநாள் வேஷப்பிராமணர் வலுபெற்றவுடன் தங்களுக்கெதிரியாக நின்றவர்களை நிலைகுலையச் செய்து விட்டபடியால் வேளாளத் தொழில் செய்யும் பௌத்தர்கள் யாவரும் வேஷப்பிராமணர்கள் இடுக்கங்களை சகியாது பலதேசங்களுக்குச் செதிறிப்போனவர்கள் நீங்கமற்றய அரசவணிக வேளாளரென்னும் முத்தொழிலாளர்களாம் பௌத்தர்கள் யாவருஞ் சகல சுதந்திரங்களுமற்று பாழடைந்துவிட்டபடியால் அவர்களால் செய்துவந்த விவசாயத்தொழில்களும் பாழடைந்து பஞ்சமும் பெரும்வாரிக் காச்சலும் பெருகிக் குடிகளைக் கெடுப்பதுடன் கோனாகிய அரசர்களுக்கும் வீணாய செலவை உண்டு செய்துவருகின்றது.

இராஜாங்கத்தார் குடிகள்மீது கருணை கொண்டு விவசாயவிருத்தியைச் செய்தும் பயன்படாமற்போகின்றதற்குக் காரணம் மதக்கடை பரப்பி என்சாமி பெரிது உன் சாமி பெரிதெனச்சண்டையிட்டு சோம்பேறிசீவனஞ் செய்பவர்களும், பிச்சையேற்றுண்பவர்களும், பூமியைப் பெற்று ஆளும்படியானவர்களாகிவிட்டபடியால் இராஜாங்கத்தார் வேண உதவி புரிந்தும் அவைகளைக் கஷ்டத்துடன் நடத்துவதற்குக் கையாலாகாமல் நாளொன்றுக்கு முக்காலணா கூலியாள் கிடைப்பானா, ஓரணா கூலியாள் கிடைப்பானா என்னும் நோக்கத்தில் இருப்பதினால் விவசாயவிருத்திக் குறைந்து கொண்டே வருகின்றது. இவற்றைக் கண்ணுறுங் கருணைதங்கிய ராஜாங்கத்தார் பூர்வ சாதிபேதமில்லா வேளாளத்தொழிலாளராம் விவசாயிகளைக்கொண்டே பூமிகளை விருத்திச் செய்ய முயல்வார்களாயின் கூடிய சீக்கிரம் பூமிகள் சீர்திருந்தி விவசாயமும் விருத்தியடையுமென்பது சத்தியம், சத்தியமேயாம்.

- 5:44; ஏப்ரல் 10, 1912 -


251. கொடுங்கோல் என்பதென்னை? செங்கோல் என்பதென்னை?

கொடுங்கோலென்பது தன்னவ ரன்னியரென்னும் பட்சபாத முடைத்தாயதும், தன் சுகத்தைப் பார்த்துக்கொண்டு ஏனையோரைக் கருதாததும், குற்றஞ் செய்தவனிவன் செய்யாதவனிவனெனக் கண்டறியாது தெண்டிப்பதும், குடிகள் எக்கேடு கெடினும் அவற்றை நோக்காது தங்களுக்கோர் கேடும் அணுகாமல் பார்த்துக்கொள்வதும், மனிதவகுப்போரை மனிதவகுப்போராக பாவிக்காது சீர்கெடுப்பதும், தங்கள் குடிகளுக்கு நீர் வசதி, தீப வசதி, வீதி வசதி, முதலிய