பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பேரழகாகும். அதாவது விவசாயத்தில் முயற்சிப்பதாயின் விவசாய முயற்சியென்றும், கைத்தொழில் முயற்சிப்பதாயின் கைத்தொழில் முயற்சியென்றும் கூறுவதொழிந்து சுதேசமுயற்சியென்று கூறி யாதொரு முயற்சியுமின்றி ஐந்தாறு பெயர்கள் கூடி அந்நியாயக் கூட்டங்களும் அதிகப் பிரசங்கங்களுஞ் செய்து யாதுமறியா ஏழைக்குடிகளை இராஜ துரோகிகளெனக் காட்டிவிட்டு, எட்டினாற் குடிமி எட்டாவிடில் பாதம் பிடிப்பது போல் அபிநயிப்பது யாதுபயன்.

சுதேசியம் என்னும் மொழியைமட்டிலுங் கற்றுக் கொண்டவர்கள் சுதேசிகளென்னும் ஒற்றுமெய் அடைந்துள்ளார்களா, சுதேசத்தையும் சுதேசிகளையும் சீர்திருத்துவது எதார்த்தமாயின், சீர்திருத்தத்திற்கு ஆதாரமாம் விவசாயத்தையும் கைத்தொழிலையும் நோக்கினார்களா, இவற்றை நோக்கியிருப்பார்களாயின் அச்செயலை சோம்பலின்றி சாதிப்பவர்களும் உழைப்பாளிகளுமாயப் பூர்வக்குடிகளை தங்களுக்குள்ள விரோத சிந்தையால் தாழ்ந்த சாதியோர் தாழ்ந்த சாதியோரென்று கூறி அவர்கள் கேழ்க்கும் பூமிகளைக் கொடுக்கவிடாமலும் கெடுப்பார்களா. சாதித் தலைவர்களின் நோக்கம் சற்றுபலித்துள்ளபடியால் மற்றய சாதியோர்கள் யாவரையுந் தங்கள் வயப்படுத்திக் கொண்டு நீதிநெறி அமைந்த பிரிட்டிஷ் ஆட்சியோரை எதிர்க்கவும் சுதேச ஆளுகையை சிந்திக்கவுமானார்களன்றி சுதேச விவசாயத்தையும் சுதேசக் கைத்தொழிலையுஞ் சிந்தித்தார்களில்லை.

இத்தேசத்துள் சாதிக்கட்டு உண்டாக்கி மிரட்டுகிறவர்களும் மதக்கடை பரப்பி சீவிப்பவர்களுமாயக் கூட்டத்தோர்களுக்கு யதார்த்த முயற்சிகள் யாதெனில், அவன் சாதியை ஒளித்துச் சொல்லுகின்றான். இவன் சாதியை ஒளித்து பேசுகின்றானெனத் துள்ளிதொடை தட்டுகிறதும், அவன் சாதிகட்டைமீறிவிட்டான் இவன் சாதிகட்டை மறந்து விட்டானென்றும், அவனுக்குப் பிராயசித்தம் செய்ய வேண்டும் இவனுக்கு சாதிகட்டு கட்ட வேண்டும் என்பதே பெருமுயற்சியும் விடசாதனமும் ஆகும்.

மதக்கடைப் பரப்பி சீவிக்கும் முயற்சிகள் யாதெனில் ஆகாயத்திலுள்ள தேவதைகளெல்லாம் பூமியில் வந்து அவதரிப்பதோர் கடை, அப்படி வந்து பிறப்பவர்கள் யாவரும் பாப்பார் வீடுகளிலேயே வந்து பிறப்பது பலகடை, அவ்வகைப் பிறந்த தேவர்கள் அவன் தலைகளை அறுத்துவிட்டார், இவன் கைகளை வெட்டிவிட்டாரென்னுந் தங்கள் தேவதா சரக்குகளை சிறப்பித்தல், குறுக்கு பூசுவோனுக்கே பரத்துவமுண்டு, நெடுக்கு பூசுவோனுக்குப் பரத்துவமில்லையென்று மதக்கடைகளை இன்னும் பரப்புவதும், தாமரைக் கமலத்தில் வைப்பது தென்கலை, அஃதில்லாமல் வைப்பது வடகலை என்னும் மதச்சரக்குகளைப் பரப்பி கலை என்பது என்ன, அவற்றுள் வடகலை தென்கலை என்பது என்னவென்னும் பொருளறியாத சரக்கைப் பரப்பி சண்டையிடுவதுமாகிய, சாதிக்கட்டுக்களில் விடாமுயற்சியில் இருப்பவர்களும், மதக்கடை விருத்தி முயற்சியில் இருப்பவர்களே மேலும் மேலும் பெருகிவருவது அநுபவக்காட்சியிலிருக்க சுதேசமுயற்சி, சுதேசமுயற்சி என்பதில் யாதுமுயற்சியால் தேசமும் தேசமக்களும் சீர்பெறுவார்கள் என்று நம்பலாம்.

சாதிகளின் விருத்தியும், மதக்கடைகளின் விருத்தியும் மேலும் மேலும் பெருகி விடுகிறதன்றி விவசாய விருத்தியுங் கைத்தொழில் விருத்தியும் பெருகுவதைக் காணோம்.

விவசாய விருத்திக்கும் கைத்தொழில் விருத்திக்கும் உழைப்பாளிகளாய மேன்மக்கள் கீழ்மக்களாகத் தாழ்த்தப்பட்டு நிலை குலைந்துள்ளபடியால் கருணை தங்கிய ராஜாங்கத்தோர் விவசாயத்திற்கும், கைத்தொழிலுக்கும் செய்து வரும் உபகாரங்கள் யாவும் விழலுக்கிறைத்த நீர் போலாகி வருகின்றது. இவைகள் யாவையும் சீர்திருத்தக்காரர்கள் ஆலோசியாது வீணே சுதேச முயற்சி, சுதேச முயற்சி என்னுங் கலகத்திற்கு அஸ்திவாரமிடாது கல்வி விருத்தி, கைத்தொழில் விருத்தி, வித்தியாவிருத்தி, விவசாய விருத்திக்கு