பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஆபீசுகளிலும் குடிகள் அல்லலைக் காண நன்கு விளங்கும். அதாவது தங்களுக்குள்ள பூமிகளின் குறையோ வியாஜியக்குறையோ ஒன்றை நாடி ஏகசாதி பெருந்தொகையினருள்ளக் கூட்டத்தோர் உத்தியோகஞ் செய்பவரிடம் போவார்களாயின், ஐரோப்பிய துரைமகன் உத்தரவு உடனே கிடைக்க மற்ற உத்தியோகஸ்தர்களிடம் சற்று வெள்ளையும் சள்ளையுமாகப் போவானாயின், இங்குதானிரும் எனப் பொழுதைப்போக்கவைத்து நாளைக்கு வாரும் என அலக்கழித்து, அவன் வந்த வேலையுங் கெட்டு சொந்த வேலையையும் பாழடையச் செய்துவருகின்றார்கள். அதில் ஓர் கிறிஸ்தவனாயிருந்து விட்டாலோ ஏதுகாணும் எங்குவந்தீர் இன்று ஆகமாட்டாது. இரண்டுநாள் சென்று வாருமெனத் திருப்படிப்பார்கள். பறையனென்று அழைக்கப்படுவோனா யிருந்தாலோ அவனைக் கண்டும் பேசுவோருங் கிடையாது. ஐயா, ஐயா வெனப் பத்துசப்தமிடுவானாயின் என்னடா, தூரம் போயிருவெனச் சொல்லிவிட்டு நுழைந்தவன் மறுபடியும் அவனை வந்துபார்க்கவு மாட்டான். சங்கதி விசாரிக்கவுமாட்டான். இவ்வகை ஒருமாதமோ இரண்டுமாதமோ அவன் வேலைகளையெல்லாங் கெட்டலைந்தும் அவனுக்கு நல்லவேளை இருந்து ஓர் துரைமகன் கண்ணுக்கு அகப்படுவானாயின் அன்றுதான் அவனது குறைகள் நீங்கும். இத்தகையக் கருணையற்றவர்களிடம் முழு அதிகாரங்களையும் கொடுத்துவிடுவதாயின் முதற்கேடு பறையனுக்கு, இரண்டாங் கேடு கிறிஸ்தவனுக்கு, மூன்றாங்கேடு மகமதியனுக்கென்றே முடியும். அதாவது ஐரோப்பிய துரைமகன் மேலதிகாரியாயிருந்து மேற்பார்வையும் விசாரிணையுஞ் செய்துவரும்போதே சாதித்தலைவர்களின் அதிகாரம் உத்தியோக அதிகாரத்துடன் சேர்ந்துகொண்டு ஊர்க்குட்டிகளைப் பாழ்ப்படுத்துவதாயின் பூராவாக சாதியதிகாரத்துடன் உத்தியோக அதிகாரங்களையும் பெற்றுக்கொள்ளுவார்களாயின் தங்கள் சாதிக்கும் மதத்திற்கும் எதிரிகளாயுள்ளவர்கள் யாவரையும் பாழ்படுத்துவார்களென்பது திண்ணம். இத்தியாதி, அக்கிரமங்கள் யாவையும் கண்ணினால் பார்த்தும் காதினால் கேட்டும் உள்ளப் பத்திராதிபர்கள் ஐரோப்பிய மாஜிஸ்டிரேட்டுகள் மீதும் ஜர்ஜிகள்மீதுங் குறைகூறுவது உட்சுவர் ஒருபுரம் தகர்ந்திருக்க புறஞ்சுவற்றை பூசுவதற்கொக்கும். ஆதலின் பொதுநலசீர்திருத்தங்களைத் தேடும் பத்திராதிபர்கள் சுயநலம்பாரா சீர்திருத்தங்களைத் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் வெளியிடுவார்களென நம்புகிறோம்.

- 6:7: சூ லை 24, 1912 -


264. கனந்தங்கிய கார்பரேஷன் கமிட்டியார் கருணை வைத்தல் வேண்டும்

அதாவது அதிகாரிகள் தேச சீர்திருத்தங்களுக்குக் குடிகளை நோக்குவதும், குடிகள் தங்கள் சுகத்திற்கு அதிகாரிகளை தேடுவதும் இயல்பாம். இத்தகைய நோக்கங்களுள் அதிகாரிகளே குடிகளை ஆதரித்து வருவது நீங்கலாகக் குடிகளே சேர்ந்து அதிகாரிகளை நியமித்து தங்கள் தங்கள் சுகாதாரங்களைத் தேடிக் கொள்ளுவதுமுண்டு. அவ்வகைக் குடிகளே தேடிக்கொள்ளுவதுள் முநிசபில் கமிஷனர்களும் ஓர் கூட்டத்தோர்களே யாவர்.

குடிகளால் தெரிந்தெடுத்துக்கொள்ளப்பட்ட கூட்டத்தோர், குடிகளது கஷ்டநஷ்டங்களையே நோக்க வேண்டும். எடுத்துள்ள சீர்திருத்தங்களையும் ஏறத்தாழ நடாத்தல் வேண்டும். நடத்தும் சீர்திருத்தங்களை நாடிக் குடிகளை அதிகமாக வருத்தவும் ஆகாது. தற்காலம் குடிகளுக்கு வீட்டின் வரிகளை அதிகப்படுத்தியிருப்பதினால் எளியக் குடிகள் யாவரும் கண்கலங்கி நிற்கின்றார்கள்.

அத்தகையக் கண்கலக்கம் போறாது கனந்தங்கியக் கமிட்டியார் மற்றும் சில வரிகளை நியமிக்கப்போவதாகத் தெரிந்து மேலும் மேலும் பயப்பிராந்தி கொண்டு தவித்துத் திரிகின்றார்கள். இத்தவிப்பையும், பயத்தையும்