பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 429


272. தென்னிந்தியா எப்போது சிறப்பைப்பெறும் தென்னிந்தியர் எப்போது சீர்பெறுவார்கள்

தென்னிந்தியாவைப் பற்றியும் தென்னிந்தியரைப்பற்றியும் மட்டிலுங் கூறி வடயிந்தியாவையும் வட இந்தியரையும்பற்றி விட்டதென்னோ என்பாருமுண்டு. அவ்வகைக் கூறுவோருக்கு பம்பாயினது சிறப்பையும், வங்காளத்தினது சிறப்பையும் பம்பாய் மக்கள் சீரையுங் கண்டு தெளிவார்களாயின் தென்னிந்தியம் என்ன சீர்கேட்டிலிருக்கின்றது தென்னிந்திய மக்கள் என்ன சீர்கேடுற்று வருகின்றார்களென்பது நன்கு விளங்கும்.

வட இந்தியாவை ஆளுவோரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தாரே, தென்னிந்தியாவை யாளுவோரும் பிரிட்டிஷ் துரைத்தனத்தாரே, அவர்கள் ஆளுகையின் கருணையால் கற்பித்துவரும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கங்களைப் பின்பற்றிய வட இந்தியர் தங்கள் தேசங்களைச் சிறப்படையச் செய்யும் விவசாயங்களையும், வியாபாரங்களையும், கைத்தொழிற் சாலைகளையும் அமைத்து உழைப்பாளிகளுக்கு மேலும் மேலும் உதவிபுரிந்து விருத்திச்செய்யும் நோக்கத்தையே பெரிதாகக் கொண்டுள்ளபடியால் அத்தேசக்குடிகள் யாவரும் சீரையும் சிறப்பையும் சுகநிலையும் அடைந்து வருகின்றார்கள்.

தென்னிந்தியரோவென்னில் பிரிட்டிஷ் துரைத்தனத்தோரால் கற்பித்துவரும் விவசாயவிருத்திக் கல்விகளையும், வித்தியா விருத்திக் கல்விகளையும், உலோகவிருத்திக் கல்விகளையும், இரசாயனவிருத்திக் கல்விகளையும், மின்சார விருத்திக் கல்விகளையும் ஊன்றிக் கல்லாமலும் கற்றவற்றை மக்களுக்குத் தெளிவுர போதித்து விருத்தி செய்யாமலும் பத்திரிகைகளில் வரையாமலும் எங்கள் சாதி அனாதியாங்கடவுளிடமிருந்து தோன்றியதென்றும் அதைமட்டிலும் விடாமல் கெட்டியாகப் பிடிக்கவேண்டுமென்றும், எங்கள் வேதம் அனாதியாங் கடவுளால் போதிக்கப்பட்டதென்றும் அதிலுள்ளவற்றை நம்பினவர்களே தங்கள் கூட்டத்தோர்களென்றும், இராமருக்கும் சீதைக்குங் கலியாணமென்றும், துரோபதைக்குத் துயிலுரியலென்றும், எங்கள் சாமி திருவிளையாட்டென்றும், பிரசங்கிகள் பரக்கப் பிரசங்கிக்கவும், அதனைக் கேட்போர் ஆனந்தம் பெற்றுப்போவதும் பத்திரிகைகளை நடத்துவோரும் இத்தகையக் கதைகளையே தங்கள் தங்கள் பத்திரிகைகளில் பெருக்க நிறப்பவும், அதனை வாசிப்போர் அதுவே கல்விவிருத்தி வித்தியாவிருத்தியென்றெண்ணித் துணிபவருக்கு, துரைத்தனத்தார் கருணை கொண்டளித்து வரும் கல்வியின் விருத்தி எங்ஙனம் சிறப்பைப்பெறும். துரைத்தனத்தோர் முயற்சியும் எங்ஙனங் கைக்கூடும். மற்றுமுள்ளோர் நன்றாய் குளித்து முழுகிவிட்டு குறுக்கு பூச்சு நெடுக்குப்பூச்சு, சாத்துகளை நெற்றியிலும் உடலிலும் பூசிக்கொண்டு முப்புரி நூலை முதுகிலிட்டு சொம்பு பாத்திரங் கையிலேந்தி நாங்கள் பிராமணாள் எங்களுக்கே சகலமுங்கொடுத்துக் காக்க வேண்டுமென்று வேதம் முறையிடுகின்றது. எங்களுக்குக் கொடுக்கும் தானத்தால் உங்களுக்குள்ள தனதானியம் மேலும் மேலும் பெருக வாழ்வீர்களென்று சோம்பேறிவித்தையைப் பெருக்கிக் கொண்டார்கள். அவர்களது போதகத்தை மெய்யென்று நம்பி நடப்பவர்களும் அவர்களது சாதி ஆசாரத்தையும் மதவாசாரத்தையும் பின்பற்றியவர்களும் தங்கள் தங்கள் உழைப்பையும் கைத்தொழில்களையும் நழுவவிட்டு தங்கள் குருக்களைப்போல் உருத்திராட்சங் கட்டிக்கொள்ளும் வித்தைகளையும், துளசிமணி அணிந்துக்கொள்ளும் வித்தைகளையும், மந்திரஞ்சொல்லி உருபோடும் வித்தைகளையும், பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டே பிராணாயாமம் செய்யும் வித்தைகளையும், குறுக்குப்பூச்சு நெடுக்குப்பூச்சு கனக்கப்பூசும் வித்தைகளையும், சாதிச்சண்டை வித்தைகளையும், சமயச்சண்டை வித்தைகளையும், தாடி வளர்க்கும் வித்தைகளையும், மொட்டையடிக்கும் வித்தைகளையும் மேலும் மேலும் தங்கள் குருக்களைப்போல் இவர்களும் ஒவ்வோர் சாமிப் பெயர்களையும், சாமிக் கதைகளையுஞ் சொல்லிக்கொண்டு சொம்பு கைகளில் ஏந்தி