பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அரசபீடத்தை விட்டு இறக்கி அவமானமடையச் செய்ததுமன்றி மனங்கசிந்துருகவுஞ் செய்துவிட்டபடியால் அரசன் மனநொந்து அல்லலுற்ற பயனை துருக்கிதேசக்குடிகள் யாவரும் அடையும்படி நேர்ந்துவிட்டது. தாங்கள் செய்துக்கொண்ட தீவினை தங்களை சூழ்ந்துக்கொண்டபடியால் தெய்வத்தை நோவதால் யாதுபயனுங் கிட்டாவாம். அரசன் அன்று கொன்றால் தெய்வம் நின்றுகொல்லுமென்னும் நேருக்கு வந்துவிட்டது.

ஆதலின் துருக்கிய ராஜாங்கத்தார் இனி சமாதானத்தைக் கோருவதே அழகாம். அங்ஙனமின்றி தங்கள் சாதுரியத்தையும் வீரியத்தையுங் காட்டுவதாயின் உள்ளப் பேரரசுகளுங் கலக்க நேர்ந்துபோம். அவ்வகை நேருமாயின் துருக்கிய அரசாட்சியின் பெருத்த சிறப்புங் குன்றுவதுடன் தேசக்குடிகளும் அல்லலுற்று அவதியுறுவார்கள்.

தேசங்களிலுள்ளக் கோட்டைக் கொத்தளங்கள் யாவும் பிடிபடவும், படைவீரர்கள் யாவரும்மடிந்து குவியவுமாய உள்ளக்குறைகள்யாவும் அரசர்களின் அஜாக்கிரதையும் மந்திரிகளின் ஆலோசனைக் குறைவுகளுமேயாம். தனக்குமோர் தேசமிருந்து மற்றும் சில தேசங்களையும் ஆளுவதாயின் அங்கங்குள்ளக் குடிகளின் கஷ்ட நஷ்டங்களையும் குறைவு நிறைவுகளையும் பலாபலங்களையும் யுக்திபுத்திகளையுந் தந்திர மந்திரங்களையும் ஆய்ந்துணர்ந்து அதிவிழிப்பினின்று அரசை நடாத்திவரவேண்டும். இத்தகைய ஜாக்கிரதையின்றி நமது தேசந்தான் நமது தேசத்திலிருப்போர் யாவரும் நமதரசுக்கு அடங்கியக் குடிகள் தானென்னும் இருமாப்புற்று அந்தந்த தேசத்தை ஆளும்படி நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அந்தந்த தேசக்குடிகளைக் கொடுங்கோல் கொண்டாளுகின்றார்களா, செங்கோல் கொண்டாளுகின்றார்களா என்னும் விசாரிணையற்றிருந்த செயல் ஒவ்வோர் தேசக் குடிகளுக்கு உண்டாகிக் கொண்டிருந்த மனத்தாங்கலாலும் கஷ்டத்தினாலுங் கொதிப்பேறி நாளுக்குநாள் படைவீரர்களைப் பெருக்கிக்கொண்டே வந்திருக்கின்றார்கள். தங்கள் ஆளுகைக்குட்பட்ட தேசத்தில் தோன்றிவருங்குடி படைகளின் பெருக்கையும் அதன் செருக்கையும் அறிந்து கொண்டு அப்போதைக்கப்போதே அடக்கியாளாத அரசும் ஒரர்சாமோ. குடிகளின் குணாகுணங்களையும் அவர்கள் வீராவேஷங்களையும் கண்டறியாத மந்திரிகளின் மதியூகம் மதியூகமாமோ, இல்லை தங்களாளுகைக்கு உட்பட்டக்குடிகள் யாவருங் கொடுங்கோலால் கசிந்து துன்பஞ்சகியாது படையெடுத்தப்பின்னர் அத்தேசத்துக்குரிய வரசன் படையெடுப்பது அவலமேயாம். அரசருக்குள்ளமைந்த ஆலோசனை சங்கத்தோராகிய மந்திரவாதிகளிருந்தும் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயங் கையாடாது பெரியராட்சியத்தார் பெரியவரசாங்கத்தாரென் றெண்ணி இருமாப்புற்றிருந்த செயல் தங்கள் தங்கள் தீவினைக்கு ஈடாய் தங்கள் தேயக்குடிகளே தங்களுக்குச் சத்துருவாகத் தோன்றிவிட்டார்கள். அத்தகையப் படைகளை எத்தகையப் படைகளைக் கொண்டும் ஜெயிப்பது கஷ்டமேயாம். அங்ஙனம் ஜெயம்பெற முயலினும் தேசதேசக் கட்டிடங்கள் யாவும் இடிந்து படைகளும் மடிந்து குடிகளும் பரந்து தேசங்கள் யாவும் பாழடைந்து போமென்பதே சத்தியம். குடிகளால் எழும்பியுள்ள பெரும்போருக்குள் மற்றுமுள்ள பேரரசர்கள் பிரவேசித்து சமாதானஞ் செய்யமாட்டார்கள். இதனுள் மதசம்மத வைராக்கியங்களும் கலந்துள்ள படியால் அரசர்களுக்கு வேண்டிய சதுர்வித உபாயத்தில் சாம, தானம் இரண்டையுங் கொண்டாடி துருக்கியர் தங்களரசை நிலை நிறுத்துவார்களென்று நம்புகிறோம்.

- 6:23: நவம்பர் 13, 1912 -


277. ஐரோப்பியர் எல்லோருங்கூடி துருக்கியைப் பிடிக்கப்பார்க்கின்றார்கள் என்னும் மொழி பிசகு

ஐரோப்பா என்னும் மொழி ஓர் கண்டத்தின் பெயராகும். அதில் இட்டாலியரும் வசிக்கின்றார்கள், ஜெர்மானியரும் வசிக்கின்றார்கள், கிரீக்கரும்