பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 443

மாட்டாது. பழைய பொறாமெய் மிகுத்த வஞ்சினர்களாய கனவான்களும் உத்தியோகஸ்தர்களுமே அந்தரங்கத்திற்கூடிய செய்திருப்பார்கள் என்றே ஆலோசிக்கவேண்டியதாகின்றது. பிரிட்டிஷ் அரசாட்சியைக் கைப்பற்றவேண்டுமென்னும் அவாமிகுத்தவர்களுக்கே இத்துரோகச்சிந்தை ஊன்றியிருக்குமேயன்றி ஏழை எளியோர்களுக்கு இராதென்பது திண்ணம்.

இத்தகையப் பேரவாமிகுத்த வஞ்சினர்களும் கருணையென்பதே கனவிலுமில்லாதவர்களும் செய்நன்றியை சிந்தையில் வையாதவர்களும் தங்கள் காரியம் முடியும் வரையில் தாளைபிடித்து காரியம் முடிந்தவுடன் சிரோமயிர் பிடிப்பவர்களும் உள்ளத்தில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசுவோர்களுமாகிய சிலர் வாசஞ் செய்யும் இத்தேசத்தில் கமிஷன் ஏற்படுத்தி சிவில் செர்விசை யோசிப்பதை அடியோடு நிறுத்தி தற்காலம் நிறைவேறிவரும் பரிட்சையையே சரியான வழியில் நடைபெறச் செய்யவேண்டியதே அழகாம்.

அதாவது பிரிட்டிஷ் அரசாட்சியைச் சார்ந்த ஐரோப்பியர்கள் பெற்றுவரும் அந்தஸ்தான உத்தியோகங்களைப் பெறவேண்டுவோர் அவர்கள் நீதிபடியும் அரசு எவ்வழியோ குடிகளும் அவ்வ வழியென்னுமுறைபடியும், ஐரோப்பியருக்குள்ளசாதி பேதமில்லா குணமும் சகலர்மீதுங் கருணைவைத்து பேதமின்றி செய்யுஞ்செயலும், வித்தையில் முயற்சியும் புத்தியில் தீவிரமும் உண்டாகும் வரையில் ஐரோப்பியர் பெற்று வரும் அந்தஸ்தான உத்தியோகங்களையும் ஐரோப்பியர் பெற்றுவரும் அதிகார உத்தியோகங்களையுங் கொடுப்பதாயின் இத்தேசத்து உழைப்பாளி ஏழைக்குடிகளும் நசிந்து தேசசிறப்புங் குன்றி இராஜாங்கத்தோருக்கும் அதிக தொல்லையும் ஆயாசமும் உண்டாகிப்போம். நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் கமிஷன் விட்டு சிவில் சர்விசைப்பற்றி ஆலோசிப்பதை நிறுத்தி மிலிட்டேரி ஆலோசினையைக் கடைபிடித்து வீணாய் கட்டிடச் செலவுகளையும் வீணாய மறாமத்துச் செலவுகளையும் வீணாய வீதிச்செலவுகளையுங் குறைத்து அப்பணத்தைக் கொண்டு பெருங்கூட்டத்தோர் வாசஞ்செய்யுமிடங்களில் ஒவ்வோர் ஐரோப்பிய ரிஜிமெண்டையும், சிறுந்தொகையோர் வாசஞ்செய்யுமிடங்களில் ஒவ்வோர் கம்பனிகளையும் வைத்துக் காப்பதுடன் சிவில் செர்விஸ் அந்தஸ்தான உத்தியோகங்களுக்கு சிவில்செர்விஸ் ஐரோப்பியர்களையும், அதிகார உத்தியோகங்களுக்கு மிலிட்டேரி ஐரோப்பியர்களையும் வைத்து பிரிட்டிஷ் ஆட்சியை நடத்துவதாயின் அந்தரங்க ராஜதுரோகிகள் அடியோடு அடங்குவதுடன் இராஜதுரோகிகளை அடுத்துவாழும் இராஜவிசுவாசிகளுங் கவலையற்று வாழ்வார்கள். அரசாட்சியோருக்கும் அதிக தொல்லையில்லாமற்போம். இத்தேசத்துள் வாசித்துள்ளோரெல்லாம் பெருங்கூட்டமிட்டு பெருங்கூச்சலிட்டு அதிகார உத்தியோகங்கள் கேட்போர் யாவரும் ஐந்துபேர் முயற்சியுள்ளவர்கள் முயலுவாராயின் அவர்களுடன் ஐன்னூறு பெயர் சேர்ந்துகொள்ளுவது வழக்கமாகும். அக்கூட்டத்தோர் செயல் சகலசாதிக் கூட்டத்தோருக்கும் பொருந்தா செயலேயாம். அவ்வகைக்கூடி ராஜாங்க உத்தியோகங் கேட்போர் சகலசாதியோரிலும் பத்து பெயர் பத்து பெயரைத் தருவித்து பெருங்கூட்டமிட்டு அக்கூட்டத்தோர் சம்மதப்படி கேட்பார்களாயின் அச்செயலால் சகலசாதியோரும் முன்னேறி சுகச்சீர் பெறுவார்கள். அங்ஙனமின்றி ஐந்து பெயர் முயற்சியில் ஐன்னூறு பெயர் தன்னவர்களைக் கூட்டிக்கொண்டு இராஜாங்கத்தோரை ஏதொன்றைக் கேட்கவும் இராஜாங்கத்தோர் அதற்கு செவிசாய்த்து அந்தஸ்த்தான உத்தியோகங்களையும் அதிகார உத்தியோகங்களையுங் கொடுத்துவருகின்ற படியால் இன்னும் வெடிகுண்டாலுந் துப்பாக்கியாலும் பயமுறுத்தினால் சுயராட்சியமே அளித்துவிடுவார்களென்னும் பேராசையாலும் நயவஞ்சகத்தாலும் கெடுக்க ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் முன் பிரிட்டிஷ் செங்கோலை நீட்டுவதால் பயனில்லை. சற்று கொடுங்கோல் நீட்டவேண்டியதாதலின் பெருங்கூட்டமென்று செவிகொடுத்தல் சீவகாருண்யமற்ற சாதிபேதமுள்ள இத்தேசத்திற்குப் பொருந்தாவாம். பொருந்த வேண்டுமாயின் இவர்களுக்குள்ள