பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பழைய ஆமணக்கு நெய், எள்ளிநெய், தெங்குநெய், பசுவின் நெய்க்குமேல் வேறுநெய் கண்டுபிடிக்கும் அறிவின்விருத்தி உண்டா.

பழையக் கனிகளாம் மாங்கனி, பலாக்கனி, வாழைக்கனிக்குமேல் வேறுகனி கண்டுபிடிக்கும் அறிவின்விருத்தி உண்டா.

பழையப் பட்டுகளைப்போல் இப்போது நெய்யும் அறிவின்விருத்தி உண்டா. பழய மாவடைஞ்சிகளைப்போல் இப்போது செய்யும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய ரத்தினக் கம்பளங்களைப்போல் இப்போது செய்யும் அறிவின் விருத்தி உண்டா.

அறிவின்விருத்திக்காய பழைய இலக்கிய நூற்களைப்போல் இயற்றவும் உள்ள இலக்கியங்களைத் தெளிவுபடக்கூறவும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய இலக்கண நூற்களுக்குமேல் வேறிலக்கண இலக்கியங்களை இயற்றவும் உள்ள இலக்கணங்களையே தெளிவு பெறக் கூறவும் அறிவின் விருத்தி உண்டா.

பழய சோதிட கணிதாதிகளை நன்காராய்ந்து காலயேதுக்களையும் மக்களினது சுகாசுகங்களையுங் தெளிந்தோதும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய வைத்திய நூற்களை ஆராய்ந்து ஓடதிகளை செவ்வனே முடித்து மக்களது பிணியின் உபத்திரவங்களை நீக்கும் அறிவின் விருத்தி உண்டா.

பழைய நீதிநூற்களையும் ஞான நூற்களையும் ஆராய்ந்து மக்களுக்கு நீதிநெறி வாய்மெகளைப் புகட்டி நன்முயற்சி, நல்லூக்கம் நற்கடைபிடியில் நிலைக்கச்செய்யும் அறிவின்விருத்தியேனும் உண்டா ஏதுங்கிடையாவாம்.

இத்தென்னிந்தியாவில் வாழும் பெருங்கூட்டத்தோரின் அறிவின் விருத்தியும் அதன் பிரகாசமும் யாதெனில் சில மிலேச்சர்கள் கூடி தங்களுக்குள்ள விரோதச்சிந்தையாலும் பொறாமெ மிகுதியாலும் அவன் தங்கலாம் பறையன், இவன் சாம்பான் பறையன், உவன் வலங்கைப் பறையனென்று இழிவடையக் கூறுவார்களாயின் அவர்கள் மொழிகளை முன்பின் ஆலோசியாது பறையர்கள் நமது குளத்தில் நீர்மொள்ளப்படாது, நமது அம்மட்டன் பறையர்களுக்கு சவரம்பண்ணப்படாது, நமது வண்ணான் பறையர்களுடைய வஸ்திரங்களை எடுத்து வெளுக்கப்படாது, டாக்ட்டர் வேலையிலமர்ந்து தோட்டிப்பிணமாயினும் சக்கிலிப் பிணமாயினும் நன்றாய்த்தொட்டு அறுக்கலாம் ஊனுருப்புகளை சோதிக்கலாம் ஆயினும் பறையனை மட்டிலுந் தீண்டப்படாது பறையன் மிதித்துப் பிசைந்த வெல்லம் புளி முதலியவற்றை எதேஷ்டமாகப் புசிக்கலாம், பறையன்மட்டிலும் அருகில் வரப்படாதெனப் பலவகையாலுந் தாழ்த்தி மனங்குன்றச்செய்வதுடன் நாளெல்லாம் பொய்யைச்சொல்லி சீவிப்பவன் நான் பொய்யைச் சொன்னால் பறையனென்றும், நாள்முழுவதும் எவன்சொத்தை மோசஞ்செய்யலாம் எந்த கைம்பெண் சொத்தை அபகரிக்கலாமென வஞ்சினத்தாலும் சோம்பலாலும் சீவிப்பவன் நான் ஒருவன் சொத்தை அபகரித்தால் பறையன் என்றும் கூறி பல வகையாலும் ஹேளனஞ்செய்து அக்கூட்டத்தோரை நூதனமாகக் குடியேறுவோர்களுக்குங்கூறி தலையெடுக்கவிடாமற் செய்யும் சாதிக் கட்டுப்பாட்டை மேலும் மேலும் விருத்திச் செய்யும் அறிவே மிகுத்துள்ளவராவார்கள்.

இத்தகைய குணமிகுத்தோரின் செயல்களை நெடுநாளறிந்தே இந்துக்களுக்கு சாதாரண அறிவு போதாதென்றும் இந்துக்களென்போருக்கும் கலைக்ட்டர் உத்தியோகத்திற்கும் பொருந்தாதென்றும் அம்மேலோன் கூறியிருக்கின்றார். இதற்குத்தக்க மறுப்புக் கூறுவோருமுளரோ, இலர் என்பதே திண்ணம்.

- 6:35; பிப்ரவரி 5, 1913 -

மற்றும் சில பத்திராதிபர்கள் ஐரோப்பிய பெரியோர்களின் நன்னோக்கங்களையும் அவர்கள் மறுத்துப் பேசும் அந்தரார்த்தங்ளையும் அறிந்து கொள்ளாது ஐரோப்பியர்கள் யாவரும் தங்கள் சுகத்தை நாடியே சிவில் செர்விஸ் பரிட்சையை