பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 453

இந்துக்களுக்கு அளிக்கலாகாதென மறுத்தே பேசுகின்றார்களென்று வரைந்துள்ளார்கள்,

தன்னவர் முன்னேறும் சுகச்சீரையும் நாளுக்குநாள் அடைந்துவரும் சிறப்பையும் உய்த்துணருவாராயின் இவைகள் யாவும் ஐரோப்பியர்களது கருணையால் நேர்ந்த சுகமென்று அறிந்து அவர்கள் மறுப்புக்கு ஆனந்திப்பார்கள். அவற்றை உணராச் செயலால் பிரித்து வரையலானார் போலும். ஆயினும் அவற்றை சீர்தூக்கிப் பேசவேண்டியது நமது செயலாம், அதாவது ஈஸ்ட் இண்டியன் கம்பனியாரின் பரவுதல் இந்தியாவில் பரவிய காலத்தும் அவர்கள்மீது சத்துருக்கள் எதிர்த்தகாலத்தும் ஐரோப்பியர்களே தங்கள் உதிரஞ்சிந்த உயிர் கொடுத்தார்களா அல்லது இப்போது அந்தஸ்தான உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டுமென்று கேட்போர் உதிரஞ்சிந்த உயிர்கொடுத்தார்களா. காடுகளை வெட்டியும் மலைகளைப் பிளந்தும் தேச சீர்திருத்தஞ்செய்ய வழிகள் ஏற்படுத்தியும் வருங்கால் அதனால் நேர்ந்த யுத்தங்களில் உதிரஞ்சிந்த உயிர்கொடுத்தும் பிணியால் நலிந்தவர்களும் ஐரோப்பியர்களா அல்லது கலைக்ட்டர் உத்தியோகம் வேண்டுமென வாதிடும் சாதிபேதமுடையவர்களா.

உதிரஞ்சிந்தும் உபத்திரவமும், உயிரைக்கொடுத்தும் தேசத்தைக் கைப்பற்றி சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயங்களால் சீர்திருத்தி வருகின்றவர்கள் ஐரோப்பியர்களேயாவர். ஆதலால் தேசத்தை ஆளும் கலைக்ட்டர் உத்தியோகங்களுக்கும் மற்றும் இராஜாங்க அந்தஸ்தான உத்தியோகங்களுக்கும் அவர்களே உரித்தானவர்களும் உடையவர்களுமாவர். மற்றவர்கள் அவர்களை வற்புறுத்திக் கேட்கவும் அதிகாரங்கிடையாவாம். ஓர்கால் ஐரோப்பியர்களை வருத்தியும் வற்புறுத்தியுங் கேட்கும் அதிகாரம் யாருக்குப் பொருந்துமென்னில் தற்காலம் சாதிபேதம் ஏற்படுத்திக்கொண்டு உள்ளவர்களால் பறையர்களென்றும் பஞ்சமர்களென்றும் வலங்கையரென்றும் சாம்பர்களென்றுந் தாழ்த்தப்பட்டுள்ளக் கூட்டத்தோருக்கே பொருந்துமன்றி ஏனையோருக்குப் பொருந்தாவாம்.

எவ்வகையா லென்னில் ஐரோப்பியர்கள் இந்தியதேசம் வந்து இறங்கியது முதல் நாளதுவரையில் அவர்களுக்கு உரியவர்களாக உழைத்து சுகமளித்து வருவதுடன் அவர்களுக்கு நேர்ந்த யுத்தகாலங்களிலும் உரியவர்களாக நின்று உதிரஞ்சிந்தியவர்களும் காடு மலை வனாந்திரங்களில் வழிகளை உண்டு செய்யுங்கால் தங்கள் உதிரஞ்சிந்த உயிர்கொடுத்தவர்களும் தாழ்ந்த சாதியோரென்று வகுக்கப்பட்டுள்ளவர்களே என்பதற்குத் தற்காலமுள்ளக் குயின்ஸ்வோன்ஸ் சாப்பர்ஸ், மைனர்ஸ் என்னும் பட்டாளமே போதுஞ் சான்றாம். ஈதன்றி யுத்தகாலங்களில் காயப்பட்டவர்களையும் பிணியடைந்தவர்களையுஞ் சுகிப்பிப்பதற்கு டிரசர் உத்தியோகங்களையும் அப்பாத்தகிரி உத்தியோகங்களையும் நியமித்தபோது பெரியசாதியென்று சமயவேஷம் போட்டுள்ள யாவரும் பலசாதிகளையுந் தொடப்படாது இரணங்கள் கையிற் படப்படாதெனச் சேராமல் அகன்று நின்ற காலத்தில் தாழ்ந்தசாதியோரென்று வகுக்கப்பெற்றோர்களே பெரும்பாலோர் அவ்வுத்தியோகங்களிற் சேர்ந்து படைகளுடன் சென்று காயப்பட்டவரைக் கார்த்தும், பிணியடைந்தவர்களைத் தீர்த்தும், தங்கள் தங்கள் உதிரஞ்சிந்த உயிர்கொடுத்துள்ளார் என்பதை வைத்தியசாலை உத்தியோகப் பென்ஷன் புத்தகங்களிற் பதிந்துள்ள வாலில்லாப் பெயர்களே போதுஞ்சான்றாம். அவர்கள் ஐரோப்பியர்கள்மீது வைத்துள்ள இராஜ விசுவாசத்தையும் அன்பையும் கண்டுணர்ந்த அக்காலத்திய வைரோப்பியர்கள் அவர்கள் வாசித்த அளவிற்குத்தக்க செருசதார் உத்தியோகங்களையும் தாசில் உத்தியோகங்களையும் ஆனரெரி சர்ஜன் உத்தியோகங்களையும் அளித்து முன்னேற்றி வந்தார்கள். அதுபோலவே நாளது வரையில் அவர்கள் கல்விவிருத்திக்குத்தக்க உத்தியோகங்களை அவர்களுக்களித்து இராஜாங்க வுத்தியோகங்களிற் பெருங்கூட்டத்தோராக சேர்த்திருப்பார்களாயின் தற்காலத் தோன்றிவரும்