பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

472 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நாடெங்கும் பரவுமாயின் அசத்தியர் அதன்மங்களும், அசப்பியர் போதங்களும், துன்மார்க்கர் கூட்டங்களும் நாளுக்குநாள் நசிந்து நற்கீர்த்தியும், நற்சாகமும் பெற்று அவர்களும் குருவிசுவாசம் இராஜவிசுவாசம் இரண்டிலும் நிலைபெறுவார்கள். சகல மக்களுங் குருவிசுவாசத்தில் நிலைக்கவேண்டுமென்னுங் காரணமியாதெனில்: உலகத்திற்கே ஆதி சீர்திருத்தக்காரராகத் தோன்றி உலகரட்சகனென்றும் ஜெகத் குருவென்றும் சங்க அறரென்றும் பெயர்பெற்ற புத்தபிரானால் ஓதியுள்ள ஆதிவேத நீதிபீடத்தை ஆதாரமாகக் கொண்டே அனந்த வேதங்களும் அனந்தமதங்களுந் தோன்றி மாறுகொண்டுள்ளபடியால், நன்மார்க்கத்திற் சென்று, சத்தியத்தில் நிலைத்து, நித்தியாக்கம் பெறவேண்டியவர்கள் உத்தம சற்குருவாம் புத்தரையே விசுவாசிக்க வேண்டுமென்று கூறியுள்ளோம்.

சகல மக்களும் இராஜ விசுவாசத்தில் நிலைக்கவேண்டுமென்னுங் காரணம் யாதென்னில், இந்தியதேசத்துள் இதுகாறும் பிரிட்டிஷ் ராஜரீகம் வந்து நிலைக்காமற்போயிருக்குமாயின் கேடுகெட்ட சாதிபேதத்தால் மக்கள் நாடுகளைவிட்டுக் காடுகளில் ஓடவும், சிறுமீன்களெல்லாம் பெருமீன்களுக்கு இறையென்பதுபோல் வல்லவர் முன்னில் பல்லவர் நசுங்கவும், வீதிகளின்றி கொடிபாதைகொள்ளவும், நகரங்களெங்கும் பகரமற்று ஒழியவும், நாடுகளெங்கும் மாடுகன்று ஒழியவும், உள்ளவர் சொத்தை கள்ளர் கைகொள்ளவும், ஏரிகளின்றி ஊருகள் பாழாகவும், ஓரூரில் தானியம் விளையுமாயின் மறுவருக்கு உதவாமற் போகவும், ஒருவூரில் பஞ்சமுண்டாயின் அத்தேசமே பாழடையவும், ஒருவூரை விட்டு மறுவூருக்குப் போக வேண்டுமாயின் மாடுகள் செத்தும் வண்டிகள் உடைந்தும் மக்கள் திக்கற்றும் தன்னூரைவிட்டு பிறவூர்ச்சென்றவன் சுகாசுகந் தெரியாமலும் நகரங்கள் எங்கும் இருளடைந்து நாடுகளெங்குங் கேடுபாடுற்றும் மக்கள் யாவரும் தங்கவீடின்றியும், படுக்கப் பாயின்றியும், உடுக்க வஸ்திரமின்றியும், குடிக்கக் கூழின்றியும் ஏதோர் சுகமின்றியும் மடிந்தே இருப்பார்கள்

இத்தகையக் கேடடைந்து போகுங்காலத்தில் வித்தையும், புத்தியும். ஈகையும், சன்மார்க்கமும், கருணையும் நிறைந்த பிரிட்டிஷ் ராஜரீகம் வந்து தோன்றி நூதனசாதிபேதக் கோட்பாட்டினால் கெட்டழிந்து வந்த விவசாயங்களும் சாதிபேதக் கோட்பாட்டினால் கெட்டழிந்து வந்த வித்தைகளும் சாதிபேதக் கோட்பாட்டினால் கெட்டழிந்துவந்த ஒற்றுமெகளும் விருத்தி பெறலாயிற்று. நகரங்களெங்கும் மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் உயரலாயிற்று, வீதிகளெங்கும் மேடுபள்ளமின்றி நடக்கலாயிற்று, பாதைகளெங்குந் தீபாலங்கிரதஞ் சொலிக்கலாயிற்று, கலாசாலைகளெங்கும் திறந்து கற்கலாயிற்று. அக்கல்வி கற்றோரெல்லாம் நாகரீகம் பெற்று சுகமுறலாயிற்று, கூரைவீட்டில் வாழ்ந்தோரெல்லாம் மாடமாளிகைக்கட்டி வாழ்க்கை பெறலாயிற்று, பிச்சை இரந்துண்டோ ரெல்லாம் வண்டி குதிரைகளிலேறி உலாவலாயிற்று, சோளச்சோற்றைத் தின்று சுவை தெரியாது இருந்தோரெல்லாம் நெல்லஞ் சோற்றுடன் நெய் பிசைந்து தின்னலாயிற்று, காடா துணிக்கட்டித் திரிந்தோரெல்லாம் மல்லுவேட்டிகளைக் கட்டலாயிற்று, புட்டத்திற்குமேல் கட்டுத் துணியை உடையோர் எல்லாம் நீட்டுக் கோட்டுகளும் பென்டலங்களும் போடலாயிற்று, இட்டலி தோசைத் தின்றோரெல்லாம் ரொட்டி பிஸ்கட் தின்னலாயிற்று, நீச்சத்தண்ணீர் குடித்தோரெல்லாம் காப்பி கோக்கோ குடிக்கலாயிற்று, கட்டைவண்டிகளில் ஏறிப்போவோரெல்லாம் கோச்க வண்டிகளிலும், பீட்டின் வண்டிகளிலும் ஏறலாயிற்று, குளத்துத்தண்ணீர் குட்டைத் தண்ணீர் குடிப்போரெல்லாம் பில்டர் வாட்டர் குடிக்கலாயிற்று, பாசம்பிடித்தச் சொம்பும் பற்றேறியப் பாத்திரங்களை உபயோகித்தவர்களெல்லாம் என்னாமலேட் பிளேட் கிளாஸ்வேர் உபயோகிக்கலாயிற்று, வாழை இலைத் தையலிலையில் புசித்தோரெல்லாம் வெள்ளிக்கிண்ணங்களில் புசிக்கலாயிற்று, தலைமுறை தலைமுறையாகத் தலைகுட்டைக் கட்டாதோரெல்லாம் பெல்ட் காப், இரவுண்ட் காப், மல் தலைகுட்டை, மாவடஞ்சி