பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 483


அவ்வியாபாரங்களில் உண்டாம் சொற்ப லாபங்களைக் கொண்டு ஏழைகளாயுள்ள கூன்குருடு, சப்பாணிகளுக்கு தங்கும் வசதிகள் ஏற்படுத்தி ஊணுமுடையும் அளித்துக் காப்பாற்றியும் வருகின்றார்களாம். இவர்களல்லோ குடிகளைக் காக்கும் கருணையும் பட்சாதாபமும் உடையவர்களாவர். இத்தகையப் பட்சாதாபமும் கருணையுமுண்டாவதற்குக் காரணம் யாதெனில் ஏக பாஷையும் ஏக மதமும் ஏக காருண்யமுமேயாகும்.

இத்தேசத்திலோ பல சாதியும் பல பாஷையும், பல மதமுமாயுள்ளவர்களாதலின் குடிகளை சீர்திருத்தி சுகாதாரமளிக்கும் கமிஷனர்களாகத் தோன்றியும் ஐரோப்பியர்களுக்குள் தோன்றுங்கருணை அரிதாயிருக்கின்றது. காரணமோ சாதிபேதமும் சமயபேதமுமேயாகும். ஒரு சாதியோரைக் கண்டால் மற்றொரு சாதியார் முறுமுறுத்தலும், ஒரு சாதியார் வீட்டில் மற்றொரு சாதியார் புசிக்க அருவெறுத்தலுமாய்ப் பொறாமெச் செயல்களோடு ஒரு மதத்தோரைக் கண்டால் மற்றொருவர் சீறுதலும், மதத்திற்கு மதத்தோர் சண்டையிட்டுக் கோர்ட்டுக் கச்சேரிக்கு ஏறுதலுமாயச் செயல்களே அன்பு ஒற்றுமெய் இரண்டையுங் கெடுத்து தங்களுக்குள் தாங்களே சீர்கெடுவதுடன் தேச சீர்திருத்தத்திற்காக தாங்களெடுக்கும் முயற்சிகளுங் குன்றி சீர்கெடுகின்றது. இத்தேசத்துள் சாதிபேதம் உள்ளளவும் நீதி போதமும், மதபேதமுள்ளளவும் இதபோதமும் மாறுகொண்டே நிற்குமாதலால் கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரே முறிந்து குடிகளின் சுகாதாரத்தை நோக்குவார்களாயின் சகலகுடிகளும் சுகச்சீர் பெற்று ஆனந்தத்தில் நிலைப்பார்கள். காரணமோ வென்னில் பிரிட்டிஷ் ஐரோப்பிய துரை மக்களுக்கு சாதிபேதமுங் கிடையாது, மதபேதமுங் கிடையாது அவர்களால் நடாத்துங் காரியாதிகளோ தன்னவர் அன்னியரென்னும் பட்சபாதமற்றே நிற்கும். ஆதலின் சருவ சீர்திருத்தத் தலைவர்களும் ஐரோப்பியர்களாயிருப்பார்களாயின் சகல சாதி மக்களும் சுகச்சீர் பெற்று வாழ்வார்களென்று நம்புகிறோம்.

- 7:13; செப்டம்பர் 3, 1913 -


300. இந்துக்களென்போர் நடாத்திவரும் இராஜாங்க சம்பந்தக் கூட்டங்கள்

இந்துக்களென்போர் இச்சென்னை ராஜதானியில் தற்காலங்கூடி இராஜாங்க விஷயமாகப் பேசிவருபவற்றுள் இந்திய தேசத்திற்கென்று ஓர் மந்திரி சபை இலண்டனிலிருக்கலாகாது, பார்ளிமென்டோரே அவற்றைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென பேசிவருவது யாது காரணமென விளங்குவதைக் காணோம்.

ஓர் பெருத்த ரதத்தை நடத்துவதாயிலும் அச்சாணி வொன்று இருந்தே தீரல் வேண்டும், பத்து முநிசபில் கமிஷனர்களிருப்பினும் காரியாதிகளை ஆய்ந்து முடிவு செய்ய ஓர் பிரசிடென்ட் இருந்தே தீரவேண்டும், பத்து தாஸில்களும் பத்து முநிஷிப்புகளிலிருந்து ஓர் டிஸ்ட்டிரிக்டை ஆண்டபோதினும், ஓர் கலைக்டர் இராது காரியாதிகள் நிறைவேறாது. அதுபோல் இந்தியாவைப் பல கவர்னர்கள் ஆண்டுவந்தபோதினும் அவரவர்கள் செயல்களை சீர்தூக்கிக் காரியாதிகளை நடத்திவருவதற்கு இங்கிலாண்டில் ஓர் இந்திய மந்திரி சபை இருந்தே தீர வேண்டும் அவ்வகையில்லாவிடில் இந்தியராட்சிய பாரம் ஆப்பிலாச்சகடுபோலும். ஆளனில்லாப் பெண்போலும் நிலையற்றேபோம்.

இந்தியராட்சிய பாரத்தை பார்ளிமென்டாரே தாங்கிக் கொள்வார்கள் என்பது வீண்மொழியேயாம். அதாவது சென்னை ராஜதானி கவர்னரவர்கள் ஆளுகையை லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலர்களே பார்த்துக் கொள்ளுவார்கள் என்பது போலாம்.

இங்கிலாண்டிலுள்ள இந்திய மந்திரியின் கஷ்ட நஷ்டங்களும் பொருப்பும் தங்களுக்குத் தெரிந்திருந்தும் இந்திய மந்திரி சபையை