பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496/ அயோத்திதாசர் சிந்தனைகள்

செய்யும் உழைப்பாளிக்கு நாளொன்றுக்கு என்னக்கூலிக்கொடுக்கிறார்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்கின்றார்களென்றும் விசாரித்து அவர்கள் கஷ்டத்தை நீக்கல் வேண்டும்.

நகரங்களிலுள்ளக் குளங்களிலுங் குட்டைகளிலும் குழாய்களிலும் பாப்பானும் பறையனும் சேர்ந்து நீர்மொள்ளவும் குளிக்கவும் குடிக்கவும் ஏதுக்களிருக்க நாட்டுகளிலுள்ளப் பொதுவாகக் குளங்களிலுங் கிணறுகளிலும் நீர் மொண்டு குடிக்கவும் குளிக்கவும் ஏதுக்களில்லாமற் போவதென்பதை விசாரித்து அவர்களை சுகமடையச் செய்யவும் முயல்வதுடன் சீர்திருத்தத்தில் விவசாயத்திற்கும் வித்தைக்கும் உழைப்பாளிகள் யாவரோ அவர்களைக் கண்டறிந்து முந்த சீர்திருத்தும்படி வேண்டுகிறோம்.

- 7:22; நவம்பர் 5, 1913 -


308. இந்தியதேச சீர்திருத்தப்பற்று இந்தியருக்கு உண்டாமா அன்றேல் வந்தேறியக் குடிகளாம் இந்துக்களுக்குண்டாமா

இந்திய தேசஞ் சிறப்படையவேண்டுமென்னும் பற்றும் மக்கள்யாவரும் சுகமடைய வேண்டுமென்னும் அன்பும் இந்தியர்களுக்கே உண்டாம்.

அதன் காரணமோ வென்னில் அவர்களுக்குள் பாஷை பேதமிருப்பினும் மக்கள் பேதமின்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி ஒருவருக்கொருவர் உபகாரிகளாக விளங்கி வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் நிலைத்து விவசாயத்தை நோக்குவார் உழைப்பிற்கு அஞ்சாது பூமிகளை உழுது பண்படுத்தி தானிய விருத்திசெய்யும் பற்றும், வித்தையை நோக்குவோர் அந்தந்தக் கைத்தொழில்களில் சிற்பமும் நெசிவும் காருகமும் கமகமும் சித்திரமும் மற்றுங்கைத்தொழில் பற்றும், புத்தியை நோக்குவோர் மூலிகை குணாகுணங்களையும் உபரசகுணா குணங்களையும் பாடாண குணாகுணங்களையும் கண்டறிந்து உலகோபகாரமாக எழுதிவைப்பதுடன் நீதி சாஸ்திரம், ஞான சாஸ்திரம், சிற்பசாஸ்திரம், சோதிட சாஸ்திரம், அறிவை விருத்தி செய்யக்கூடியக் கலைக்கியான சாஸ்திரங்களை வரையும் புத்தியின் பற்றும், ஈகையை நோக்குவோர் தனக்குள்ளவற்றை இல்லாத யேனையோருக்குப் பகுந்து கொடுத்து சகல சீவர்களும் சுகசீவிகளாக வாழ்கவேண்டுமென்னும் பற்றும், சன்மார்க்கத்தை நோக்குவோர் நீதியிலும் தொழிலிலும் ஞானத்திலும் நிலைத்து மனோசுத்தம், வாக்குசுத்தம், தேகசுத்தமுடையார்களாகும் சமணர்களாகி மனமாசுகளகற்றி பிறவியை ஜெயித்து தண்மெயடையும் அந்தணர் பிராமணரென்னும் அறஹத்துக்களாகும் நித்தியானந்தப்பற்றும் உடையவர்களாகி யார் எத்தொழிலை செய்யினும் ஒத்த மனமுடையவர்களாய் தேச சிறப்பையும் மக்கள் சுகத்தையுங் கருதுவதுடன் சருவசீவர்கள் சுகத்தையும் நாடி நின்றார்கள்.

அத்தகைய சருவமக்களும் ஒற்றுமெயும் அன்பும் பொருந்தி வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் பற்றுடையவர்களாயிருந்ததற்கு ஆதாரமியாதெனில் “ஆய பொருட்கள் கணத்தி லழியுமென்று தூயவ சோகமுதி யுரைத்த” மலைவு படாவமுதவாக்கியத்துள் க்ஷணத்திற்குச் சணம் காடுகளெல்லாம் நாடாவதும் நாடுகளெல்லாங் காடாவதும் பெருங்குடும்பத்தோன் சிறுங் குடும்பமாவதும் சிறுங் குடும்பத்தோன் பெருங்குடும்பமாவதும் தனவான் ஏழையாவதும் ஏழை தனவானாவதும் உயர்ந்தோலெல்லாம் தாழ்வதும் தாழ்ந்தோரெல்லாம் உயர்வதும் உருசியும் பரிமளமாக உண்ட பொருள் யாவும் துற்கந்தமாக வெளிவருதலும் துற்கந்தமாக வெளிவந்த பொருளால் நற்கந்தப் பொருள் தோன்றுவதுமாய பொருட்கள் யாவும் அநித்தியமென்றும் அவ்வனித்தியத்தினின்று நீங்கள் நித்தியர்களாகவும், அத்துக்கத்தினின்று நீங்கி சதா சுகம் பெறவேண்டுமாயின் சருவ சீவர்களுக்கும் உபகாரிகளாக விளங்குங்கள் உங்கள் நற்கிருத்திய செயல்களே உங்களை நற்சுக வழிக்கு கொண்டுபோகும். உங்கள் துற்கிருத்தியச் செயல்களே உங்களை மிக்கத் துக்க வழியிற் கொண்டுபோய் விடுமென்று போதித்துள்ள புத்த தன்மமாம் சத்திய