பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

498 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கூழுக்குமின்றி கோலுங் குடுவையும் எலும்புந் தோலுமாகி சுத்த நீரை மொண்டு குடிக்ககூடாத சுவாதீனமற்று, சகலராலுந் தீண்டக்கூடாதவர்கள் தீண்டக் கூடாதவர்களென்னுமிழிவு பெற்று நாணமுற்றலைவதே போதுஞ் சான்றன்றோ.

ஒரு தேசத்தில் பிச்சை இரந்துண்டே குடியேறி பெரிய சாதியோராகப் பிரபல முற்று சகல சுவாதீனர்போல் விளங்குங்கால், கூலிவேலை செய்துக் கொண்டே குடியேறியவர்கள் சற்று வலுத்து விடுவார்களாயின் இராஜாங்கத்தோருக்கும் அத்தேசத்திற்கும் ஏதே தீங்குண்டாமோ என்னும் அச்சமுண்டாமன்றோ, பெருத்தவோர் இராட்சிய பாரத்தைத் தாங்கி நிற்கும் அரசர்களுக்கும் மந்திரிவாதிகளுக்கும் உலக சரித்திரம் தெரியாதோ, தெரிந்தோரேயாவர். அந்தந்த தேச சரித்திரங்களையும் அந்தந்த தேச மக்களது குணாகுணங்களையுஞ் செயல்களையும் நன்கறிந்தோராதலின் தங்கள் தேசத்தையும் தேச மக்களையும் சீர்திருத்தி எக்காலும் சுகம்பெற்றுய்யும் வழிவகைகளைத் தேடிக்கொள்ளுகின்றார்கள்.

அத்தகைய ராஜாங்க சீர்திருத்த சட்டதிட்டங்களை நீங்கள் எதிர்க்காது அவைகளுக்கடங்கி இராஜவிசுவாசமுற்று உங்கள் தொழில்களை நடாத்தி வருவீர்களாயின் அவ்விராஜாங்கத்தோர்களைக் கொண்டே நீங்கள் சகல சுகமும் பெற்று ஆனந்த வாழ்க்கை அடைவீர்கள். இராஜாங்கத்தை எதிர்ப்போர் கூட்டுரவிலும் தனியுரவிலும் நீங்கள் சேராது குரு விசுவாசத்திலும் இராஜ விசுவாசத்திலும் நீதி நெறி ஒழுக்கத்திலும் நிலைத்திருப்பீர்களாயின் துக்கமென்பதற்று சுகவாழ்க்கைப் பெறுவீர்களென்பது திண்ணம் திண்ணமேயாம்.

- 7:24: நவம்பர் 19, 1913 -


310. நமது இந்தியதேசச் சக்கிரவர்த்திப் பிரிதிநிதியார் வருகையின் ஆனந்தத்தில் படுபாவிகளின் பயமுமுண்டோ

பூர்வகாலத்தில் இந்திய மக்கள் யாவரும் தங்களரசன் எப்போது வீதிவலம் வருவரோ என்னும் இராஜவிசுவாசமும் அன்புங்கொண்டு எதிர்நோக்கி பலரது திருஷ்டியால் அவருக்கேதேனும் சோகம் உண்டாம் என்றெண்ணி கற்பூரம் உலார்த்தி ஏந்தி கனகமலர் தூவிக்கர்த்தனே வாழ்க, வாழ்கவென்று ஆசிகூறி ஆனந்தமுற்றிருந்ததாக பெளத்த சரித்திரங்கள் கூறுகின்றது.

இத்தகைய ராஜவிசுவாசமும் அன்பும் நிறைந்திருந்த தேசத்தில் இராஜதுரோகிகளும் வஞ்சகர்களும் கொடுங்செயல் குடிகொண்டுள்ள படுபாவிகளும் எங்கிருந்து வந்து சேர்ந்துள்ளார்களோ என்பது விளங்கவில்லை. நமது சக்கிரவர்த்தியார் பிரிதிநிதியின் வருகைக்கு ஒரு பால் ஆனந்தமும் ஒரு பால் பயமுமே யிருந்ததாக நமது போலீசதிகாரிகளால் விளங்குகின்றது. அவை யாதென்னிலோ பிரிதிநிதியாய வரசன் ஆனந்தமாக வந்தபோதினும் கருணை என்பதற்று கொடுஞ்செயலே குடிகொண்டுள்ள படும்பாவிகள் எவரேனுமிருப்பார்களென்னும் பீதியால் நமது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் போலீஸ் கமிஷனர் முதல் ஈராகவுள்ள கான்ஸ்டேபில்கள் வரையிலும் இரவும் பகலும் நித்திரையின்றியும் தங்குமிடமின்றியும் தங்கள் காவலை அதிவூக்கத்துடன் நடாத்தி வந்திருக்கின்றார்கள்.

இத்தியாதி ஜாக்கிரதைக்கும் ஊக்கத்திற்குங் கஷ்டத்திற்கும் படுபாவிகளே காரணமாவர். அப்படுபாவிகளைக் கண்டு பிடித்துப் படுசூரணஞ் செய்விக்க ஏதுவாய பெரியோர்களாம் ஆரூடக்கியானிகள் எங்கும் இல்லையா, அத்தகைய ஆரூடஞானிகளாம் மேலோர்களில்லை என்பதாயினும் கால்பாக நல்லோர்கள் அரைபாக நல்லோர்களாயினும் இராமற் போயினரோ? இருப்பராயின் இவ்விராஜ துரோகிகளாம் படுபாவிகளை கண்டுபிடிக்க வியலாதோ. இயலுமாயினும் அத்தகைய வன்னெஞ்சரிருப்பார்களாயின் ராஜாங்கத் தோர் பயந்துகொண்டே நாம் கேட்கும் அதிகாரவுத்தியோகங்கள் யாவையும் நமக்குக் கொடுப்பார்கள் அல்லாவிடில் கொடமாட்டார்களென்றெண்ணி பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழனுமாக விருக்கின்றனரோ. அவ்வகையிருப்பராயின் இவர்களையும்