பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 499

அந்தரங்க வன்னெஞ்சப்படும் பாவிகளென்று எண்ணற்கு இடமில்லாமற்போமோ, அவ்வன்னெஞ்சமே அவரவர்களுக்கு சாட்சியாயிருந்து வஞ்சித்தே தீரும். உப்பிருந்த பாண்டமும் உளவிருந்த நெஞ்சமுந் தட்டி உடையாமல் தானே உடையுங்காலம் வந்துபோம். அக்காலத்தில் இராஜ துரோகிகள் படுங் கஷ்டங்களுடன் அந்தரங்கவுளவாளிகளும் அன்னோர் வரிசையாளரும் அர்த்தநாசமடைவார்கள் என்பதே திண்ணம்.

அத்தகைய நாசகாலம் வருவதற்குமுன்பே இராஜதுரோகிகளாம் படுபாவிகளைக் காட்டிக்கொடுப்பதே அழகாம்.

ஒரு கிராமத்தில் ஓர் கள்ளனிருப்பானாயின் அக்கிராம அதிகாரிக்கு கிராமக்குடிகள் யாவரைங் அநுமானிக்க இடம் உண்டாகும். அக்கிராமக் குடிகள் யாவரும் கூடி அக்கள்ளனைப் பிடித்தே கொடுத்துவிடுவார்களாயின் கிராமக்குடிகள் மீதுள்ள அநுமானிப்பு ஒழிந்து கவலையற்றிருப்பார்கள். அது போல் தேசத்திலுள்ள இராஜ துரோகிகளை அத்தேசக்குடிகளே பிடித்துக் கொடுத்து விடுவார்களாயின் தேசம் ஆறுதலடைவதுடன் தேச மக்களும் ஆனந்த சுகவாழ்க்கை பெற்று அரசரைக் கேட்கும் அலுவலையும் அடைந்து பெருவாழ்வுற்றிருப்பார்கள். அங்ஙனமின்றி ராஜத் துரோகிகளும் இருத்தல் வேண்டும். தாங்களும் பெரிய பெரிய உத்தியோக அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும் என்னும் விரோதச் சிந்தையையே வளர்த்துக் கொண்டிருப்பார்களாயின் மாளா துக்கத்திற்கே ஏதுவாவதுடன், பிரிட்டிஷ் ஆட்சி சரிவர நிலை கொள்ளுமாறு அதிகார உத்தியோகங்கள் யாவற்றிற்கும் ஐரோப்பிய துரைமக்களே இருந்து ஆட்சிபுரிவதற்கு இடமுண்டாகிப்போம். அத்தகைய செயலின்றி தேசத்தோரும் சுகம்பெற்றுய்ய வேண்டுமென்னும் இராஜ விசுவாசிகள், இராஜ துரோகிகளைக் காட்டிக்கொடுப்பார்களென்று நம்புகிறோம்.

இராஜாங்கத்தோர்க்கு மனக்கவலையும் குடிகளுக்கு பயமும் மிகுத்துள்ள தேசம் எக்காலுஞ் சீர்பெறாவாம்.

- 7:26; டிசம்பர் 3, 1913 -


311. சௌத் ஆபிரிக்காவிலிருக்கும் இந்தியர்களுக்கு இத்தேசத்தோர்படும் பரிதாபம் அன்புமிகுத்தப் பரிதாபந்தானோ ஆராய்வோமாக

இவ்விடமிருந்து செளத்தாபிரிக்காவுக்குப் போனவர்கள் யாவரும் சீவனத்தை நாடி கூலியாட்களாகப் போனவர்களே அன்றி உத்தியோகமுறையால் அழைக்கப் பெற்றவர்கள் அன்றாம். அத்தேசத்தோர் கடினமாய் வேலை வாங்குவார்களாயின் அங்குள்ள மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துக் கொள்ளவேண்டியதே அவற்றிற்குப் பரிகாரம். அவர்களுங் கேளாவிடிலோ அவ்விடம் விட்டு வேறிடம் அகலவேண்டியதே முடிவாம். அவைகளின்றி அத்தேசமே போதிய சுகத்திற்கு ஆதாரமாயிருக்கின்றதென்று எண்ணி அவ்விடமே நிலையாயுள்ளவர்களுக்கு அதிகமாய வரிகளை விதித்திருப்பார்களாயின் அவற்றை செலுத்தக்கூடிய அந்தஸ்துள்ளவர்கள் செலுத்தியும் அவ்வரியை செலுத்தக் கூடாத ஏழைகள் தங்கள் வருமானங்களை மேலதிகாரிகளுக்கு விளக்கி அவ்வரியைக் குறைக்கும் வழியைத் தேடிக் கொள்ளல் வேண்டும். அவைகளையும் அவர்களேற்றுக் கொள்ளாவிடில் அத்தேசத்தைவிட்டு நீங்கவேண்டியதே அதற்குப் பரிகாரம்.

அத்தேசத்தார் உலாவுமிடங்களிலும் நடக்கும் பாதைகளிலும் அவர்களை நடக்கக்கூடாது என்றாலோ, இவர்கள் உலாவுதற்கும் இடமும் நடக்கும் பாதையும் வேறு தேடிக்கொள்ள வேண்டியதேயாம். அதுவும் கிடைக்காவிடில் உள்ளயிடமே போதுமென்று சுகிக்க வேண்டியதே அழகாம்.

இத்தியாதி சுருக்க ஏதுக்களை தேடாமலும் இராஜாங்கத்தோர் நூதனமாக ஏற்படுத்திய சட்டங்களின் உட்கருத்துயாதென்று அறியாமலும் அவரவர்கள் மனம் போனவாறு இரண்டொரு வாசித்தவர்கள் எழும்பி