பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மெம்பர்கள் என்னும் ஐந்தாறு விவேக புருஷர்கள் உழ்க்கார்ந்துகொண்டு முடிவு செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு உபபலமாக அந்தந்த ஜில்லாக்களில் அடைந்துவருங் கஷ்ட நஷ்டங்களை ஆய்ந்து தெரிவித்து மற்றுஞ் சட்டங்களைப் புதுப்பிப்பதற்கும் குறைப்பதற்கும் லெஜிஸ்லேடிவ் மெம்பர்களென்னும் அறுபது எழுபது விவேக புருஷர்கள் நியமனம் பெற்றிருக்கின்றார்கள் அவர்கள் யாவரையும் புறம்பே அகற்றிவிட்டு இவர்கள் மனம் போனவாறு இரண்டு மூன்றுபேர் முனைந்து பெருங் கூட்டங்களைக் கூட்டி அவற்றுள் இராஜாங்க சட்டத்தை யோசிப்பதற்கும் இராஜாங்க ஆலாசினைகளை ஆய்வதற்கும் இவர்களுக்கு அதிகாரங் கொடுத்தவர்கள் யார். சகல சாதியோரையும் பொதுவாக சீர்திருத்தும் ஆலோசனை சங்கத்தோர்கள் என்பார்களாயின் இத்தேசத்துள் ஆறுகோடி மக்கள் அல்லலடைகின்றார்களே, அவதியுறுகின்றார்களே, கொடிய துன்பங்களுற்றுக் கண்கலங்குகின்றார்களே, பசியாலும் பிணியாலும் பாழடைந்து மடிகின்றார்களே, அப்பெருந்தொகையோருள் யாவரேனும் இக்கூட்டத்தோரை ஆமோதித்துள்ளரோ ஒருவரும் கிடையாவே. சாதித் தலைவர்களில் சிற்சிலர் கூடிக்கொண்டு அவர்களுக்கு பிரியம் போன்ற சாதியுள்ளோர்களை சேர்த்துக்கொண்டு நாங்களுமோர் பொது சீர்திருத்தக் கூட்டத்தோர்களென்பதை யார் ஒப்புக்கொள்ளுவார்கள். இத்தகைய சொற்பமாயக் கூட்டத்தோர் இராஜாங்க சட்டதிட்டங்களை நோக்குவதற்கும் இராஜாங்க பல விஷயங்களை ஆய்வதற்கும் அதிகாரங் கொடுத்தவர்கள் யார். இவர்கள் கூடி செய்துவருஞ் செய்கைகளாலும் பேசிவரும் வார்த்தைகளாலும் குடிகளுக்கேதேனுங் கேடு விளைந்துவிடுமாயின் அவற்றிற்கு உத்திரவாதிகள் யார் அப்போதேனும் முன்வருவார்களோ, வரவேமாட்டார்கள். சகல சாதியோரையும் பொதுவாக பாவிக்காத கூட்டத்தோர் கூடுவதும் பேசுவதும் பெருங் கூட்டத்தோருக்கே கேட்டை உண்டு செய்து விடுமாதலால் கருணை தங்கிய ராஜாங்கத்தார் சற்று கண்ணோக்கி இத்தகையக் கூட்டத்தோர் கூடுவதையும் இராஜாங்க சங்கதிகளை எடுத்துப்பேசுவதையும் தடுத்து தங்களாளுகையில் சகலசாதி மக்களும் முன்னேறும் வழிவகைகளை செய்விக்க வேண்டுகிறோம்.

- 7:32: ஜனவரி 14, 1914 -


316. தேசசிறப்பையும் மக்கள் சுகத்தையும் நோக்காத கூட்டமும் பொதுநலக் கூட்டமாமோ

உலகமக்கள் யாவரும் புகழுதற்கு ஏதுவாகவும் சகலகலைக்கும் பீடமாகவும் சகல கலைக்கியானங்களுக்கும் ஆதாரமாகவும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கமென்னும் மக்களது விருத்திக்கு ஏதுவாகவும் சிறப்புற்றிருந்த இந்திய தேசமானது, இந்துக்களென்னும் சாதிப்பிரிவின் கூட்டங்களும் மதப்பிரிவின் கோஷ்டங்களும் நூதனமாக வந்து தோன்றியது முதல் சகலகலை இடங்களும் அழிந்து கலைக்கியானங்களும் ஒழிந்து வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கங்களும் அழிந்து நாளுக்குநாள் பெருகிவந்த ஒற்றுமெய்க் கேட்டினால் பஞ்சமும் பெருவாரி நோய்களுந் தோன்றி அங்கங்கு வாசஞ்செய்த மக்கள் அந்தந்த இடங்களில் மடிந்து நாசமடையவும், மாட மாளிகைக் கூட கோபுரங்கள் யாவும் திருத்துவாரின்றி இடிந்து மண்ணுள் மறையவும், நாடுகள் யாவுங் காடுகளாகவும் நகரங்கள் யாவிலும் அரசற்றுப் போகவும், மக்கள் யாவரும் நிலைகுலைந்து சீரழிந்து கட்டத்துணிக்கும் குடிக்கக் கஞ்சிக்கும் இன்றி அல்லோகல்லோமடைந்து அவதியுற்றுவரவும், இவற்றுள் சாதி பேதத்தையும் மத பேதத்தையும் உண்டு செய்துக் கொண்டு சாதித் தலைவர்களாகினோர் மதபேதத்தால் வயிறு பிழைத்து வந்தவர்களும் அதிகாரத்தோடு பிச்சை இறந்துண்டவர்கள் மட்டிலும் தங்கள் சுகத்தைப் பெருக்கிக்கொண்டே ஏனையோர்கள் யாவரையும் தங்களுக்கு உள்ளடக்கிப் பாழ்படுத்தி வந்ததுமன்றி தங்களுக்கு எதிரிகளாயிருந்த இத்தேசப்பூர்வக்குடிகள்