பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 / அயோத்திதாசர் சிந்தனைகள்


தாங்களுங்கெட்டு தங்கள் அரசாங்கத்திற்கும் பழுதுண்டாகி குடிகளுக்கும் விரோதிகளாவார்.

காரணம் தங்களுடைய சுயப்பிரயோசனங் கருதி நூறு குடிகளைக் கெடுக்கும் மிலேச்சர்களுக்கு மேலான உத்தியோகங் கொடுத்து அவர்கள் சொல்லும் வார்த்தைகளை மெய்யென நம்பிக் குடிகளுக்கு வரி இறைகளை அதிகப்படுத்துவதால் ஏழைகுடிகள் தாங்கலாது தவித்து இல்லாதப் பொல்லாதவர்களாகின்றார்கள்.

இவ்வகையில்லாதக் குடிகளை சொல்லாது வாதிப்பது பசுவின் பாலை தினேதினே ஆகாரமூட்டி மெல்லமெல்ல கரப்பதைவிட்டு பசுவின் மடியை அறுத்துவிடுவதொக்கும்.

நீதி நூல்

குடிக்கொன் றிறைகொள்ளும் கோமகற்குற் கற்றா.
மடிகொன்று பால் கொள்ளு மாண்பே-குடியோம்பிக்
கொள்ளுமா கொன்வோர்க்குக் காண்டுமே மாநிதியம்
வெள்ளத்தின் மேலும் பல.

ஆதலின் வீணர்களும் சோம்பேரிகளும் பொய்யர்களுமாகிய ஓர் கூட்டத்தார் போதனைக்கு இணங்காமல் குடிகளுக்கு உண்டாகுங் கஷ்டநிஷ்டூரங்களையும் வரி யிறைகளையும் அரசர்கள் நேரிற்கண்டு விசாரித்து குறைகளை அகற்றிக் கொள்ளலைக் கொள்வாராயின் குடிகளும் குதூகலிப்பர்.

அத்தகைய அரசரருள் பெற்று வாழுங்குடிகள் ஒழுகவேண்டிய ஒழுக்கங்கள் யாதெனில்:

அரசன் விரும்பிச் செய்தலைத் தாங்களும் விரும்பிச்செய்தலும் அரசன் புகழ்ந்து நிற்போரைத் தாங்களும் புகழ்தலும் அரசனிகழ்ந்து நிற்றலை தாங்களிகழ்ந்துநிற்றலுமாகியச் செயல் பற்றல் வேண்டும்.

நீதி நூல்

இகழினிகழ்ந்தாங் கிறைமகனொன்று / புகழினி மொக்கப் புகழ்ப - விகன் மன்னன்
சீர்வழிபட்டதே மன்பதை மற்றென்செயு / நீர்வழிபட்ட புணை.

அரசன் ஒழுக்கத்தைப் பின்பற்றியக் குடிகளும், குடிகள் அன்பின் பெருக்கை நோக்கிய அரசனும் என்றும் குறைவில்லா நீர்வளம் நிலவளம் ஓங்கி சுகவாழ்க்கைப் பெருவார்கள்.

ஒருவன் சொல்லுவது மெய்யா அல்லது பொய்யாவென்று உணராமலும் மற்ற விவேகிகளை அடுத்து விசாரியாமலும் ஊரார் வளர்த்தக் கோழிகள் யாவற்றையும் அடித்துக் குப்பல் போட்டதுபோல் ஒவ்வொருவர் சொல்லும் பொய் வார்த்தைகளை நம்பிக் கொண்டு அரசாங்கத்தை விரோதிப்பதினால் அடியோடு கேடுண்டாய் அல்லலடைவது அவசியமாகும்.

இத்தகைய விரோதங்களை உண்டு செய்பவர்கள் யாரென்று உணர்ந்து அவர்கள் கூட்டத்தை விட்டகல்வது விவேகிகளின் கடனாம்.

அரசாங்கத்தை கெடுக்க முயலும் அறிவிலிகளின் குணாகுணங்களை அறிந்த அரசர்கள் அவர்களுக்குள்ள செறுக்கை அழிக்க முயலுங்கால் கெடுகுடிகள் தங்களுடன் ஏழை எளியோர்களையுஞ் சேர்த்துக்கொண்டு அவர்களையுங் கெடுக்க முயல்வார்கள்.

அவ்வகைக் கேடர்கள் வார்த்தையை சீடர்கள் போல் நம்புவதினால் இரும்பை அடிக்குமடி மரத்திற்குத் தாங்கி மண்ணாகுமென்பது திண்ணம்.

அரசனென்னுந் திரியோதனனை சுவாமியென்னுங் கிருஷ்ணன் எதிர்த்துப் பட்டப்பாட்டையுங் கெட்டகேட்டையுங் கதையாய்ப் படித்தவர்களறிய வேண்டியது அவசியமாகும். அதாவது,

அரசனை எதிர்த்த சுவாமிகளுக்கே அவ்வளவு அவதினேரிட்டிருக்க அரசை எதிர்த்தக் குடிகளுக்கு எத்தகயக் கேடுண்டாமென்பது சொல்லாமலே விளங்கும்.

அரசரை எதிர்ப்பதால் குடிகளுக்கவதியும் குடிகளை எதிர்ப்பதால் அரசருக்கு ஆற்றலில்லாமெயுமாம்.