பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522 / அயோத்திதாசர் சிந்தனைகள்

துக்கமொன்று, பிணியினாலாய துக்கமொன்று, மூப்பினாலாய துக்கமொன்று, மரணத்தினாலாய துக்கமொன்று ஆக இன்னான்கு வகை துக்கங்களே பெருகி நிற்கின்றதென்று கண்டு அவ்வகை துக்கங்களுக்கும் பீடங்கள் எவை எவையெனக்கண்டு அவற்றை நீக்கிக்கொள்ளும் வழிவகைகளை உய்த்துணர்ந்து பிறப்பிற்கு மூலம் அவாவென்றும், பிணிக்குமூலம் துற்செயலென்றும் மூப்பிற்கு மூலம் மூச்சினது விரிவும் மனத்தினது விரிவென்றும், மரணத்திற்கு மூலம் மனமாசு மூடுதலேயென்று கண்டுணர்ந்து, அவாவை அறுக்குஞ் சாதனங்களையும் துற்செயலை அகற்றுஞ் சாதனங்களையும் மூச்சு மனமும் விரியாமல் ஒடுங்குஞ் சாதனங்களையும் மனமாசுகளை முற்றும் அறுக்குஞ் சாதனங்களையும் இடைவிடாது சாதித்து மனமணியாம் சுயஞ்சோதியைத் தன்னிற்றானே கண்டு பற்றற்ற நிருவாண நிலையடைந்த போது மனிதனென்னும் பெயரற்று தெய்வமென்னும் பெயர் பெற்று ஏழாவது தோற்றம் உண்டாகி பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடென்னும் நான்கு வகையாய துக்கங்களும் ஒழிந்து சாதானந்தத்தினின்றபோது உலகத்திலுள்ள சருவ சீவர்களுக்கும் உதவியாகும் நல்லோனாகி உயர்ந்தோர் மாட்டே உலகென விளங்கி உலகமுடிவை நோக்கி பரிநிருவாணமுற்று அகண்டத்துலாவுவன். நிருவாணமுற்று பற்றறுத்து உள்ளோரையே தேவரென்றுங் கடவுளரென்றும், ஈசனென்றும், பகவனென்றும், பாரா அபரமென்றுங் கொண்டாடுவர். இன்னிலையே தேச சிறப்பிற்கு நான்காம் படியாகும், இப்படி துறையறிந்து பாடுபடுந் தேசமே சிறப்படைவதுடன் மனித கூட்டங்களும் சுகச்சீர் பெற்ற வாழ்க்கையோடு நித்தியானந்த சுகவாரி நிலையையுமடைவார்கள் இதுவே சத்தியதன்ம சீர்திருத்தமாகும். இவற்றிற்கு மாறுபட்டச் செயல்கள் யாவும் அசத்திய கேட்டுக்காயவழிகளேயாம். மனித கூட்டங்களில் பாசபந்த பற்றுக்களிற் சிக்கி மாளாபிறவியுற்று தீராதுக்கத்தில் உழன்று வருவோரை உலகத்தோரென்றும் பாசபந்த பற்றுக்களற்று பிறவியை செயித்து சதானந்தத்தில் நிற்போரை உலக முடிந்தோரென்றுங் கூறப்படும். இத்தகைய உலக முடிவடைதற்கு வித்தை புத்தி யீகை சன்மார்க்கமே காரணமாதலின் ஒவ்வோர் சீர்திருத்தக்காரரும் தேச சிறப்பையும் மனிதகூட்டங்களின் சுகத்தையுங் கருதி உழைக்க வேண்டியதே அழகாம்.

- 7:45; ஏப்ரல் 15, 1914 -


324. கருணைதங்கிய இராஜாங்கத்தார் மோட்டார் விபத்துக்களை நீக்கி ஆதரித்தல் வேண்டும்

இச்சென்னையின்கண் வாழும் ஐரோப்பிய துரைமக்கள் இரண்டு பக்கமும் வீடுகளடர்ந்துள்ள வீதிகளில் தங்கள் குதிரை வண்டிகளிலேறி வீதிவலம் போகுங்கால் வண்டிகளை மெதுவிலோட்டச் சொல்லுவதுமன்றி தங்கட் குதிரைக்காரன் ஒருவனை இறங்கி முன்னோடச்செய்யும் வழக்கத்தை நாளதுவரையில் காண்கின்றோம். அவ்வகையாக ஏன் ஓடச்செய்கின்றார்கள் என்னில் இரண்டுபக்கம் வீடுகள் நிறைந்துள்ள வழியில் ஒரு வீட்டை விட்டு மறுவீட்டுக்கு சிறுபிள்ளைகள் ஓடுவதும் ஆடுவதும் இயல்பாம். பெரியோர்களில் தள்ளாடு விருத்தாப்பியரும் கண்பார்வையற்றவர்களும் காது கேளாதவர்களும், பிணியாளர்களும் அவ்வீதியில் நடப்பதியல்பாம். அவற்றைக் கண்டு தெரிந்துள்ள துரைமக்கள் தங்கள் வண்டிகளால் அத்தகைய மனுக்களுக்கு ஏதேனும் ஆபத்துண்டாமென்று எண்ணியே முன் ஜாக்கிரதையுடன் உலாவி வருகின்றார்கள். அத்தகைய அன்புங் கருணையும் இத்தேசப் பிரபுக்களுக்குக் கனவிலுங் கிடையாவாம். மற்றும் ஐரோப்பியருக்குள்ள தேகதிடமும் மனோதிடமும் சமய ஜாக்கிரதையும் இத்தேசத்தோருக்குக் கிடையாது. இதுகொண்டு மோட்டார்கார் விஷயத்தை சற்று ஆலோசிக்க வேண்டியதேயாம் மனிதன் கைக்குள் அடக்கியாளக்கூடிய மாட்டுவண்டியேனுங் குதிரை வண்டியேனும் மிரண்டோட வாரம்பிக்குமாயின் ஒட்டுவோன் அதை அடக்கியாள்வதற்கு இயலாது அவன் துன்பத்தை